Shut up man!... ட்ரம்ப் பொய்களால் கடுப்பாகி ஆக்ரோஷம் காட்டிய ஜோ பிடன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் சொல்வதெல்லாம் பொய் என ஜோபிடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் போது அதற்கு பதிலளிக்க டிரம்ப் முயற்சித்தார். ஆனால் ஜோ பிடனோ ஒரு கட்டத்தில் பேசாமல் இருக்கிறீர்களா என கேட்டு டிரம்பின் வாயை அடைத்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சரியாக 35 நாட்களே உள்ளன. இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் அதிபரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் முதல்முறையாக நேருக்கு நேர் விவாதித்தனர்.
அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் விவாதத்தின் போது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபான கைகுலுக்கல் கொரோனா தொற்று பரவலால் இந்த முறை காணாமல் போனது. விவாதத்தை முதலில் ஜோ பிடன் தொடங்கினார். அப்போது அவர் டொனால்ட் டிரம்ப் எது கூறினாலும் பொய்யாகவே உள்ளது. அவருடைய பொய்களை கூறுவதற்கு நான் இங்கு வரவில்லை.
Shut up man!... ட்ரம்ப் பொய்களால் கடுப்பாகி ஆக்ரோஷம் காட்டிய ஜோ பிடன்
மெல்லிய குரல்
அவர் பொய் சொல்பவர் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அது அனைவருக்குமே தெரியும் என்றார் ஜோ பிடன். அப்போது மிகுந்த மெல்லிய குரலில் டிரம்ப் எதையோ சொல்ல முயற்சித்தார். ஆனாலும் விடாமல் பேசிய ஜோ பிடன் ஒரு கட்டத்தில் நீங்கள் பேசாமல் இருக்கிறீர்களா என மிகவும் ஆக்ரோஷமாக கத்தினார், இதனால் அரங்கமே சற்று அதிர்ச்சி அடைந்தது.
2 லட்சம்
இதையடுத்து டிரம்ப் அமைதி காத்தார். ஜோபிடன் தனது பேச்சை தொடர்ந்தார். அதில் கொரோனா தொற்றால் 2 லட்சம் பேர் அமெரிக்காவில் இறந்துள்ளார்கள். இதுவரை வேறு எந்த நாட்டிலும் இதுபோன்றதொரு பலி எண்ணிக்கை இல்லை. கொரோனா பாதிப்பால் குடும்ப உறுப்பினர்கள் இறந்ததால் டைனிங் டேபிளில் வெற்று நாற்காலியை எத்தனை பேர் பார்த்துள்ளீர்கள்?
ஊசி மூலம்
கிருமிநாசினியை உடலில் ஊசி மூலம் ஏற்றிக் கொண்டால் கொரோனா பரவாது என டிரம்ப் கூறியதை கேட்டு நீங்கள் எல்லாம் அவ்வாறு செய்துவிட்டீர்களோ என்னவோ? என வினவினார். உடனே கோபம் கொண்ட டிரம்ப் கிருமிநாசினியை உடலில் ஏற்றுவது குறித்த எனது கருத்து நகைச்சுவைக்காக நான் கூறியது என விளக்கிய டிரம்ப், 77 வயதாகும் ஜோ பிடனின் கல்வி ஆவணங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பினார்.
மாஸ்க்
என் கண் முன்னால் இனி புத்திசாலி என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்த வேண்டாம். உங்களை புத்திசாலி என கூறிக் கொள்ள ஒன்றுமே இல்லை ஜோ என்ற டிரம்ப், முகக் கவசம் கட்டாயம் அணிவது என்ற பிடனின் வலியுறுத்தல் குறித்தும் பேசினார். என்னிடம் மாஸ்க் இருக்கிறது. எனக்கு எப்போது தேவையோ அப்போது நான் போட்டுக் கொள்வேன். ஜோ பிடனை போல் எப்போதும் மாஸ்க் அணிய நான் விரும்பவில்லை என்றார் டிரம்ப்.
டிரம்ப் வரி ஏய்ப்பு
இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளாக டிரம்ப் வரி ஏய்ப்பு செய்தது குறித்து ஜோ பிடன் விமர்சித்தார். கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து அதிபருக்கு எந்த திட்டமும் இல்லை. அந்த வைரஸ் எத்தனை கொடூரமானது என்பது பிப்ரவரி மாதமே டிரம்பிற்கு தெரியும். எனினும் அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்க தவறிவிட்டார் என ஜோ பிடன் குற்றம்சாட்டினார்.
சிகிச்சை முறை
அப்போது டிரம்ப் பதிலளிக்கையில், ஒரு வைரஸை கையாளும் விதத்தில் எங்கள் ஆட்சியில் செய்ததை போல் ஒபாமா ஆட்சியில் இதுவரை செய்ததில்லை. நல்லது செய்வது என்பது உங்கள் ரத்தத்திலேயே இல்லை. பாதுகாப்பு கவசம், மாஸ்க், செயற்கை சுவாசக் கருவி என அனைத்தும் இருப்பு வைத்திருந்தோம். அது போல் கொரோனா தடுப்பூசி விவகாரத்திலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கான சிகிச்சை முறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என்றார் டிரம்ப்.
விவாதத்தில் வெற்றி பெற்ற ஜோபிடன்
ஓஹியோவில் நடந்த இந்த முதல் விவாதத்தில் வரி ஏய்ப்பு, கொரோனா வைரஸ், இனவாதம் உள்ளிட்டவற்றில் பல்வேறு கேள்விகளை டிரம்பிடம் எழுப்பிய ஜோ அவரை திக்குமுக்காட வைத்துவிட்டார். உக்ரைனில் பிடனின் மகன் மேற்கொண்டு வரும் தொழில் ஒப்பந்தங்கள் குறித்து டிரம்ப் பேசியிருந்தார்.எனினும் டிரம்பின் பேச்சு எடுபடவில்லை என்பதால் இந்த விவாதத்தில் ஜோ பிடன் வெற்றி பெற்றுவிட்டார். இன்னும் இரு விவாதங்கள் அக்டோபர் 15, அக்டோபர் 22ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. அப்போதாவது டிரம்ப், ஜோவை மடக்குகிறாரா என பார்ப்போம்.