கலவரத்தோடு கலவரமாக... சபாநாயகரின் லாப்டாப்பை ஆட்டையைப் போட்ட பெண்!
வாஷிங்டன் : அமெரிக்க பார்லிமென்ட் கட்டிடத்திற்குள் ஜனவரி 6 நுழைந்த டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தின் போது சபாநாயகர் நான்சி பெலோசியின் லேப்டாப்பை திருடி சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.
பென்சைல்வேனியா மாகாணத்தை சேர்ந்த ரிலே ஜூன் வில்லியம்ஸ் என்ற அப்பெண், ஜனவரி 18 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து திருடப்பட்ட லாப்டாப் அல்லது ஹார்ட் டிரைவ் ஆகியன கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறும் போலீசார், மற்ற தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.
நான்சியின் அலுவலகத்தில் இருந்து, ரிலே ஜூன் லாப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடும் வீடியோ காட்சிகளை எப்பிஐ வெளியிட்டுள்ளது. திருடிய கம்ப்யூட்டர் டிவைஸ் உள்ளிட்ட பொருட்களை ரஷ்யாவில் உள்ள தனது நண்பரிடம் கொடுத்து ரிலே விற்கச் சொன்னதாகவும், அவற்றை ரஷ்ய உளவு அமைப்பான எஸ்விஆரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்
எப்பிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பச்சை நிற சட்டை அணிந்த பெண் ஒருவர், கூட்டத்தை முந்திக் கொண்டு நான்சி அலுவலகத்திற்குள் செல்லும் காட்சிகளும், அவரின் சட்டையில் "மேக் அமெரிக்கா கிரேட் அகைன்" (Make America Great Again) என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த காட்சிகளும் பதிவாகி உள்ளன.
இருப்பினும் இந்த வீடியோ காட்சிகள் அல்லது போட்டோக்கள் ஆதாரமாக இருப்பதாக ரிலேவிற்கு எதிராக போலீசார் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை. கலவரம் நடைபெற்ற போது தனது மகள் சம்பவ இடத்தில் இருந்ததை ரிலேவின் பெற்றோர்களும் உறுதி செய்துள்ளனர்.