ராஜஸ்தானில் ரிசார்ட் அரசியல்.. மனதில் நிழலாடும் கூவத்தூர் அதிரடிகள்!
அதென்னவோ கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அந்த கட்சிக்கு தொடர் சோதனைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ரிசார்ட் அரசியலும் குதிரை பேரங்களும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. இப்போது ராஜ
ஜெய்ப்பூர்: ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சியினர் வளைத்துவிடக் கூடாது என்பதில் அரசியல் கட்சிகள் கவனமாக இருப்பார்கள். எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பது தான் அவர்களின் முதல் வேலை. கட்சி தாவலை தடுக்கவும், குதிரை பேரத்தை தடுக்கவும் எம்.எல்.ஏ.க்களை சொகுசு ரிசார்ட்டுகளில் தங்க வைப்பார்கள். சாதகமான சூழல் வரும்போதுதான் அவர்கள் வெளியே அழைத்து வரப்படுவார்கள்.
இந்திய அரசியலில் பல மாநிலங்களில் இந்த ரிசார்ட் அரசியல் அரங்கேறியிருக்கிறது. அந்த வரிசையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் ரிசார்ட் அரசியல் தொடங்கி உள்ளது. குதிரை பேரத்தை தவிர்ப்பதற்காக கட்சியின் எம்எல்ஏக்களை ரிசார்ட்களுக்கு அழைத்துச் செல்லும் அரசியல் கர்நாடகாவில்தான் துவங்கியது இப்போது ராஜஸ்தான் வரை நீடிக்கிறது.
ராஜஸ்தான் அரசியல் பிரச்சினை
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவில் முதல்வர் பதவியை கைபற்றுவதற்காக அசோக் கெல்லாட், சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அசோக் கெல்லாட்டுக்கு முதல்வர் பதவியை கட்சி மேலிடம் அளித்தது. சச்சின் பைலட் துணை முதல்வரானார். ஆனாலும் நீரு பூத்த நெருப்பாக இருந்த மோதல் தற்போது வெளி உலகத்திற்கு பகிரங்கமாக தெரியவந்துள்ளது.
கர்நாடகா, மத்திய பிரதேசத்தைப் போன்று இன்னொரு மாநிலத்தையும் இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை. சச்சின் பைலட்டை எப்படியாவது சமாதானம் செய்து ஆட்சியை தக்கவைக்க முயற்சி செய்கிறது காங்கிரஸ்.ராஜஸ்தான் சட்டசபையின் பலம் 200. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுதவிர சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 10 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய பழங்குடியின கட்சியை சேர்ந்த தலா 2 எம்.எல்.ஏ.க்கள் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். பாஜகவின் பலம் 72 தான் உள்ளது.
ஜெய்ப்பூரிலுள்ள முதல்வர் அசோக் கெல்லாட் இல்லத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக தகவல் வெளியானது. கூட்டத்திற்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பேருந்து மூலம் ஜெய்பூரில் உள்ள ஃபேர்மாண்ட் ஹோட்டலில் தங்க வைக்கப்படவுள்ளனர். குதிரை பேரத்தை தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கர்நாடகாவில் தொடங்கிய ரிசார்ட் அரசியல்
முதன் முதலில் கர்நாடகாவில் 1983ல் ரிசார்ட் அரசியல் அறிமுகமானது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் வளைத்துவிடக் கூடாது என, ஜனதா கட்சியின் முதல்வரான ராமகிருஷ்ண ஹெக்டே, கட்சி எம்எல்ஏக்களை கர்நாடகாவில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்தார். 1984ஆம் ஆண்டில் ஆந்திரா முதல்வர் என்டி ராமாராவ் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார். அவர் திரும்பி வந்தபோது, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிடப்பட்டது. அப்போது சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் கர்நாடகாவில் உள்ள ரிசார்ட், ஹோட்டல்களில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்க வைக்கப்பட்டனர். 1985ல் கட்சியில் தெலுங்கு தேசம் கட்சியில் ஏற்பட்ட மோதலில் சந்திரபாபு நாயுடு அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்தார். அப்போது தனது ஆதரவு எம்எல்ஏக்களை ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் என்டி ரமாராவ் தங்க வைத்தார்.
