5 டாப் இயக்குநர்கள்.. 5 கதைகள்.. அமேசான் பிரைம் 'புத்தம் புது காலை' எப்படி இருக்கிறது? #Review
சென்னை: குறும்பட பாணியில் மொத்தம் 5 கதைகள்.. 5 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். எல்லோருமே பெயர் பெற்ற இயக்குநர்கள்தான். அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'புத்தம் புது காலை' பற்றிதான் சொல்கிறோம்.
தமிழில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தில் 'ஆந்தாலஜி' டைப்பில் கதை சொல்லியது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதாவது ஒரே திரைப்படத்திற்குள் வெவ்வேறு கதைகளும், கிளைமேக்சும் வரும் வகையிலான படங்களைத்தான் ஆந்தாலஜி என்போம். அந்த வகையில் சில்லுக்கருப்பட்டியில், ஒரு கதையில் வரும் முக்கிய கதாப்பாத்திரம் இன்னொரு கதைக்குள்ளும் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டதாக இருக்கும்.
ஆனால், புத்தம் புது காலை படத்தில், அப்படியான தொடர்பு இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. அத்தோடு அது முடியும்.
"அன்பு" மறைந்திருக்கலாம்.. உன் அன்பு.. எப்போதும் உள்ளிருக்கும்.. மகனுடன் மா.சுப்பிரமணியம்!
5 கதைகள்
முதல் கதை, இளமை இதோ இதோ. இதை இயக்கியிருப்பவர், சுதா கோங்கரா. அடுத்தது, 'அவளும் நானும்' இயக்கம் - கவுதம் மேனன். காபி எனி ஒன்?- சுஹாசினி மணிரத்னம், ரீயூனியன் - ராஜீவ் மேனன், மிராக்கிள் - கார்த்திக் சுப்புராஜ். அனைத்து கதைகள் பற்றியும் சுருக்கமான விமர்சனத்தை பார்க்கலாமா.
இளமை இதோ இதோ
ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றிருப்பது, இளமை இதோ இதோ மற்றும், அவளும் நானும். அதாவது முதல் இரு கதைகள்தான். இளமை இதோ இதோ, ஜெயராம் மற்றும் ஊர்வசி ஆகிய சீனியர் நடிகர்களை லீடு ரோலாக கொண்டு நகர்கிறது. ஆனால் அதன் சுவாரசியமே, அவர்கள் மனதளவில் தங்களை இளமையாக நினைத்து மாறும் கதாப்பாத்திரம்தான். அழகான மணிரத்னம் திரைப்பட காதல் காட்சிகளை பார்ப்பது போல இருக்கிறது, இளமை தோற்றத்தில் வரும் ஹீரோ-ஹீரோயின்களின் ரொமான்ஸ்.
96 திரைப்படத்தின் ராமுவும், ஜானுவுக்கும் முறையே மகளும், மகனும் இருந்து, பிறகு வயதான காலத்தில் ராமுவும்-ஜானுவும் ஒரே வீட்டில் தங்கினால் எப்படி இருக்குமோ அப்படியான கற்பனையை தூண்டும் கதையமைப்பு.
பாசிட்டிவ்: கற்பனை இளமையின் ரொமான்ஸ்.
நெகட்டிவ்: ஈர்ப்பு இல்லாமல் நெருடலை ஏற்படுத்தும் முதியோர் காதல்.
நடிப்பு சக்கரவர்த்தி எம்.எஸ்.பாஸ்கர்
இளமை இதோ இதோ கதையை கவுதம் மேனன் இயக்கியிருப்பாரோ, பெயரை மாற்றி போட்டுவிட்டார்களோ என்று யாராக இருந்தாலும் நினைக்க தோன்றும். கதைக் களம் அவருக்கானது. ஆனால், அடுத்த கதையான 'அவளும் நானும்' கவுதம் மேனனால் இயக்கப்பட்டதாம். ஆச்சரியப்பட வைக்கும் களத்தை தேர்ந்தெடுத்துள்ளார் மனிதர். தாத்தா-பேத்திக்கு இடையேயான பாசம், தந்தை-மகளுக்கான பாசம் என நெஞ்சை பிழிந்தெடுத்துவிடுகிறார் கவுதம் மேனன். எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு இதற்கு சூட்டப்பட்ட மகுடம். அந்த காலத்திலேயே படித்து பட்டம் பெற்று நல்ல பணியில் இருந்த தாத்தா கதாப்பாத்திரத்தில் பின்னி பெடலெடுத்துள்ளார் பாஸ்கர். ஆனால் அவர் நடிப்பில் துளியும் எலைட்னெஸ் கிடையாது.
