இன்னும் எத்தனை கொலைதான் பண்ணுவீங்க... சீக்கிரம் முடிங்கய்யா.. கடுப்பேற்றும் பிரியமானவள்!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமானவளே சீரியலில் இன்னும் எத்தனை கொலைதான் செய்ய போகிறீர்கள்.
இல்லத்தரசிகள், வயதானவர்கள் என அனைவரும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை டிவி முன் ஆஜராகிவிடுவர். விளம்பர இடைவேளையின்போது சமைப்பது, பாத்திரம் துலக்குவது, போன் பேசுவது போன்ற பணிகள் நடைபெறும்.
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதை போல் வீட்டுக்கு வீடு சீரியல் வரவேற்பறை வரை வந்து செல்கின்றன. இதில் சன்டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரியமானவள் சீரியலுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
அதை தகர்த்த சீரியல்
சீரியல் என்றால் அழுகை, கள்ளக்காதல் , கொலை, கொள்ளை, கடத்தல் என காண்பிக்கப்பட்டு வந்த நிலையில் குடும்ப சித்திரமாக வலம் வந்தது பிரியமானவள் சீரியல். ஆரம்பத்தில் குடும்ப சித்திரம் போல் சென்ற இந்த சீரியலிலும் தற்போது வன்மம் புகுந்துவிட்டது.
கொலை
உமா குடும்பத்துக்கும் நந்தினியின் குடும்பத்துக்கும் இடையே தீராத பகை. நந்தினியின் வீட்டில் வீட்டு வேலை செய்தவர்கள் கிருஷ்ணனும், உமாவும் காதலித்து திருமணம் செய்து கொள்வர். இதனிடையே கிருஷ்ணன் மீது நந்தினியின் அக்காள் கீதா ஆசைப்பட்டு அது நிராசையாகிவிடவே இரு குடும்பத்துக்கும் பகை முற்றி விடுகிறது. எனினும் நந்தினியின் அக்காள் கிரி எனும் போலீஸ் அதிகாரியை திருமணம் செய்து கொண்டு அந்த குடும்பத்தை பாடாய்படுத்துகிறார்.
எத்தனை வன்மம்
உமா கிருஷ்ணன் குடும்பத்தை பழிவாங்க அவரது வீட்டை ஈஸ்வரி மூலம் எழுதி வாங்கி நிற்கதியாகிவிடுகின்றனர். பின்னர் பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் தங்கள் உழைப்பின் மூலம் மீண்டும் முன்னுக்கு வருகின்றனர். பிள்ளை, மருமகள் என சந்தோஷமாக வாழ்ந்து வரும் குடும்பத்தை கெடுக்க திட்டங்களை நந்தினி தனது மாமா தர்மா மூலம் செய்து வருகிறார்.
உமா கடத்தல்
உமா குடும்பத்தில் திலீபனின் மனைவி கவிதாவை ஏற்கெனவே தர்மா விபத்து ஏற்படுத்தி கொலை செய்து விடுகிறான். இதிலும் அடங்காமல் பிரபாவை கடத்தி, உமாவை கடத்தி ஏதோதோ தகிடுதத்தத்தை டைரக்டர் செய்து லாஜிக்கே இல்லாமல் சீரியலை ஓட்டி வருகிறார்.
பீரோவுக்குள் உமா
ஏதோ பிரபாவுக்கு விஷ ஊசி போடுவாங்கலாம், பின்னர் அவனை காப்பாற்றவே முடியாது என்பார்களாம். ஆனால் கடைசியில் அவர் உயிரோடு வந்து விடுவாராம். அதுபோல் உமாவை பீரோவுக்குள் அடைத்து தர்மாவின் அடியாட்கள் கடத்தி ஏரியில் பீரோவுடன் மூழ்கடித்து அவர் பிழைத்துவிடுகிறார். என்ன லாஜிக்கோ தெரியவில்லை. இதில் போலீஸ் அதிகாரியாக வரும் ரத்னமோ போலீஸ்காரர்களை அழைத்து செல்லாமல் உமாவின் 4 மகன்களையே எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்கிறார். அதேபோல் டிஎஸ்பி சசிரேகாவும் உமாவை கண்டுபிடிக்க இசைபிரியாவை அழைத்து செல்கிறார். இது எங்காவது நடக்குமா. கொஞ்சமாவது ரியாலிட்டி வேண்டாமா.
சீரியலா இது
பிரபாவை காப்பாற்றியாகிவிட்டது. இனி நந்தினியை கண்டுபிடித்து கதையை முடித்துவிடுவார்கள் என்று பார்த்தால் ஜவ்வு போல் இழுத்து வருகிறார்கள். கவிதா, நந்தினி, அவரது அக்காள் கீதா, கருத்தப்பாண்டி என வரிசையாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அதுபோல் பூமிகா, இசை, பிரபா, உமா ஆகியோரையும் கடத்துவதாக காண்பிக்கின்றனர். குடும்ப சித்திரம் என நம்பி பார்த்த மக்களுக்கு கொலை, கடத்தல் ஆகியவற்றை பார்த்து பார்த்து வெறுப்படைந்து விட்டனர். லாஜிக்கே இல்லாத இந்த சீரியலை எப்போது முடிப்பர் என எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். மேலும் இந்த சீரியலை ஓட்ட இன்னும் எத்தனை பேரை கொலை செய்ய போகிறீர்கள் என்றும் வினவுகின்றனர். மேலும் நடராஜ், பிரபா, உமா ஆகியோர் நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எப்பதான் முடிப்பீங்க.