நித்யாவுடன் இணைந்து விட்டார் பாலாஜி.. பிக் பாஸ் செஞ்ச ஒரே நல்ல காரியம்!
பிரிந்த தம்பதியான பாலாஜி-நித்யா மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின்மூலம் பிரிந்த தம்பதியான பாலாஜி-நித்யா மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
நித்யா-பாலாஜிக்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன்பிருந்தே பிரிவினை ஏற்பட்டுவிட்டது. எதற்காக இருவரும் பிரிந்தார்கள் என்பதற்கு இரு தரப்பிலும் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.
இந்த குடும்ப விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. யார் மீது தவறு என்றே தெரியாமல் மக்கள் குழம்பினர். இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க நடிகர் சிம்புவும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதுவும் தோல்வியில்தான் முடிந்தது.
கவனித்த மக்கள்
இந்த நிலையில்தான் தம்பதி இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போட்டியாளர்களாக நுழைந்தார்கள். டி.ஆர்.பி. ரேட் ஏற்றத்தான் விஜய் டிவி இந்த தந்திரத்தை கையில் எடுத்துள்ளது என்று பார்வையாளர்கள் அனைவருமே நினைத்தார்கள். அதன்படியே ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாலாஜி-நித்யாவின் நடவடிக்கைகளை மக்கள் கொஞ்சம் ஆர்வத்துடனே கண்கள் அலைபாய்ந்து பார்த்தார்கள், உன்னிப்பாக கவனித்தார்கள்.
கமலின் அறிவுரைகள்
அப்போதுதான் ஒருசில நிஜங்களை மக்கள் உணரதொடங்கினார்கள். நித்யாவின் மீது கரிசன பார்வை விழ ஆரம்பித்தது. பாலாஜி மீது கமல் உட்பட அனைவருக்கும் கண்டன வார்த்தைகள் எழ ஆரம்பித்தன. இவர்களின் இருவருக்குள் இருக்கும் விரிசல், காரணங்கள், போன்றவற்றை கமல் கவனித்ததாலோ என்னவோ, நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே பாலாஜியை மூத்த சகோதரர் என்ற முறையில் கண்டிக்க ஆரம்பித்தார், அறிவுரைகளை அள்ளி வழங்கினார்.
அவமானத்தில் பாலாஜி
பொதுமக்கள் முன்னிலையிலும், கமலின் முன்னிலையிலும், ஏன் பெற்ற குழந்தை பௌசிகா முன்னிலையிலும் பாலாஜி ரொம்பவே அவமானப்பட்டார். போதாக்குறைக்கு ஐஸ்வரியாவின் குப்பை கொட்டும் சம்பவமும். ஒட்டுமொத்தமாக பாலாஜி தன்னை பற்றி நிறையவே உணர ஆரம்பித்திருக்கிறார். தன் மீதும் உள்ள தவறுகளை தனிப்பட்ட முறையில் யோசித்து பார்த்திருக்கிறார்.
பகிரங்க அறிவிப்பு
நிம்யா, பௌசிகாவின் நினைவும், அவர்களுடன் வாழ வேண்டும் என்ற உந்துதலும் பாலாஜிக்கு நிறையவே ஏற்பட தொடங்கியது. ஒருகட்டத்தில் ஆதங்கமாகவும் வெளிப்பட்டது. ஆனால் 9 வருடம் குடும்பம் நடத்திய நித்யாவோ, பாலாஜியின் மனம் திருந்திய பேச்சை எடுத்தவுடன் நம்பவில்லை. பாலாஜி யோசிக்கவும், தன்னை மனப்பூர்வமாக இன்னும் உணரவும் நிறைய அவகாசம் கொடுத்தார். அதன்படியே காலமும் கூடி வந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் மகளுக்காக பாலாஜியுடன் இணைவதாக பகிரங்கமாக அறிவித்தார். பாலாஜி மீண்டும் தண்ணி அடிப்பது, கெட்ட வார்த்தை பேசுவது, சந்தேகப்படுவது போன்றவற்றை விடுவார் என தான் நம்புவதாகவும் கூறினார்.
ஜெயித்தது நித்யாதான்
காலம் சிறந்த ஆசிரியர் என்பதற்கு பாலாஜியின் மனம் திருந்துதல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதில் பிக்பாஸ் மற்றும் கமலின் பங்கு அதிகமாக இருந்தாலும் நித்யாவின் அணுகுமுறை, நித்யா பாலாஜிக்கு அளித்த காலஅவகாசம், மனம் திருந்திய கணவனை மன்னித்து மீண்டும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை போன்றவையே ஜெயித்து நிற்கிறது. இன்றைய இளம் பெண்கள் நித்யாவின் இந்த செயல்பாட்டை நிச்சயம் கவனித்து கற்றுக் கொள்ள வேண்டும்!!