The Jungle Book: குரங்கு போல தாவலாம்...மீனைப் போல நீந்தலாம்!
டெல்லி: தி ஜங்கிள் புக்...ஓநாயால் வளர்க்கப்பட்ட குழந்தை காட்டில் எப்படி வாழ்கிறது? காடு மலைகளில் சுற்றித் திரியும் குழந்தையின் சந்தோஷம்தான் என்ன...?
90ஸ் கிட்ஸ்..துள்ளித் திரிந்த காலம் போல எந்த குழந்தைகளுக்கும் காலம் அவ்வளவு ஜாலியாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தொலைக்கட்சிகளில் கண்டு களிக்க சக்திமான், ஜங்கிள் புக்..மோட்டோ பட் என்று எத்தனை எத்தனை கதைகள்...!
இவைகளுக்கு நடுவில் ராமாயணம், மகாபாரதம்...என்று இதிகாச கதைகள்...80ஸ் கிட்ஸ் தொலைக்காட்சி கேளிக்கை நிகழ்ச்சிகளை நன்றாகவே அனுபவித்து இருக்கிறார்கள். இப்போது உள்ள குழந்தைகளும் கண்டு களிக்க தி ஜங்கிள் புக் தினமும் மதியம் ஒரு மணிக்கு டிடி நேஷனலில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தி ஜங்கிள் புக்
காட்டில் இருந்து மனிதர்களை வேட்டையாட புலி ஒன்று ஊருக்குள் வருகிறது. மனிதர்கள் பயத்தில் உறைந்து போயிருக்க. குழந்தை ஒன்று தவழ்ந்து வெளியில் வந்துவிடுகிறது. அழுது ஓய்ந்த குழந்தை சத்தமில்லாமல் ஒரு புதரில் மாட்டிக்கொண்டு தத்தளிக்கிறது.
குழந்தையை கண்ட ஓநாய்
புதருக்குள் அசைவை பார்த்து அங்கு எட்டிப் பார்க்கிறது ஓநாய். பார்த்தால் குழந்தை ஒன்று அங்கு இருக்கிறது. அந்த குழந்தையை தூக்கி வந்து...காட்டில் உள்ள தங்களது இனத்திடம் நான்தான் இந்த குழந்தையை வளர்க்கப் போகிறேன் என்று கூறுகிறது. அனைவரும் சம்மதம் தெரிவிக்க குழந்தை மோக்லி என்கிற பெயரில் வளர்கிறது.
தாவுவேன் பாடுவேன்
மோக்லி முயல், மான், ஓநாய், குரங்கு என்று அனைவருடனும் வளர்கிறான். குரங்கை போல தாவி மானைப் போல துள்ளி ஓடி.. மீனைப் போல ஆற்றில் நீந்தி சந்தோஷமாய் விளையாடி வளர்கிறான். மிருகங்களின் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்து வளர்கிறான்.
புலிக்கு கண்ணு
புலிக்கு எப்படியாவது மோக்லியை தனக்கு உணவாக்கிக்கணும் என்று அவன் மீது ஒரு கண்ணு. அத்தனையிலும் தப்பித்து வாழும் மோக்லி வாழ்க்கை காட்டுக்குள் மிருகங்களோடு எப்படி சந்தோஷமாக இருக்கிறது. சில சமயம் எத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறான் என்பதுதான் தி ஜங்கிள் புக் கதை.