பிக்பாஸ் 2 : ’அதைக் காட்டித் தான் டிஆர்பி-யை ஏத்தணும்னு அவசியம் இல்லை’... மேடையில் கமல் கோபம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் கமல், திடீரென கோபமாகப் பேசியதால் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த கமல், திடீரென தனது குரலை உயர்த்தி கோபமாகப் பேசியது, போட்டியாளர்களை மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிக்பாஸ் சீசன் 2 மேடையில் நேற்று தனது விஸ்வரூபம் 2 படப்பாடலை கமல் வெளியிட்டார். பின்னர் இந்த சீசனின் முதல் போட்டியாளர் எலிமினேஷனும் நடைபெற்றது. பாடல் வெளியீட்டால் மகிழ்ச்சியில் இருந்த கமல், திடீரென ஆவேசமாகப் பேசினார்.
அதாவது, 'பிக்பாஸ் வீட்டின் பாத்ரூம்களில் கேமராக்கள் இல்லை. அப்படி அங்கே கேமரா வைத்து, போட்டியாளர்கள் குளிப்பதை படம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அப்படி டி ஆர்.பி.யை ஏற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர்களும் இல்லை. அப்படிப்பட்ட ஆட்களோடு நான் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன்’ என கோபமாகக் கமல் பேசினார்.
இதனால் அகம் டிவியின் வழியே கமல் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்களும், நேரில் அமர்ந்திருந்த பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
போராட்டம் நடத்திய மும்தாஜ் :
கடந்த சில நாட்களுக்கு முன்னர், எஜமானர், வேலையாள் டாஸ்க்கின் போது குளியலறையில் சேலை மாற்ற முடியாது என நடிகை மும்தாஜ் பிடிவாதம் பிடித்தார். சேலை ஈரமாகி விடும் என்பதால் அங்கு மாற்ற மாட்டேன் என அவர் விளக்கமும் கூறினார். இதற்காக மைக்கை கழற்றி விட்டு அவர் தர்ணா நடத்தினார்.
மைக் குறித்த விளக்கம்:
இது குறித்து விசாரித்த கமல், ‘மைக் என்பது போட்டியாளர்களின் பாதுகாப்புக்காகத் தான்' என விளக்கமளித்தார். கேமரா இல்லாத இடங்களில் போட்டியாளர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு அல்லது ஆபத்து ஏற்பட்டால், மைக் மூலம் அதனை பிக்பாஸ் தெரிந்து கொள்ள முடியும் என்றார் கமல்.
நெட்டிசன்கள் கேள்வி:
போட்டியாளர்கள் எப்போதும் பாத்ரூம் செல்லும்போது மைக்கை கழற்றி வைத்து விட்டுத் தான் செல்வார்கள். அப்படியானால் பாத்ரூமிற்குள் கேமரா இருக்கிறதா என நெட்டிசன்கள் இது குறித்து சமூகவலைதளப் பக்கங்களில் கேள்வி எழுப்பினர். அதோடு, இதே சந்தேகம் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களுக்கும் இருப்பதாகத் தெரிகிறது.
கமலின் விளக்கம்:
கடந்த சீசனிலும் கூட பெட்ஷீட்டுக்குள் உடை மாற்றிக் கஷ்டப்பட்டோம் என ஹாரத்தி ஒன் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த விசயங்கள் எல்லாம் கமல் காதுக்கும் எட்டியிருக்க வேண்டும். அதனால் தான் அவர், பாத்ரூம் பற்றி அப்படி காரசாரமாக விளக்கம் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.