குப்பை நிகழ்ச்சி என்று கேள்விப்பட்டிருக்கோம்.. நிகழ்ச்சியே குப்பையானது நேற்று.. அதான் பிக் பாஸ்!
அராஜகத்துடன் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா நடந்து கொண்டார்.
Recommended Video
சென்னை: குப்பை நிகழ்ச்சி என்று கேள்விப்பட்டிருக்கோம். நிகழ்ச்சியே குப்பையானது நேற்று. அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.
டாஸ்க் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது? வரைமுறை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
ஐஸ்வர்யா என்ற போட்டியாளருக்கு மகாராணியாக நடந்து கொள்ள வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்படுகிறது. சக போட்டியாளர்களாகிய பொதுமக்களுக்கு அவர் பல கட்டளைகள் இடுவாராம். அது எந்த மாதிரியான உத்தரவு வேண்டுமானாலும் இருக்குமாம். அதை பொதுமக்கள் செய்யவில்லையென்றால் உடனடியாக தண்டனைகள் வழங்குவாராம், அதுவும் எந்தமாதிரியான தண்டனைகளாகவும் இருக்குமாம். இது பிக்பாஸின் நிபந்தனை.
டிவியில் அப்பட்டம்
பிக்பாஸ் எப்போதும் டாஸ்க் என்பதை எப்போதுமே உதவாத, நாகரீகத்தின் வாடை கூட இல்லாமல் தொடர்ந்து அரங்கேற்றுவாரா? டாஸ்க் என்பது ஒருவரின் மனம், உடல், அறிவினை பக்குவப்படுத்தும், திறன்படுத்தும் செயலாக மருந்துக்காவது இருக்க வேண்டும் என்று கூட அறியாதவரா இந்த பிக்பாஸ்? ராணி என்னும் டாஸ்க் கொடுத்தால் அதை அவர்கள் சுயமாக எப்படி செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டாமா? அதைவிட்டு விட்டு பிக்பாஸ் என்பவர் என்ன செய்தார் தெரியுமா? ராணியை பற்றி அதாவது ஐஸ்வர்யாவை பற்றி அவருக்கு தெரியாமல் மற்ற போட்டியாளர்கள் தவறாகவும், கேலியாகவும் பேசுவதை ஐஸ்வர்யாவுக்கே டிவியில் போட்டு காட்டிவிட்டார்.
பிக்பாஸின் சின்னபுத்தி
ஒருவரை பற்றி ஒருவர் பின்னால் பேசுவது என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சகஜம்தானே? அந்த கேவலமான விஷயத்தை இதுவரை கண்ணால் பார்த்தும் கமல்கூட கண்டனமும், எதிர்ப்பும் தெரிவிக்காமல்தானே சிரித்து வருகிறார். டாஸ்க்கையும் கொடுத்துவிட்டு, அடுத்தவர்கள் ராணியை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை ராணிக்கே அப்பட்டமாக போட்டு காட்டுவது பிக்பாஸின் சின்னபுத்தியைத்தானே வெளிக்காட்டுகிறது? இப்படி கோர்த்துவிடுவது, போட்டு கொடுப்பது, காட்டிக் கொடுப்பது, இதெல்லாம் செய்து வருபவர்க்கு பெயரா பிக்பாஸ்? பெயருக்கும் செய்கிற ஈனத்தனமான செயலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
பாலாஜிக்கு இது தேவையா?
பாலாஜி என்பவர் பல்லாயிரக்கணக்கான நாடகங்களை மேடைகளில் அரங்கேற்றிய ஒரு கலைஞர். சினிமா, தொலைக்காட்சி என பல்வேறு களங்களில் தடம் பதித்து தன் திறமைகளை நாடறிய செய்து வருபவர். அதனால்தான் காமெடி நிகழச்சியின் நடுவர் என்ற ஜட்ஜ் பொறுப்பு அவரை தேடி வந்தது. அதன்மூலமும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்து வைத்துள்ளார். தன்னை பற்றி பின்னால் தவறாக பேசிவிட்டால் என்பதற்காக, பாலாஜியின் மீது அந்த வீட்டின் குப்பைத் தொட்டியில் உள்ள மொத்த குப்பையும் கொட்டுகிறார் ஐஸ்வர்யா. இது அத்தனையும் பிக்பாஸ் என்ற உயர்ந்த மனிதரின் கண் முன்னாலேயே நடைபெறுகிறது. அந் நிறுவனம் ஜட்ஜ் என்ற பெரிய பொறுப்பு கொடுத்து பாலாஜியை தூக்கி வைத்திருக்கவும் வேண்டாம், இப்படி குப்பைகளை கொட்டி அவரை கேவலப்படுத்தியிருக்கவும் வேண்டாம். முதலில் பாலாஜிக்கு இந்த அவமானமெல்லாம் தேவையா? ஒருவரை பற்றி பின்னால் எதற்கு பேசவேண்டும்? சின்ன வயது பிள்ளைகளிடம் இப்படி ஏன் கேவலப்பட வேண்டும்?
ஐஸ்வர்யா நியாயவாதியா?
ஐஸ்வர்யா, என்பவர் இந்த நாட்டு பெண்தானா? இந்த வயதில் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு வஞ்சமும், குரூரமும் இருக்க முடியுமா? தன்னை பற்றி பின்னால் பேசிவிட்டார்கள் என்பதற்காக இவ்வளவு ஆட்டமா போடுவது? ஐஸ்வர்யா, மற்றவர்களை பற்றி இதற்கு யாரிடமும் யாரை பற்றியும் பேசாத ஒழுக்கவாதியா? நியாயவாதியா? யாரை பற்றியும் இதுவரை பேசியதே கிடையாது என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா? மற்ற போட்டியாளர்களை பற்றி தவறாக பின்னால் பேசியிருப்பது நிரூபித்துவிட்டால் ஐஸ்வர்யா மீது மற்ற போட்டியாளர்களும் இதே பாணியை பின்பற்றலாமா?
குப்பை சம்பவம்
டாஸ்க் என்றாலும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு மட்டு மரியாதை வேண்டாமா? பெரியவர்கள், சின்னவர்கள் என்ற தராதரம் தெரியவேண்டாமா? இந்த பெண் இன்னும் வளர்ந்து 40 வயதை கடந்தால் எவ்வளவு அராஜக ராணியாக இருப்பார்? தன் சொந்த பந்தங்கள் உள்ளிட்டவரைகூட என்ன பாடு படுத்துவார்? நடிப்பு தேடி பிழைப்பு நடத்த ஊரை விட்டு ஊரு வந்த பெண்ணுக்கு டிவியில் வாய்ப்பு கொடுத்தால் அதன் நன்றிகடனா இது? ஒருவேளை எல்லாரும் சேர்ந்து திட்டமிட்டுதான் இந்த குப்பை சம்பவத்தை அரங்கேற்றினாலும் அது வன்மையாக கண்டிக்கத்தது. அருவருக்கத்தக்கது. இப்படி சிண்டுமுடியும் வேலை செய்து பிழைப்பை ஓட்டுவதை விட்டு விட்டு பிக்பாஸ் பேசாமல் வேற வேலை பார்க்கலாமே? குப்பையால் நாறிவிட்டது அந்த வீடு மட்டுமல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியும்தான்.