கொரோனா.. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனத்தின் 'அந்த' கருத்து.. கொதித்தெழுந்த அமெரிக்கா
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பிரச்சனையில் உலக சுகாதார நிறுவனம் சீனா பக்கம் சாய்ந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 82756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1194 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் தான் சீனா உள்ளது. அங்கு 81299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3287 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான், சுவிட்சர்லாந்து, ஜப்பான், மலேசியா, சவுதி அரேபியா, என பலநாடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு உயிரிழப்புகளும் வேகமாக அதிகரித்து வருகிறது. சீனாவில் தொடங்கி 195 நாடுகளுக்கு கொரோனா பரவி உள்ளது.
அமெரிக்கா கொதிப்பு
இந்த சூழலில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் கெப்ரேய்சஸ் "புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உருவான போது அதை முடிவுக்கு கொண்டுவருவதில் சீனா உறுதியுடன் செயல்பட்டது என்று கூறினார். இவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உலகமே செத்துக்கொண்டிருக்கும் போது உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இப்படி பேசியிருப்பது அமெரிக்காவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க எம்பிக்கள் கோபம்
இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவுக்கு "ஆதரவாக செயல்படுவதாக குடியரசுக் கட்சியின் செனட்டர் மார்கோ ரூபியோ குற்றம்சாட்டிருந்ததார். இதே கருத்தையே அமெரிக்க நாடாளுமன்ற பிரநிதிகள் சபையின் உறுப்பினரும், அதன் வெளியுறவுத்துறை மூத்த உறுப்பினருமான மைக்கேல் மெக்காலும் இதே கருத்தையே முன்வைத்தார்.
டிரம்ப் குற்றச்சாட்டு
இரு எம்பிக்களின் குற்றச்சாட்டுகளை ஆதரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " உலக சுகாதார நிறுவனம் சீனாவின் பக்கம் மிகவும் சாய்ந்துவிட்டது. இதில் ஏராளமான மக்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் மிகவும் நியாயமில்லாமல் நடந்து கொள்வதாக பேச்சுகள் எழுந்துள்ளது. மக்கள் உலக சுகாதார நிறுவனம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று உணர்கிறார்கள்' என்றார்.
விளைவுகள் உண்டு
இதற்கிடையே கிரேக் ஸ்டியூப் என்ற அமெரிக்க எம்பி, உலக சுகாதார நிறுவனம் சீனாவின் ஊதுகுழலாக மாறிவிட்டது. கொரோன வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இதற்கான விளைவுகளை சந்தித்தாக வேண்டும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் மற்றொரு எம்பி ஜோஷ் ஹாலேயும் இதேபோன்றே பேசியுள்ளார். இந்த கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் மொத்தமாக சாய்ந்துவிட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கொதிக்க காரணம்
அமெரிக்கா மொத்தமும் இப்படி கொந்தளிக்க காரணம் அங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சமூக பேரழிவை ஏற்படுத்தி வருகிறது ஆரம்பித்திலேயே சீனா அலட்சியம் காட்டாமல் உலக நாடுகளை இந்த விஷயத்தில் எச்சரித்து தனது நாட்டு மக்களை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து இருந்தால் இப்பிரச்சனை சீனாவுடன் முடிந்திருக்கும். அப்படியும் இல்லாவிட்டால் சீனா உலக நாடுகள் அனைத்தையும் உடனடியாக எச்சரித்து உஷார் படுத்தி இருந்தாலும் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்பது தான் அமெரிக்க மக்களின் எண்ணமாக உள்ளது.