அமெரிக்கா: அதிபரே வன்முறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த அவமானம்.. உலக நாடுகள் கண்டனம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பே வன்முறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது அவமானம் என உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் ஜோ பிடன வெற்றி பெற்றார். இந்த நிலையில் கேபிட்டல் கட்டடத்தில் எல்க்டோரல் வாக்குகளை பரிசீலனை செய்து ஜோ பிடன் வெற்றியாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பணிகள் தொடங்கின.
இந்த பணிகளை தடுத்து நிறுத்த டிரம்ப் ஆதரவாளர்கள் கேபிட்டல் கட்டடத்திற்குள் நுழைந்தனர். அப்போது கட்டடத்தின் ஜன்னல்களை உடைப்பது, அங்கிருந்த பொருட்களை சூறையாடுவது என வன்முறையில் ஈடுபட்டனர்.
அத்துமீறி உள்ளே நுழைந்த டிரம்ப் ஆதரவாளர் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாத நிலையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பெண் ஒருவர் பலியானார். 200 ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் இது போன்ற வன்முறை நிகழ்ந்துள்ளது.
அமெரிக்க கேபிட்டல் கட்டடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை.. போலீஸ் துப்பாக்கி சூட்டில் பெண் பலி
அதோடு தற்போது நடக்கும் வன்முறை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வன்முறைக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். நார்வோஜியன் பிரதமர் எர்னா சோல்பெர்க் கூறுகையில் வாஷிங்டனில் நாம் பார்ப்பது முற்றிலும் ஏற்க முடியாதது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.
இந்த வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அதிபர் டிரம்பிற்கு உள்ளது. வன்முறை புகைப்படங்களை பார்க்கும் போதே அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஐரிஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் சைமன் கோவினே கூறுகையில் வன்முறையில் நடந்தது மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.
ஒரு அதிபர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் ஜனநாயகத்தின் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் இது. நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடந்த தேர்தல் முடிவுகளை சிதைக்க நடந்த முயற்சியாகும். உலகமே உற்று நோக்குகிறது என்பதை மறவாதீர்கள். அமைதி திரும்பும் என நம்புவோம் என தெரிவித்துள்ளார்.
அது போல் டச்சு பிரதமர் மார்க் ருட்டே நேரடியாக டிரம்பை விமர்சித்துள்ளார். வாஷிங்டன்னில் நடந்த வன்முறைகள் மிகவும் கொடூரமானவை. அன்பான டொனால்ட் டிரம்பே, நீங்கள் அடுத்த அதிபர் ஜோ பிடன்தான் என்பதை இன்றாவது அங்கீகரிக்க வேண்டும் என்றார்.
அது போல் ஐஸ்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, கொலம்பியா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இது அமெரிக்காவே அல்ல என ஐரோப்பிய தூதரக பிரதிநிதி ஜோசப் போரல் தெரிவித்துள்ளார்.