பிக் பாஸ் 2: ஃபெப்சி ஊழியர்கள் தகராறால் கமலின் ஷூட்டிங்கில் பரபரப்பு
பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்தில் ஃபெப்சி ஊழியர்கள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு செய்ததால், கமல் கலந்து கொண்ட படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி'யில் இந்நிகழ்ச்சிக்கான படபிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்காக பிரம்மாண்டமான வீடு போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் போட்டியாளர்கள் வசித்து வருகின்றனர். அதன் அருகிலேயே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் கமல் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இங்கு தான் நடைபெறும்.
நாளைக்கான படப்பிடிப்பு:
முதல் நாள் பதிவு செய்யப்படும் காட்சிகள் தான் மறுநாள் இரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அந்தவகையில், நாளை ஒளிபரப்ப வேண்டிய எபிசோட்டிற்கான படப்பிடிப்பு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஃபெப்சி ஊழியர்கள்:
இதற்காக நடிகர் கமலும் காலையிலேயே படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார். ஆனால், கமல் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஈ.வி.பி'க்குள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்-தென்னிந்திய திரை தொழிலாளர் சங்கமான ஃபெப்சி ஊழியர்கள் நுழைந்து பிரச்சினை செய்யத் தொடங்கினர்.
பேச்சுவார்த்தை:
தமிழகத்தில் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு தங்களது ஊழியர்களையும் பயன்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் கமல் மற்றும் நிகழ்ச்சிக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக நிகழ்ச்சித் தயாரிப்புக்குழு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பரபரப்பு:
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கமலின் படபிடிப்பும் சற்று தாமதமாகத் தொடங்கியது. தற்போது எந்தப் பிரச்சினையும் இன்றி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.