பிக்பாஸ் 2: ஓவியா ஆர்மி, தனிமைப்படுத்தப்பட்ட பரணி... மறக்க முடியாத முதல் சீசன்!
பிக்பாஸ் முதல் சீசனில் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்கள் பற்றிய தொகுப்பு.
சென்னை: பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பமாக உள்ள நிலையில், கடந்த சீசனில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்றது. பிக்பாஸ் வீட்டில் தங்களுக்கு பிடித்தமான நபர் பாதிக்கப்பட்ட போது கண்டனக்குரல் எழுப்பினர், அதேபோல் தங்களுக்குப் பிடிக்காத நபரை திட்டித் தீர்த்தனர்.
இப்படியாக பிக்பாஸ் போட்டியாளர்களை தங்களது சக வீட்டு உறுப்பினர்களாக கருதி, தங்களையும் பிக்பாஸ் வீட்டு போட்டியாளராக கருதி என மக்கள் பலதரப்பட்ட கலவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், இன்று இரவு முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. முதல் பாகத்தைத் தொகுத்து வழங்கிய கமலே இதனையும் தொகுத்து வழங்குகிறது.
பிக்பாஸ் சீசன் 2 தொடங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், கடந்த சீசனில் கலந்து கொண்ட பரபரப்பு போட்டியாளர்களைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பு...
ஜூலி:
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமடைந்த ஜூலியுடன், பிக்பாஸ் வீட்டிற்குள் ஆர்த்தி மற்றும் காயத்ரியால் அதிகம் சண்டைகளில் ஈடுபட்டனர். ஜூலி ஒரு பொய் கேரக்டர் என அவர்கள் வசை பாடினர். அவர்கள் சொன்னதற்கு ஏற்ப ஜூலியும் அங்கொன்றும், இங்கொன்றும் பேசி சர்ச்சைகளில் சிக்கினார். பின்னர் சில வாரங்களில் ஜூலியும், காயத்ரியும் நண்பர்களாயினர்.
பரணி:
நிகழ்ச்சிக்கு வந்த சில தினங்களிலேயே உடல்நலக் குறைவு எனக் கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் நடிகர் ஸ்ரீ. பிக்பாஸ் குடும்பத்திலிருந்து தனித்துவிடப் பட்டார் நடிகர் பரணி. அதற்கு அவரது நடவடிக்கைகளே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தீரா மன உளைச்சலுக்கு ஆளான அவர், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஓவியா:
பிக்பாஸ் என்றதுமே பலரது நினைவிற்கு முதலில் வருவது கமல் என்றால், இரண்டாம் இடம் ஓவியாவிற்குத் தான். அந்தளவிற்கு ஓவியாவின் ஒவ்வொரு அசைவையும் ரசித்த அவரது ரசிகர்கள், ஓவியா ஆர்மியை உருவாக்கி தெறிக்கவிட்டார்கள். ஒருகட்டத்தில் காதலால் பாதிக்கப்பட்டு பாதியிலேயே வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஓவியாவிற்கு ஏற்பட்டது. ஆனபோதும், ஓவியா பேசிய வார்த்தைகள் டிரெண்டிங் ஆனது, பாடல்கள் ஆனது எல்லாம் தனிக்கதை.
கணேஷ் வெங்கட்ராமன்:
வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டில் 100 நாட்களைக் கழித்தவர்களில் ஒருவரான கணேஷ் வெங்கட்ராமன், அதிகம் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாதவர். அதிகம் அவரது பெயர் அடிபட்டது முட்டைப் பிரச்சினையில் தான். இதனால் அவரது பெயருக்கு முன்னால் முட்டை அடைமொழியாக மாறியது சுவாரஸ்யமானது.
காயத்ரி, சக்தி:
ஏற்கனவே நண்பர்களாக இருந்த காயத்ரியும், சக்தியும் பிக்பாஸ் வீட்டிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவே இருந்தனர். ஒருவர் பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும்போது மற்றவர் ஆறுதல் கூறி தங்களது நட்பை நிரூபித்தனர்.
சினேகன்:
நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே தமிழ் ஆசிரியராக, வீட்டின் தலைவராக வந்த சினேகன், கடைசி வரை அதே கெத்தைத் தொடர்ந்தார். அடிக்கடி அழுது பார்வையாளர்களையும் அழ வைத்தார். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தார். இவர் தான் வெற்றியாளர் என பலரும் எதிர்பார்த்த நிலையில், பரிதாபமாக பட்டத்தை இழந்தார்.
ஆரவ், ஹரீஷ்:
பிக்பாஸ் வீட்டின் இளைஞர்கள். ஆரம்பத்தில் வந்த ஆரவ் ஆகட்டும், இடையில் வந்த ஹரீஷ் ஆகட்டும் பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளைகளாகவே வலம் வந்தனர். ஓவியா காதல் பிரச்சினையில் சிக்கிய போதும், ஆர்ப்பாட்டமில்லாமல், வார்த்தைகளை விடாமல் அமைதி காத்தார் ஆரவ். கடைசியில் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்றார்.
வையாபுரி:
வீட்டிலேயே அதிக வயதானவர் என்ற மரியாதையுடன் வலம் வந்தவர் நடிகர் வையாபுரி. ஆரம்பத்தில் வீட்டுக்குப் போகணும் என கேமராமுன் அடிக்கடி அழுதவர், பின்னாளில் பிக்பாஸ் வீட்டில் பிரிக்க முடியாத அங்கமானார்.
பிந்து மாதவி:
பிரபல நடிகையான பிந்துமாதவியால் பிக்பாஸ் வீட்டில் மற்றொரு காதல் கதை பூக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடைசி வரை இயல்பாகவே இருந்துவிட்டு வெளியேறினார். ஓவியா வீட்டை விட்டு சென்றபின், பிக்பாஸ் பார்வையாளர்களின் கண்களுக்கு அழகு பிந்து மாதவி ஆறுதல் அளித்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை.
சுஜா வருணி:
அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தவரின் நடவடிக்கைகள் ஓவியாவை ஞாபகப் படுத்தின. ஓவியாவைப் போல் மாறப் பார்க்கிறார், காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆரம்பத்தில் நல்ல முகம் காட்டிய இவர், இறுதியில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
ஆர்த்தி, நமீதா:
தனக்கு அளிக்கப்பட்ட டாஸ்க்குகளை சின்சியராக செய்து பாராட்டுகளை அள்ளியவர் ஆர்த்தி. ஜூலியுடன் சரிக்கு சரி மல்லுக்கு கட்டியவர், அப்பாவுக்காக கடைசி வரை போராடி வீட்டை விட்டு வெளியேறினார். நமீதாவும் வார்த்தைக்கு வார்த்தை சுத்தம் பேசி, பல விசயங்களில் பாகுபாடு காட்டி நம்மை முகம் சுளிக்க வைத்தார்.
ரைசா:
மேக்கப் புகழ் ரைசா, வீட்டில் யாருக்கும் ஆதரவாகவும் இல்லாமல், எதிராகவும் இல்லாமல் நடுநிலையாக வாழ்ந்தவர்களில் ஒருவர். கணேஷ் வெங்கட்ராமன் போல், அதிகம் சர்ச்சைகளில் சிக்காமல் பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்தவர். பாவம் அடிக்கடி பகலில் தூங்கி, நாயைக் கடுப்பேற்றி கத்த வைத்தார். பதிலுக்கு ரைசா நாயை திருப்பிக் கத்தியதில் நாயும் பாதிக்கப்பட்டது வேறுகதை.