அடிக்கடி நாட் ரீச்சபிள்.. ஆடை அழகிக்கு பிழைக்கத் தெரியலையே!
சென்னை: நடிகை அமலாபால் எப்போது ஆடை படத்தில் நடித்து புகழடைந்தாரோ.. அப்போதே அவர் மீது பெரும்பாலானவர்களுக்கு மதிப்பு கூடித்தான் போய்விட்டது. இது மாதிரி படங்களில் நடித்து தன்னை நிரூபிக்க வேண்டும் என்பது சாதாரண விஷயமில்லை.
உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அமலாபால் பெரும் சாதனைதான் செய்திருக்கிறார். சிந்து சமவெளி என்கிற ஏ சர்டிபிகேட் படத்தில் சிறு பெண்ணாக தன்னை அறியாமல் நடிக்க ஒப்புக்கொண்டு, கெட்ட பெயரும் வாங்கி வைத்திருந்தார் அமலாபால்.
அதை எல்லாம் தகர்க்க மைனா போன்ற படங்களில் நடித்து தன்னை நிரூபித்து இருந்தாலும், ஆடை படத்தில் அத்தனை வதந்திகளையும் தவிடு பொடியாக்கி விட்டார் அமலாபால்.
அவசர கல்யாணம்
அவசர அவசரமாக இயக்குநர் விஜயுடன் கல்யாணம். ஒரு வருடம் முடிவதற்குள் திருமணத்தில் மன கசப்பு என்று அத்தனையையும் அனுபவித்தாலும், அமைதியாகவே அவைகளை எதிர்கொண்டார். வயதுக்கு மீறிய பக்குவத்தை இந்த விஷயங்களில் அவரிடம் காண முடிந்தது. கடைசியில் விவாகரத்து பெற்ற அவருக்கு சென்னையில் வாழ பிடிக்கவில்லை .
ஆடம்பரம் டெல்லியில்
டெல்லியில் வாழ சென்றவருக்கு அங்கு இருந்த ஆடம்பர வாழ்க்கை ரொம்பவும் பிடித்துப் போனது. இதன் விளைவாகவே வரிச்சலுகையை கருத்தில் கொண்டு பாண்டிச்சேரி முகவரியை காண்பித்து ஆடம்பர கார் ஒன்றை வாங்கினார். இதில் அவருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது என்றாலும், நீதி மன்றத்தில் சமரசம் பேசி நிம்மதி பெற்று கொண்டார்.
கேரள அரசு
கேரள அரசு இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த விவகாரத்தை தூசி தட்டி எடுத்துள்ளதோடு, அமலா பால் வரி ஏய்ப்பு செய்தாரா என்று விசாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறதாம். இதற்கிடையில் அமலா பால் , அமைதியைத் தேடி தான் முகவரி கொடுத்து ஏமாற்றி கார் வாங்கிய பாண்டிச்சேரியில் வாழ ஆசைப்பட்டு வந்து சேர்ந்தார்.
அமைதி ஆஷ்ரம்
பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆஷ்ரம் தனக்கு பெரும் அமைதியை தந்ததாகவும், வித்தியாசமான வாழ்க்கை தனக்காக இங்கு காத்திருந்ததை இப்போதுதான் தாம் உணர்ந்து உள்ளதாகவும் கூறி இருக்கிறார். இப்போது தனக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை, இயற்கையை சார்ந்து வாழும் வாழ்க்கை ரொம்பவும் பிடித்து இருப்பதாகவும் கூறுகிறார். இதனால்தானோ என்னவோ, தான் வாங்கிய காரை கூட விற்று விட்டார்.
இமயமலை கீழ் கங்கா
இமயமலையின் கீழ் கங்கை வரைக்கும் ஆன்மீக பயணம் மேற்கொண்டு விட்டு வந்திருக்கும் அமலாபாலுக்கு, இயற்கையோடு ஒன்றி வாழ ரொம்பவும் பிடித்து இருக்கிறது. அதனால்தான், அடிக்கடி ஒரு சின்ன பேக்கில் கொஞ்சம் துணிகளை எடுத்துக் கொண்டு இயற்கை சூழ்ந்த காடுகளில் குழுவாக சமைத்து சாப்பிடுவது என்பதில் விருப்பம் அதிகமாகி இருக்கிறதாம். அடிக்கடி அமலாபால் இப்படி காடு மலைகள் என்று சென்றுவிடுவதால், அவருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பும் இயக்குநர்கள் அமலாபாலைத் தொடர்பு கொண்டால் அடிக்கடி நாட் ரீச்சபுள்னு வருதாம். ஆடை அழகிக்கு, பாவம் பிழைக்க தெரியவில்லை! .