பிக்பாஸ் 2: பர்ஸ்ட் முட்டை, இப்போ வெங்காயம்... சாப்பாட்டிற்காக அடித்துக் கொள்ளும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டில் வெங்காயத்திற்காக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சண்டை ஏற்பட்டது.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் எந்தப் பிரச்சினை வருகிறதோ இல்லையோ, சீசன் தோறும் கட்டாயம் சாப்பாட்டுப் பிரச்சினை வந்து விடுகிறது.
தங்க விசாலமான இடம் அமைத்துக் கொடுத்த பிக்பாஸ், ஏனோ போட்டியாளர்களுக்கு மட்டும் சாப்பாட்டை அளந்து அளந்து தான் தருகிறார். இதனால் முட்டை, கேரட் , வெங்காயம் என சாப்பாட்டிற்காக போட்டியாளர்கள் சண்டையிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.
ஏற்கனவே கடந்த சீசனில் முட்டைப் பிரச்சினையில் கணேஷ் வெங்கட்ராமன் மாட்டி சின்னாபின்னமானார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் வெங்காயப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
குடும்பச் சண்டை:
பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் பிரிந்து வாழும் ஜோடியான தாடி பாலாஜியும், அவரது மனைவியும் உள்ளனர். ஏற்கனவே வெளியில் பயங்கரமாக மோதிக் கொண்ட அவர்களை பிக்பாஸ் வீட்டில் தங்க வைத்தால் கச்சேரி களை கட்டும் என பிக்பாஸ் திட்டம் போட்டார்.
நித்யாவின் நிலை:
ஆனால், இந்த நிகழ்ச்சி முடியும் போது மனைவியுடன் சமரசமாகி சுபமான கிளைமேக்ஸ் உடன் தான் போவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் பாலாஜி. நித்யாவின் எண்ணம் என்ன என்பது தெளிவாகப் புரியவில்லை. சமயங்களில் பாலாஜியைப் பார்த்து சிரிக்கிறார், சக போட்டியாளர்கள் கலாய்த்தால் வெட்கப் படுகிறார், ஆனால் வெங்காயம் போட மட்டும் மறுத்து விட்டார்.
வெங்காயத்திற்கு நோ:
நேற்றைய பிக்பாஸில் போட்டியாளர்களுக்கு கேரட் பொரியல் செய்து கொண்டிருந்த நித்யாவிடம், அதில் சிறிது வெங்காயம் சேர்க்கும்படி கெஞ்சினார் பாலாஜி. ஆனால், அதனை மறுத்துவிட்டார் நித்யா. இதனால் வெங்காய அணிக்கு வந்த மகத், ஐஸ்வர்யா, மும்தாஜ் உள்ளிட்டோர் நித்யாவிடம் கெஞ்சிப் பார்த்தனர். ஆனால் அவர் மசியவில்லை.
பூதாகரமான பிரச்சினை:
கடைசியில் வெங்காயம் இல்லாமலேயே நித்யா கேரட் பொரியலை செய்துவிட, அதனை பாலாஜி, மும்தாஜ் தவிர மற்ற போட்டியாளர்கள் சாப்பிட்டும் முடித்து விட்டனர். ஆனால், ஏன் கேரட் பொரியலில் வெங்காயம் போடவில்லை என்பது பிக்பாஸ் வீட்டில் பூதாகரமானது. இதனால் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டனர்.