காடு, மலை கடந்து.. உயிரை பணயம் வைத்து அமெரிக்காவில் நுழையும் இந்தியர்கள் அதிகரிப்பு.. ஏன்?
வாஷிங்டன்: சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதற்காக 272 பெண்கள் மற்றும் 591 மைனர்கள் உட்பட 7,720 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் 2019 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறது அதிகாரப்பூர்வ புள்ளி விவரம். சமீப காலங்களில் இவை உச்சம் தொட்டுள்ளது ஆபத்தான அறிகுறி.
அமெரிக்காவில் சட்ட விரோதமாகவாவது குடியேற இந்தியர்கள் நினைப்பது ஏன்? எந்த வழிகளை கையாளுகிறார்கள்? அதிர வைக்கும் அந்த தகவல்களை பாருங்கள்:
2019 நிதியாண்டில் (அக்டோபர் 2018-செப்டம்பர் 2019) மொத்தம் 851,508 பேர் கைது செய்யப்பட்டனர். இது முந்தைய நிதியாண்டை விட 115 சதவீதம் அதிகம் என்றால் நம்ப முடிகிறதா? அது மட்டுமல்ல, கடந்த 12 ஆண்டுகளில் இதுதான் மிக அதிகப்படியான கைது நடவடிக்கை என்று பிடிஐ செய்தி ஏஜென்சியிடம், விவரித்துள்ளார், வட அமெரிக்க பஞ்சாபி சங்கத்தின் (நாபா) நிர்வாக இயக்குநர் சத்னம் சிங் சாஹல்.
சிறுவர்கள்
அமெரிக்க எல்லை மற்றும் கஸ்டம் பாதுகாப்பு துறை, 2019 நிதியாண்டில் 272 பெண்கள் மற்றும் 591 சிறுவர்கள் உட்பட 7,720 இந்திய வம்சாவளியினரை கைது செய்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாபா தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், 4,620 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இது 2014ல் 1,663 ஆகவும், 2015 ல் 3,091 ஆகவும், 2016 ல் 3,544 ஆகவும் இருந்தது. "அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் அமெரிக்க எல்லைகளில் கைது செய்யப்படுவது மிகுந்த கவலைக்குரிய விஷயம்" என்கிறார் சாஹல். எங்கிருந்து இப்படி சட்ட விரோதமாக நுழைகிறார்கள், எந்த இடம் இவர்களின் இலக்கு என பார்த்தால், அமெரிக்க-மெக்ஸிகோ எல்லை மற்றும் துறைமுகங்கள் வழியாகத்தான் இப்படி சட்ட விரோத குடியேற்றம் அதிகம் நிகழ்ந்துள்ளது.
காம்ரேட் இன் அமெரிக்கா படம் போல
மெக்ஸிகோ பார்டர் இப்படியான நிகழ்வுகளுக்கு சாட்சியாக மாறிவிட்டதால்தான், சுவர் எழுப்ப போவதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அந்த பகுதியில் 48 முறை இந்தியர்கள் பிடிபட்டுள்ளனராம். 330 சம்பவங்கள் துறைமுகங்களில் பதிவாகியுள்ளன. படகுகள் மூலம் மட்டுமில்லை, சாலைகள், நடைபாதைகள், ரயில்கள் மூலமாகவும், அமெரிக்க எல்லைக்குள், இந்திய வம்சாவளியினர் நுழைந்து செல்கிறார்கள். அமல் நீரத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான, 'காம்ரேட் இன் அமெரிக்கா' திரைப்படத்தின் காட்சிகளை அப்படியே நினைவுபடுத்தும் சம்பவங்கள் இவை!
ஏன் இப்படி?
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 311 இந்தியர்களை மெக்சிகோ சமீபத்தில் நாடு கடத்தியது. இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர், நாடுகடத்தப்பட்டவர்களில் பலர் அமெரிக்காவிற்குள் நுழைய, ஏஜென்டுகளுக்கு 2 முதல் 5 மில்லியன் ரூபாய் வரை லஞ்சமாக கொடுத்ததாகக் கூறினர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து ஈக்வடார் சென்று, பின்னர் கொலம்பியா, பனாமா மற்றும் ஹோண்டுராஸ் வழியாக பயணித்து இறுதியாக மெக்சிகோ வந்தடைந்தனர்.
