வட இந்தியாவில் 'தத்துவார்த்த' அரசியலை கைவிட்ட 'சமூகநீதி' கட்சிகள்... சாதகமாக்கிய பாஜக!
Recommended Video
சென்னை: தேர்தலுக்கு தேர்தல் ஏதேனும் ஒரு பிரச்சனைகளை முன்வைத்து வாக்கு அரசியலில் சாதித்து வந்தது பாஜக. ஆனால் தற்போது ஒட்டுமொத்தமாகவே சமூக நீதி கோட்பாடு பற்றி கூட கட்சிகள் பேசாமல் மவுனித்து போயிருப்பதால் பாஜகவின் வெற்றி எளிதாக சாத்தியப்பட்டுக் கொண்டே இருக்கும்.
நாடு விடுதலை அடைந்த போது காங்கிரஸும் இடதுசாரிகளும்தான் நாடாளுமன்றத்தில் கோலோச்சினர். அப்போது காங்கிரஸ் 'மிதவாத வலதுசாரி' இயக்கமாகத்தான் பார்க்கப்பட்டது.
இந்துத்துவா கொள்கைகளில் மிதவாத முகமாகத்தான் காங்கிரஸ் நடவடிக்கைகள் இருந்தன. காலம் நகர திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் தேர்தல் களத்துக்கு வந்தன. பின்னர் திமுகவின் மிதவாத வலதுசாரித் தனத்தைக் கொன்ட அதிமுக வந்தது.
பாஜக உதயம்
இந்திராவின் அவசரநிலை காலத்தில் ஜனதாக்கள் முளைத்தனர். இந்த ஜனதாவில் இருந்து 1980களின் தொடக்கத்தில் வலதுசாரி பாரதிய ஜனதா பிறந்தது. அதேநேரத்தில் சமூக நீதி பேசக் கூடும் ஜனதா தள் கட்சிகள் பிறக்கவும் செய்தன.
சாதித்த தேசிய முன்னணி
வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி மகத்தான சமூக நீதி கூட்டணியாக இருந்து. திமுக, தெலுங்குதேசம், அசாம் கனபரிஷத் என ஆகப் பெரும் சமூக நீதி கட்சிகள் இணைந்து வரலாற்று சிறப்புமிக்க, மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுகீட்டை வழங்கும் திருப்புமுனையை ஏற்படுத்தினர். இதை தாங்கிக் கொள்ள முடியாத தீவிரவலதுசாரி கட்சியான பாஜக, விபிசிங் ஆட்சியையே கவிழ்த்தது.
எத்தனை தலைவர்கள்
இதற்கு முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார், கன்சிராம் என ஏகப்பட்ட சமூக நீதி தலைவர் அம்பேத்கர், பெரியார், பூலே, ஜெய்பிரகாஷ் நாராயணன் வழிநின்று அரசியல் செய்தனர். உத்தரபிரதேசத்தில் தந்தை பெரியாரின் சிலைகளை எல்லாம் திறந்து வைத்தார் மாயாவதி.
தலைவர்கள் தடம்புரண்டனர்
இவர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் போதே ஊழல்கள், குடும்ப அரசியல்கள் ஆகியவற்றில் சிக்குண்டு கொள்கை அரசியலில் இருந்து தடம்மாறினார். பெரியார் சிலையை திறந்துவைத்த மாயாவதிதான் உயர்ஜாதியினர் வாக்குகளைப் பெற வியூகம் வகுத்து கூட்டணி அமைத்தார். நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தார். முலாயம்சிங் பாஜகவுக்கு இணக்கமானவராக மாறினார். வட இந்திய அரசியல் களங்களில் சமூக நீதி என்கிற முகமே காணாமல் போனது. இத்தனைக்கும் இந்துத்துவா பேசும் பாஜக முன்னைவிட படுவீச்சாக சிறுபான்மையினர் எதிர்ப்பு, தலித் எதிர்ப்பு, ராமர் கோவில் பிரச்சனை என அடித்து ஆடியது. இதற்கு எதிர்வினையாக சமூக நீதியை இந்துத்துவா எதிர்ப்பு அரசியலை, தலித் தலைவர்களை முன்வைத்து விளையாட வேண்டிய சமூக நீதிகட்சிகள் அத்தனையும் தனித்தனியே பிரிந்து கிடந்தன.
சமூக நீதி என்ன?
பாஜகவின் இந்த விளையாட்டை எதிர்கொள்ள காங்கிரஸுக்கும் அகிலேஷூக்கும் தேஜஸ்விகளுக்கும் சமூக நீதி என்கிற பாலபாடமே தெரியாத போது என்னதான் செய்துவிட முடியும்... காங்கிரஸ் ரத்தம் ஊறிப்போய் கிடக்கும் மமதாவிடம் பாஜக எதிர்ப்பு என்கிற கொள்கைதான் இருக்கிறது.. ஜெய் ஶ்ரீராம் என்றால் ஜெய் காளி என்கிற வலதுசாரி முகம்தான் இருக்கிறது. இன்குலாப் ஜிந்தாப் முழங்கிய செங்கொடிகளே காவி கொடி ஏந்துகையில் மமதா என்ன எதிர்வினையாற்றிவிட முடியும்? அதனால்தான் வட இந்தியா முழுவதும் காவி கொடி பட்டொளி வீசி பறக்கிறது. அதேநேரத்தில் இந்துத்துவா தத்துவத்தை உணர்ந்து முழுமையாக எதிர்க்கும் கேரளாவும் தமிழகமும் பாஜகவுக்கு மரண அடியை கொடுத்திருக்கிறது என்பதுதான் ஆறுதல்.
எப்படி தடுப்பது?
வட இந்தியாவில் மீண்டும் சமூக நீதி என்றால் என்ன? இந்துத்துவா என்றால் என்ன? அதை எப்படி எதிர்ப்பது? பாஜகவை தத்துவார்த்த ரீதியாக எதிர்கொள்வது எப்படி? என்கிற 'வகுப்புகள்' நடத்தப்படாமல் போனால் அடுத்த லோக்சபா தேர்தலில் குறைந்தது 400 இடங்களை பாஜக கைப்பறுவதைத் தடுக்கவே முடியாது!