பிக்பாஸ் 2: கெத்தாக டீல் பேசிய மும்தாஜ்... கண்டுகொள்ளாத பிக்பாஸ்!
பிக்பாஸ் வீட்டில் சட்டதிட்டங்களை மதிக்காத மும்தாஜை பிக்பாஸ் கண்டிக்கவில்லை.
சென்னை : மைக்கைக் கழற்றி வைத்து விட்டு சுற்றிய மும்தாஜை பிக்பாஸ் நேரடியாக கண்டிக்காதது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் தற்போது எஜமானர்கள், உதவியாளர்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஆண் போட்டியாளர்கள் எஜமானர்களாகவும், பெண் போட்டியாளர்கள் உதவியாளர்களும் நடித்து வருகின்றனர்.
எனவே, கட்டாயம் பெண் போட்டியாளர்கள் சேலை தான் கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தங்குவதற்கென தனி அறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்தாஜ்:
ஆனால், தன்னால் மற்ற பெண்கள் உடை மாற்றும் அறையில் சேலை கட்ட இயலாது என மும்தாஜ் மறுத்து விட்டார். ஏற்கனவே முதல்நாள் இரவு சேலையுடன் படுத்துத் தூங்க முடியாது என போர்க்கொடி தூக்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.
மைக் பிரச்சினை:
தன்னை அழைத்து பிக்பாஸ் பேச வேண்டும், இல்லையென்றால் பெண்கள் அறையில் உள்ள பாத்ரூமைத் திறந்துவிட வேண்டும் என மும்தாஜ் கோரிக்கை அல்ல, பிக்பாஸிடம் டீல் பேசினார். அப்படி தன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, மீண்டும் மைக்கை மாட்டுவேன் எனக் கூறி மைக்கை கழற்றிவிட்டார்.
நோ மைக்:
இவ்வார வீட்டின் தலைவியான நித்யா, எவ்வளவோ எடுத்துக் கூறியும் மைக்கை திரும்ப மாட்ட மறுத்துவிட்டார் மும்தாஜ். பின்னர் ஒருவழியாக மனமுவந்து சேலை மட்டும் கட்டிக் கொண்டார். அதேபோல், தாமதமாக வேலைக்கு வந்ததற்காக அவருக்கு தரப்பட்ட தண்டனையையும் செய்ய மறுத்துவிட்டார்.
அறிவுரை:
ஆனால், இது எதையும் பிக்பாஸ் கண்டிக்கவேயில்லை. மாறாக, வழக்கம்போல் தலைவியை அழைத்து சில சட்டதிட்டங்களை எடுத்துரைத்தார். அதில், பாத்ரூம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. கூடவே பிக்பாஸ் வீட்டில் அனைவரும் கட்டாயம் மைக் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மதியம் வரை:
ஆனால், இது நடைபெறுவதற்குள் மதியத்திற்கு மேலாகி விட்டது. அதுவரை மைக் இல்லாமல் தான் மும்தாஜ் சுற்றி வந்தார். அவரை அக்கடிதத்தில் நேரடியாக பிக்பாஸ் கண்டிக்கவேயில்லை. அதேபோல், சக போட்டியாளர்கள் தயவு செய்து மும்தாஜை அழைத்துப் பேசுங்கள் என பிக்பாஸிடம் வேண்டுகோள் விடுத்தும் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை.
ஏன் பேசவில்லை?
ஏன் மும்தாஜை தனியாக அழைத்துப் பேசவில்லை, அல்லது மைக்கிலும் கண்டிக்கவில்லை என்ற சந்தேகம் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை மும்தாஜைப் பார்த்து பிக்பாஸ் பயப்படுகிறாரா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.