பிக் பாஸ்ஸ் 2: எலிமினேட் ஆன நித்யா... பாலாஜி, ஐஸ் ஹேப்பி அண்ணாச்சி!
பிக் பாஸ் 2வில் இந்த வாரம் நித்யா வெளியேற்றப் பட்டுள்ளார்.
சென்னை: நித்யாவின் வெளியேற்றத்தால் மனமுடைந்த பாலாஜிக்கு இன்ப அதிர்ச்சியாக அவரது மகளுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் சீசன் 2வில் மூன்றாவது போட்டியாளராக நேற்று வெளியேற்றப்பட்டார் நித்யா. நீண்ட இடைவெளிக்குப் பின் மனைவியுடன் மனம் விட்டுப் பேச சில நாட்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியில் இருந்த பாலாஜி, இதனால் மனமுடைந்து போனார். பின்னர் வெளியில் நண்பர் வீட்டில் இருக்கும் மகளுக்கு நித்யா வெளியில் செல்வதால் நன்மையே என தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டார்.
இது ஒருபுறம் இருக்க, கமலுடன் மேடையில் தோன்றிய நித்யா, தனது மகள் போஷிகாவை ஆர்வமுடன் தேடினார். ஆனால், வழக்கம் போல் சிறிது விளையாட்டுக் காட்டிய பிக் பாஸ் பின்னர் மகளை மேடையேற்றினார்.
நித்யா மகிழ்ச்சி:
இதனால் நித்யா பெரும் மகிழ்ச்சி அடைந்தார். போஷிகாவும் சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தாயை சந்திப்பதால் கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். ஆனால், இந்த மகிழ்ச்சி அம்மா நித்யாவுக்கு மட்டும் கிடைத்தால் போதாது என நினைத்தார் பிக் பாஸ். எனவே, நித்யா மற்றும் போஷிகா சம்மதத்துடன் பாலாஜியை அவர்கள் பாலாஜியை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
பாலாஜியும் ஹேப்பி:
அதன்படி மீண்டும் அகம் டிவி வழியே வீட்டில் இருப்பவர்களுடன் பேசத் தொடங்கினார் கமல். அப்போது தன் பாணியில் பாலாஜிக்கு போக்கு காட்டி, பின் மகளைக் காட்டினார். இதை எதிர்பாராத பாலாஜி இன்ப அதிர்ச்சியால் அழுதார்.
ஜனனி:
பாலாஜியைப் போலவே வீட்டில் இருப்பவர்களும் போஷிகாவைப் பார்த்து அழுதனர். குறிப்பாக ஜனனி, மும்தாஜ் உள்ளிட்டோர் கதறிக் கதறி அழுதனர். ஒரு சில வார்த்தைகள் பாலாஜியுடன் போஷிகாவைப் பேச வைத்தார் கமல்.
பாலாஜி லக்கி:
பிக் பாஸ் வீட்டில் தங்கி, உறவினர்களைப் பிரிந்திருக்கும் போட்டியாளர்களுக்கு பெரும்பாலும் 75 நாட்களுக்குப் பிறகு இது போன்ற இன்ப அதிர்ச்சி அளிப்பது பிக் பாஸின் வழக்கம். கடந்த சீசனிலும் இது போன்று நடந்தது நினைவுக்கூரத்தக்கது. ஆனால் இம்முறை பாலாஜிக்கு அது விரைவாகவே கிடைத்துள்ளது.
மகிழ்ச்சி:
சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு மகளுடன் பேசியதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் பாலாஜி. இது குறித்து சக போட்டியாளர்களிடம் அவர் பேசிப் பேசி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகளுடன் பேசிய மகிழ்ச்சியால், நித்யா அவ்வீட்டில் இருந்து வெளியேறிய சோக மனநிலையில் இருந்து அவர் மாறினார்.
அழுத பிள்ளை சிரித்தது:
இது ஒருபுறம் இருக்க, எலிமினேசன் லிஸ்டில் யாஷிகாவின் பெயரும் இருந்ததால், ஐஸ்வர்யா பெரும் மன வருத்தத்தில் இருந்தார். கமலுக்கு முன்பாகவும் அவர் அழுதபடியே இருந்தார். ஆனால், யாஷிகா காப்பாற்றப்பட்டு, நித்யா வெளியேறியதால் ஐஸ்வர்யா மகிழ்ச்சி அடைந்தார்.