பிக் பாஸ் 2 : வாயைக் கிளறிய போட்டியாளர்கள்.. விபரம் இல்லாமல் உளறிக் கொட்டிய கார்த்தி, சூரி!
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்த நடிகர் கார்த்தியும், சூரியும் வெளியில் நடப்பதை போட்டியாளர்களிடம் கூறினர்.
கடைக்குட்டி சிங்கம் பட ரிலீசையொட்டி ப்ரோமோசன் நிகழ்ச்சிக்காக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றனர் இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் கார்த்தி மற்றும் சூரி மூவரும். திருடன் போலீஸ் டாஸ்க் பிரச்சினைகளால் அமைதியிழந்திருந்த வீடு, இவர்களின் வருகையால் கலர்புல்லாக மாறியது.
அனைவரும் பளிச் சென உடை உடுத்தி, அழகாக மேக்கப் செய்திருந்தனர்.
எங்கே.. எங்கே..
ஆடல் பாடலுடன் வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி அண்ட் கோவுக்கு போட்டியாளர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் வீட்டைச் சுற்றிக் காண்பித்தனர். அப்போது அவர்கள் அனைவருமே மஹத்தின் படுக்கை எங்கே என்பதைத் தான் ஆர்வமாக விசாரித்தனர்.
சிம்பு மாதிரியே இருக்கு:
ஆண்கள் பகுதியில் கடையில் இருந்த மஹத்தின் படுக்கையைப் பார்த்து, ‘இங்கிருந்து ஏண்டா ஆட்டோ பிடிச்சு அங்க போற?' என கலாய்த்தார் பாண்டிராஜ். பின்னர், ``நீ பண்றதுல்லாம் பார்த்தா சிம்பு மாதிரியே இருக்கு" என்று மஹத்தைப் பார்த்துக் கூறினர்.
எல்லாரும் நடிக்கிறீங்க:
தனியாக சிக்கிய கார்த்தியிடம், ``ஷோ எப்படியிருக்குண்ணே?" என் நைசாக வாயைக் கிளறினார் டேனி. கார்த்தியும் பச்சப்புள்ளையாக, ``முன்ன அளவுக்கு இல்லைன்றாங்க.. இப்ப இருக்கறவங்க கிட்ட ஒரிஜினாலிட்டி இல்ல.. எல்லோரும் நடிக்கறாங்க'ன்னு மக்கள் பேசிக்கறாங்க" என்று உண்மையைப் போட்டுடைத்தார்.
கமல் :
அதைத் தான் கமல் சாரும் வாராவாரம் சொல்கிறார் என்றனர் போட்டியாளர்கள். அதன்மூலம் கார்த்தியிடம் இருந்து அவர்கள் வேறு எதையோ எதிர்பார்த்துள்ளனர் எனத் தெரிந்தது. ஆனா, வச்சுக்கிட்டா வஞ்சனை செய்றேன். நீங்க தான் கேர்புல்லா விளையாடுறீங்களே என்ற ரேஞ்சுக்கு பதில் சொல்லி நழுவினார் கார்த்தி.
மஹத் விசாரணை:
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் பாத்ரூமில் வைத்து, ‘வெளில என் இமேஜ்.. எப்படி மச்சான் இருக்கு?" என்று சூரியிடம் ஆர்வமாக விசாரித்தார் மஹத். ‘அதான் ஆண்டவன் புண்ணியத்துல.. உனக்கும் .. யாரந்த பய... ஷாரிக்கா.. அவனுக்கும் வெளிய ஒண்ணு இருக்கில்ல.. அப்புறம் ஏன் இங்க கூத்தடிக்கறீங்க..
ஆச்சர்யம்:
ஒரு பெரிய மனுஷன தூங்க விடாம.. நொய்யா.. நொய்யா .. ன்னு பேசிட்டு இருந்திருக்கீங்க.. உன் கூட சுத்தற பொண்ணும்.. ‘ஒரு மார்க்கமாத்தான் இருக்கு" என பொதுமக்களின் குரலாக பதிலளித்தார் சூரி. ஆனால், இதையெல்லாம் பார்த்த மக்களுக்குத் தான் ஆச்சர்யமாக இருந்தது.
ப்ரீ:
காரணம் முந்தைய சீசனில் இப்படியெல்லாம் வெளியில் இருந்து வருபவர்கள் வெளிப்படையாக எதையும் பேசக் கூடாது என்பதில் பிக் பாஸ் கண்டிப்பாக இருந்தார். ஆனால் இம்முறையோ பிக் பாஸ் வீடு பெங்களூரு சிறை மாதிரி ஆகிவிட்டது.
நாட்டு நடப்பு:
விஸ்வரூபம் 2 டிரெய்லர் பார்க்கிறார்கள், கடைக்குட்டி சிங்கம் பட டிரெய்லர் பார்க்கிறார்கள். நாட்டில் நடப்பதை கமல், விருந்தினர்கள் போன்றோர் போட்டியாளர்களிடம் கூறுகின்றனர். பேப்பர், பேனாகூட வைத்திருக்கிறார்கள். அடிக்கடி நேரம் குறித்து சரியாகவே பேசுகின்றனர். என்னமோ போடா மாதவா என்பது போல் வேறு வழியில்லாமல் மக்களும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கின்றனர்.