Arundhathi Serial: அருந்ததியை இத்துனூண்டு பாட்டிலில் அடைச்சு போட்டீங்களேடா!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் அருந்ததியும், தெய்வானையும்தான் கதையின் இரண்டு கண்கள் மாதிரி. ஒருவர் இல்லாவிட்டாலும், ஒரு எபிசோட் ஒளிபரப்பாவது என்பது கஷ்டம்தான்.
அருந்ததி வஞ்சகன் ஒருவனால் சீரழிக்கப்பட்டு, கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டவள். தெய்வானை முருகன் அருள் பெற்ற தெய்வாம்சம் பொருந்திய ஒரு பொண்ணு. இவளின் உதவி அருந்ததிக்கு தேவைப்படுது.
அருந்ததியின் கதையைக் கேட்ட தெய்வானை, அருந்ததிக்கு உதவி செய்ய நினைக்கிறாள். ஆனால், அவளின் இந்த நிலைமைக்கு தான் கல்யாணம் செய்து கொண்டு போயிருக்கும் ஈஸ்வரி அம்மாவின் குடும்பத்தில் ஒருவரால்தான் என்பது அதிர்ச்சியான விஷயமாக இருக்கிறது தெய்வானைக்கும், சண்முகத்துக்கும்.
சண்முகம்தான் முதலில்
அருந்ததியை கிணற்றில் தள்ளி, அவள் ஆவி வெளியில் வராமல் இருக்க, மந்திரக் கட்டுக்கள் போட்டு, அந்த கிணற்று பக்கம் யாருமே போகாமல் இருக்கிறார்கள். ஆனால், காதலியுடன் அமெரிக்காவில் இருந்து வந்த சண்முகம் இதை சவாலாக எடுத்துக்கிட்டு, மந்திர கட்டுக்களை அவிழ்த்து விட்டுடறான். வெளியில் வந்த அருந்ததி முதலில் ஆட்கொண்டது சண்முகத்தைத்தான்.
சண்முகம் தெய்வானை
அருந்ததி கிணற்றுக்குள் சண்முகத்தை இழுத்துக் கொள்ள, அப்போது தெய்வானைதான் கிணற்றுக்குள் குதிச்சு அவனை காப்பாற்றினாள். அப்போது முடிவு செய்யறாங்க சண்முகத்தின் அம்மா ஈஸ்வரி, தெய்வானை தெய்வாம்சம் பொருந்திய பொண்ணு. சண்முகத்துக்கு கல்யாணம் செய்து வைத்தால் ஜமீன் குடும்பம் தீய சக்தியிலிருந்து தப்பிக்கும் என்று. அதற்கு ஏற்ற மாதிரி காதலியும் கோச்சுக்கிட்டு போயிட, அருந்ததி அவனின் உடலுக்குள் இருக்கும்போதே சண்முகத்துக்கு தெய்வானைக்கும் கல்யாணம் நடந்துருது.
சண்முகத்துக்கு தெரிந்து
ஒரு வழியாக அருந்ததியின் கதையை சண்முகமும் நம்பி தெய்வானைக்கு உதவி செய்கிறேன் என்று சொல்றான்.அது மட்டும் இல்லாமல், தங்களது குடும்பத்தில் இது போல ஒரு தவறை யாரும் செய்து இருக்க மாட்டார்கள் என்றும் உறுதியாக நம்புகிறான். இரவில் தெய்வானையை அருந்ததி கூப்பிடுகிறாள் என்று சொல்லி வெளிக்கிளம்ப, அவளை காணாத சண்முகமும் அவளைத் தேடி செல்லும்போது, தனது சித்தியின் மகன் கதிரேசன்தான் இந்த இழிவான காரியத்தை செய்திருக்கிறான் என்பது போல க்ளூ கிடைத்து சண்முகம் அதிர்ச்சி அடையறான்.
அருந்ததி கதிரேசன்
கதிரேசன் அருந்ததியை மந்திரவாதியை வைத்து பாட்டிலில் அடைச்சு, வச்சுட்டு நிம்மதியாக இருக்க, இன்னும் கொஞ்ச நேரத்துக்குள் அவளை காப்பாற்றா விட்டால் அருந்ததி இருக்க மாட்டாள் என்கிற நிலையில், இருவரும் பாட்டிலை கண்டு பிடிக்கிறார்கள். ஆனால், அவளை வெளியில் கொண்டுவர முடியவில்லை. தெய்வானை மாந்த்ரீகம் தெரிந்தவரை வைத்து அவளை வெளியில் கொண்டு வரலாம் என்று யோசனை சொல்ல இருவரும் அந்த இரவு நேரத்தில் பாட்டிலுடன் கிளம்புகிறார்கள்.