10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை
பத்து வருடங்களாக கோமாவில் இருந்த பெண்ணை சீரழித்த நபரை அமெரிக்கப் போலீசார் தேடி வருகின்றனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயநினைவு இல்லாமல் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விபத்தொன்றில் சிக்கினார். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்றார். எனவே, அவர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோமாவில் இருந்த அப்பெண்ணை பலாத்காரம் செய்தது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர், டாஷா மெனாகர் கூறுகையில், ''கோமா நிலையில் உள்ள பெண்ணை கர்ப்பமாக்கிய கயவனை பிடிக்க, மருத்துவமனையில் பணியாற்றும், ஆண் ஊழியர்களிடம், டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.