விவசாய தொழிலாளர் அணி டூ சிபிஐ மாநில செயலாளர்... இரா. முத்தரசன்
சென்னை: அமைதியான பேச்சு...ஆனாலும் எதிர்கட்சியினரை பேச்சில் நையாண்டி செய்யும் போது அப்ளாஸ் அள்ளுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகிலுள்ள ஆதிவலம் என்ற ஊரில் பிறந்த ஆர். முத்தரசன், எளிமையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். 65 வயதாகும் முத்தரசனுக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
பெற்றோர் பெயர் ராமசாமி - மாரிமுத்து அம்மாள். இரண்டு பெண்கள் இரண்டு ஆண்கள் என முத்தரசனின் உடன் பிறந்தவர்கள் என மொத்தம் 4 பேர்.
அரசியல் ஆர்வம்
ஆலத்தம்பாடி ஜானகி அம்மாள் அரசு உயர் நிலைப்பள்ளியில் பயின்ற முத்தரசன், எட்டாம் வகுப்பு படிக்கும் பேதே வாசித்த ஜனசக்திதான் கம்யூனிஸ்ட் பக்கம் கவனத்தை திருப்பியது. குடும்பமே விவசாயத்தை கவனிக்க, டீக்கடை பெஞ்சில் பேசிய அரசியலை கவனிக்கத் தொடங்கினார் முத்தரசன். எட்டாம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திய முத்தரசன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய கட்சி அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக வேலைக்கு சேர்ந்தார்.
இளைஞர் பெருமன்றத்தில்
1969ல் கட்சியில் இணைந்த முத்தரசன், திருத்துறைப் பூண்டி ஒன்றியத்தில் ஆரம்ப நாட்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் துணைத்தலைவராகவும், பின் நகர செயலாளராக 10 வருடங்களும், ஒன்றிய துணை செயலாளராக, ஒன்றிய செயலாளராக 2 வருடம் பணியாற்றினர்.
விவசாய தொழிற்சங்கம்
ஒருங்கிணைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக விவசாய தொழிற்சங்கத்தில் 1990 வரையும், 1997 முதல் 2014 வரை அதே தொழிற் சங்கத்தில் மாநில செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் முத்தரசன். பல போராட்டங்களில் பங்கேற்றுள்ள முத்தரசனின் பேச்சு கோடு கிழித்தது போல் இருக்கும். வரம்பைத் தாண்டி பேசமாட்டார் என்கின்றனர் இவருடன் பழகியவர்கள்.
மாநில செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளராக கோலோச்சிய தா.பாண்டியனுக்கு பின்னர், கடந்த ஆண்டு புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் இரா. முத்தரசன்.
கடும் போட்டி
விவசாய தொழிலாளர் அணி செயலாளராக இருந்த முத்தரசன், மாநில செயலாளர் பதவிக்காக துணை செயலாளராக பதவி வகித்து வரும் மகேந்திரனுடன் மோதினார். நல்லகண்ணு, தா.பாண்டியன், சுப்பராயன் என மூத்தத் தலைவர்கள் ஆதரித்தும், கடுமையான போட்டி களுக்கிடையே 2 வாக்குகள் வித்தியாசத்தில் சி.மகேந்திரனை வென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரானார் முத்தரசன்.
பொறுப்புக்கு நன்றி
கட்சியின் மாநில செயலாளராகப் பொறுப்பேற்றவுடன், "எட்டாம் வகுப்புத் தாண்டாத என்னை மாநில செயலாளராக்கி அழகுப் பார்த்துள்ளீர்கள். இந்தப் பதவி எனக்கு இடப்பட்ட பொறுப்பு தவிர பதவி அல்ல என்று கூறினார். இந்தப் பதவி எனக்குக் கிடைக்கும் என கற்பனையில் இருந்தது கூட கிடையாது. எதிர்பார்க்கவும் இல்லை என்று எதார்த்தமாகவே பேசினார்.
மேடையில் விளாசல்
அதிமுக, திமுக உடன்தான் கூட்டணிக்கு பேசுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் வைகோ, திருமாவளவனுடன் இணைந்து கம்யூனிஸ்ட்கள் மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இதில் முத்தரசன் பங்கும் முக்கியமானது. பிரச்சார மேடையில் எதிர்கட்சியின் ஊழலைப் பற்றி விமர்சனம் செய்யும் அதே நேரத்தில் தங்களின் நேர்மையைப் பற்றியும் கறைபடியாத கரத்திற்கு சொந்தக்காரர்கள் நாங்கள் என்று சொல்லவும் தவறுவதில்லை முத்தரசன்.