2002ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின்போது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் என, 71 எம்எல்ஏக்களை மைசூருக்கு அனுப்பி வைத்தார் காங்கிரஸ் முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக். 2011ஆம் ஆண்டில் ஊழல் புகாரில் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து பாஜகவின் எடியூரப்பா பதவி விலக நேரிட்டது. அப்போது தனது ஆதரவாளரான சதானந்த கவுடாவை முதல்வராக்குவதற்காக, 60 ஆதரவு எம்எல்ஏக்களை பெங்களூருக்கு அருகில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்க வைத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, சதானந்தா கவுடாவுக்கு பதிலாக, மீண்டும் தன்னை முதல்வராக்க வலியுறுத்தி, இதே ரிசார்ட் அரசியலில் எடியூரப்பா ஈடுபட்டார்.
கூவத்தூர் ரிசார்ட் அரசியல்
இதுபோன்ற ரிசார்ட் அரசியல் 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்றது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் நள்ளிரவில் முதல்வராக பதவியேற்றார். சில தினங்களிலேயே சசிகலாவிற்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற ஆசை வரவே ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். சசிகலா முதல்வராக பதவியேற்பதை தடுக்க ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் அமர்ந்தார்.
சசிகலா தனது ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைத்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னர் சசிகலா சிறைக்குப் போகவே, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி. பின்னர் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து முதல்வர், துணைமுதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ளவே,டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரிசார்ட் அரசியல் செய்தனர். கூவாத்தூர் தொடங்கி கூர்க் ரிசார்ட் வரை பயணித்ததுதான் சுவாரஸ்யம்.
எடியூரப்பா அரசியல்
இதே ரிசார்ட் பாணி அரசியல் கர்நாடகாவில் மீண்டும் அரங்கேறியது. 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. பாஜக 104 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சியை பிடிக்க போதிய பலம் இல்லாததால், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே கவிழ்ந்தது. இதனையடுத்து காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றது. யாருமே எதிர்பார்க்காமல் மஜத கட்சியின் குமாரசாமி முதல்வரானார்.
அந்த கூட்டணி அரசு 7 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. குழப்பம் ஏற்படவே, குழம்பிய குட்டையில் மீன் பிடித்தது பாஜக. பாஜக எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சி வளைக்கப் போவதாக செய்தி வெளியாகவே எம்எல்ஏக்கள் ஹரியானா ரிசார்ட்டில் பதுங்கினர். காங்கிரஸ் கட்சியும் தனது கட்சி எம்எல்ஏக்களை ஹோட்டலில் பதுக்கிறது. இந்த அமளி துமளியில் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது எடியூரப்பா முதல்வரானார்.
மகாராஷ்டிராவில் ரிசார்ட் நாடகம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டது. சிவசேனா- காங்கிரஸ் - என்சிபி தலைமையிலான கூட்டணியில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராவார் என்று கூறப்பட்ட நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார் குட்டையை குழப்ப தேவேந்திரபட்னாவிஸ் முதல்வரானார். அஜீத் பவார் துணைமுதல்வரானார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன்பாகவே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ரிசார்டில் தங்கவைக்கப்பட்டனர். அதன்பின்னர் நடந்த அரசியல் உலகமே அறியும் ஒருவழியாக பாஜக ஆட்சி கவிழ சிவசேனா முதல்வரானார்.
கடந்த மார்ச் மாதம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போதய முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பெங்களூருவுக்கு பறந்தார். இதற்கு மறுநாள் 21 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யவே,காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஜோதிராதித்யா பாஜகவில் இணைந்தார்.
பாஜக அரசு அரியணை ஏறியது
இப்போ ராஜஸ்தானிலும் ரிசார்ட் இப்போது காங்கிரஸ் கட்சி ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் மீண்டும் அரசியல் நாடகம் அரங்கேறியுள்ளது. முதல்வர் அசோக்கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் நடந்த உட்கட்சி மோதலில் ரிசார்ட் அரசியல் அரங்கேறியுள்ளது. என்னதான் பல மாநிலங்களில் ரிசார்ட் அரசியல் நடந்திருந்தாலும் ரிசார்ட் அரசியலை உலகெங்கும் பேச வைத்தது தமிழ்நாடுதான் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.