Gokulathil Seethai Serial: ராசாவே.. ஆஹா.. அந்த காயத்ரியா இது.. மறக்க முடியாத கண்ணாச்சே அது!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் கோகுலத்தில் சீதை சீரியல் பார்த்திருக்கீங்களா.. பார்க்காதவங்க பாருங்க.. அதில் காயத்ரி நடித்துள்ளார். காயத்ரியை மறக்க முடியுமா.. அரண்மனைக் கிளி படத்தில் நடித்த அதே கண்ணழகிதான்.
சில பழைய நடிகைகள் சில பல காரணங்களுக்காக மறக்கவே முடியாதுங்க. சுகன்யா, ரேவதி, ரோகினி என பல பேர் உள்ளனர். இந்த வரிசையில் இந்த காயத்ரிக்கும் தனி இடம் உண்டு.
காயத்ரி நடித்தது என்னவோ விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு படங்கள்தான். ஆனால் ஒரே படத்தில் சூப்பர் ஹிட் ஆனவர் காயத்ரி.. அந்தக் காலத்து இளைஞர்களை தூங்க விடாமல் செய்த காந்தக் கண்ணழகி.
அரண்மனைக் கிளி
ராஜ்கிரண் நாயகனாக நடித்த படம்தான் அரண்மனைக் கிளி. இளையராஜாவின் இசைக்காகவே பேசப்பட்ட மிகப் பெரிய படம். ராஜ்கிரண் நடிப்பும் அமர்க்களமாக இருக்கும். இதில் காயத்ரி நாயகியாக நடித்திருந்தார். இவருக்கும் கிராமத்துக்கும் சம்பந்தமே இல்லை. மும்பைக்காரர். ஆனாலும் இப்படத்தில் அச்சு அசல் கிராமத்துக்காரியாக பிரமாதமாக நடித்திருந்தார் காயத்ரி.
மீசைக்காரர் ராஜ்கிரண்
காயத்ரி நடித்ததை விட அவரது முக பாவனைகள், கண்ணசைவு, உதட்டுச் சுளிப்புதான் அதிகம் நடித்திருந்தன. அந்த அளவுக்கு அமர்க்களமாக இருந்தது இவரது நடிப்புத் திறன். இவருக்கு பாடல் காட்சிகளில் நிறைய குளோசப் காட்சிகள் வைத்திருப்பார்கள். காரணம் அத்தனை அபிநயத்தை இவர் வெளிப்படுத்தி இருப்பார். யாரிடத்தில் உன் மனசு போச்சு என்கிற வரிக்கு மீசைக்காரர் என்று இவர் ராஜ்கிரணை வர்ணித்து தனக்குள் பேசிக்கொள்வது கண்கொள்ளாக் காட்சி.
ராசாவே உன்னை விட மாட்டேன்!
அதுவும் ராசாவே உன்னை விட மாட்டேன் என்ற பாடலும், பூங்குயிலே பூங்குயிலே கேளு என்ற பாடலுக்கும் இவரது கண்ணசைவும், வெட்கமும், புன்னகையும், உதட்டுச் சுளிப்பும்.. அப்பப்பா இன்றளவும் மறக்க முடியாத காட்சிகள். அத்தனை அருமையாக அசத்தியிருப்பார் காயத்ரி. இன்று வரை காயத்ரிக்கு பெரும் பெயரைப் பெற்றுக் கொடுத்த நடிப்பு இது.
இன்னும் வசீகரம்
ஆனால் காயத்ரி தொடர்ந்து நடிக்காமல் விட்டு விட்டார். அவரது நடிப்புத் திறமை பெரிய அளவில் எழாமல் போய் விட்டது.. என்ன காரணமோ.. ஆனால் இன்று டிவிக்கு வந்து விட்டார் காயத்ரி. ஜீ தமிழ் டிவியில் வரும் கோகுலத்தில் சீதை சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் காயத்ரி. ஆள் குண்டாகி விட்டார். ஆனால் அந்த கண் வசீகரம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
முடியாது காயத்ரி
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கு தனி இடத்தைப் பெற்றுக் கொடுத்த அரண்மனைக் கிளி படத்தையும், அந்த நடிப்பையும், அந்த பாடல்களையும் தான் இன்னும் மறக்கவில்லை என்று கூறும் இவர், தமிழ் ரசிகர்கள் அந்தப் பாடல்களையும், படத்தையும், தன்னையும் இன்னும் மறக்காமல் இருப்பதையும் நன்றியுடன் நினைவு கூர்கிறார் காயத்ரி.. மறக்க முடியுமாம்மா அந்த கண்ணையும், நடிப்பையும்.. என்று இப்போது வரை சிலாகித்துக் கொண்டுள்ளனர் அந்தக் காலத்து இளைஞர்கள்.