பாசிட்டிவ்: அன்பு, பாசம் மற்றும் எம்எஸ் பாஸ்கர் நடிப்பு.
நெகட்டிவ்: குறைவான கதாப்பாத்திரங்கள்
சுஹாசினி இயக்கம்
காபி எனி ஒன்? சுஹாசினி மணிரத்னத்தால் 25 வருடங்கள் கழித்து இயக்கப்பட்டது என்ற பெருமிதத்தோடு வெளியாகியுள்ளது. இந்திரா திரைப்படத்தை 1995ம் ஆண்டு இயக்கிய பிறகு, இதுதான் அவரது அடுத்த இயக்கம். சுருதி ஹாசனும் வருகிறார். ஆனால் ஓவர் எலைட்னஸ், எல்லோருமே அவரின் குடும்ப உறுப்பினர்களாக இருப்பது போன்ற தோற்றம் போன்றவை நெகட்டிவாக இருக்கிறது.
ஆன்ட்ரியா அலப்பறை
4வது கதை. ரீயூனியன். மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என காவியங்களை படைத்த ராஜீவ் மேனன் இயக்கத்தில் வந்துள்ள படம்.
ஆன்ட்ரியா நடிப்பு இதில் கவனம் ஈர்க்கிறது. தனது வகுப்பு தோழன் வீட்டில் தங்கும் நிலை அவருக்கு ஏற்படுகிறது. தோழன் டாக்டர். கொரோனா பாதித்த நோயாளியுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டதால் அவர் தனிமையில் இருக்கிறார். தோழனின் தாயுடன், தோழியாக மாறுகிறார் ஆன்ட்ரியா. இப்படியாக எங்கெங்கோ போகிறது கதை.
பாசிட்டிவ்: ஆன்ட்ரியா நடிப்பு
நெகட்டிவ்: முழுமையற்ற கதை, ஆன்ட்ரியாவின் திணிக்கப்பட்ட கவர்ச்சி ஆடைகள்.
மிராக்கிள்
5வது மற்றும் இறுதியான கதை, மிராக்கிள். கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கே உரிய கிளைமேக்ஸ் டுவிஸ்ட் இதிலும் இருக்கிறது. ஆனால் திருடப்போன இடத்திற்கு பாபி சிம்ஹாவும் அவர் கூட்டாளியும் டயரையும் ஏன் தூக்கிக் கொண்டே போனார்கள் என்பது உட்பட பல லாஜிக் மீறல்கள். கடமைக்கு எடுத்ததை போலத்தான் காட்சிகள் இருந்தன. யூடியூப் குறும்படத்தை பார்க்கும் உணர்வைத்தான் கொடுத்தது.
பாசிட்டிவ்: கிளைமேக்ஸ் ட்விஸ்ட்
நெகட்டிவ்: கிளைமேக்ஸ் தவிர்த்த மற்ற எல்லாமே நெகட்டிவ்தான்.
மொத்தத்தில் மிராக்கிள் தவிர்த்த 4 கதைகளிலுமே பாசிட்டிவாகவும்-நெகட்டிவாகவும் சொல்வது ஒரு விஷயத்தைதான்.அது எலைட்னஸ்.
நான்கிலுமே மணிரத்னம் பாணி, பணக்கார தோரணை அதிகம் இருக்கிறது. சிலருக்கு இது பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. சில கதைகள் திருடப்பட்டது என்ற புகார் வேறு கிளம்பியுள்ளதாம். எதற்கும், நீங்களே பார்த்துவிட்டு ரிசல்டை சொல்லுங்கள்.