பிரேசில், ஈக்வடார்
"லத்தீன் அமெரிக்கா வழியாக பயணிக்கும் பெரும்பாலான இந்திய சட்ட விரோத குடியேற்ற விரும்பிகள், ஈக்வடார் அல்லது பிரேசில் வழியாக மெக்ஸிகோவிற்குள் நுழைகிறார்கள், ஏனெனில் இந்த இரு நாடுகளும் கெடுபிடி இல்லாத, விசா சட்டங்களைக் கொண்டுள்ளன. அங்கிருந்து அவர்கள் வடக்கே அமெரிக்கா நோக்கி பயணம் தொடர்கிறார்கள், கொலம்பியா மற்றும் மத்திய அமெரிக்கா வழியாக முக்கிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி, அமெரிக்க தெற்கு எல்லைக்கு செல்கிறார்கள்," என்கிறார் வாஷிங்டனை சேர்ந்த, ஐபிஐ ஆலோசகர்கள் நிறுவனத்தின் குடியேற்ற நிபுணர் மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் கெய்ட்லின் யேட்ஸ்.
பணம் சம்பாதிக்க, உறவுகளை சந்திக்க
பொதுவாக பொருளாதார வாய்ப்புகளை எதிர்பார்த்து அமெரிக்கா நுழைய முற்படுகிறார்கள். அல்லது அங்கே ஏற்கனவே வசிக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று யேட்ஸ் மேலும் கூறினார். பெரும்பாலும் வட இந்திய மாநிலங்களான ஹரியானா மற்றும் பஞ்சாபிலிருந்துதான் இப்படி சட்ட விரோதமாக குடியேற நினைப்பவர்கள் அதிகமாம். அவர்கள் மத ரீதியான பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முயற்சி செய்து இப்படி செல்பவர்களாகும் அல்லது அரசியல் அடக்குமுறைக்கு பயந்து செல்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆபத்து அதிகம்
கலிபோர்னியாவின் ஃப்ரெஸ்னோவை சேர்ந்த, குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞர் தீபக் அலுவாலியா, இதுபற்றி கூறுகையில், "இந்திய அரசியல் மீதான அதிருப்தியாளர்கள், சிறுபான்மையினர் மற்றும் ஓரினச் சேர்க்கை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற நாடுகளில் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது" என்றார். அங்கீகரிக்கப்படாத வழிகளைப் பயன்படுத்தும் குடியேறிகள், பெரும்பாலும் தங்கள் உயிரையும் அவர்களது குடும்பத்தினர் உயிரையும் பணயம் வைத்துதான் செல்கிறார்கள். ஆறு வயது குருபிரீத் கவுர் இப்படியான ஒரு ஆபத்துக்கு இரையான குழந்தை. அரிசோனா பாலைவனத்தை தனது தாயுடன் கடக்கும்போது தாகத்தால் தண்ணீருக்கு வழியின்றி, குருபிரீத் கவுர் இறந்தார்.
பயங்கர அனுபவம்
சமீபத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிலர், ஈக்வடாரில் இருந்து அமெரிக்க எல்லைக்கு தாங்கள் மேற்கொண்ட பயணம் மிகவும் "பயங்கரமானது" என்று விவரித்தனர். மே 9ம் தேதி இந்தியாவை விட்டு வெளியேறியவர் மந்தீப். அவர் சட்ட விரோதமாக குடியேற முற்பட்டபோது, காடுகளில் சடலங்களைக் கண்டதாகக் கூறினார். ஒருவேளை மனித கடத்தல்காரர்களின் உதவியுடன் சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களின் உடல்களாக அவை இருக்கலாம் என்று நடுக்கத்தோடு தனது அனுபவத்தை அவர் விவரித்தார். சட்ட விரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த, இந்திய அரசு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதும், அமெரிக்கா தனது விசா கெடுபிடியை தளர்த்துவதும் நல்ல தீர்வாக இருக்க முடியும். இதைத்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.