வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறாரா கமலின் ‘ரீல்’ மகள்..?
பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் தான் செல்லவில்லை என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் மூலம் தான் செல்ல இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியான செய்தியை நடிகை கஸ்தூரி மறுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 2 ஆரம்பித்து 55 நாட்களுக்கு மேல் ஆகிறது. 16 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இருந்தும் இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு விடுவார்.
இந்நிலையில், இன்று வைல்ட் கார்டு மூலம் ஒரு பிரபலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது. அதனை உறுதி செய்வது போல், ஆம் அந்தப் பிரபலம் கஸ்தூரி தான் என சமூகவலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன.
பதிவுகளால் சர்ச்சை:
சமூகவலைதளத்தில் பரபரப்பாக இயங்கி வரும் நடிகைகளுள் ஒருவர் கஸ்தூரி. தன் மனதிற்கு தவறெனப் படுவதை, ஒளிவு மறைவு இன்றி பேசக் கூடியவர். சமூகப் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது பதிவுகள் வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.
புது போட்டியாளர்:
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப் போகும் புது போட்டியாளர் இவர் தான் எனக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி தொடங்கியபோதே 16 போட்டியாளர்களில் இவரும் ஒருவராக உள்ளே செல்வதாகக் கூறப்பட்டது. ஆனால், அப்போது இத்தகவலை அவர் மறுத்திருந்தார்.
|
விமர்சனம்:
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் "பிக் பாஸ் தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உத்தேசமில்லை எனக்கு சின்ன பாஸ் தான் முக்கியம் " என்று தனது மகனின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். இது மட்டுமின்றி அவ்வப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியையும் மறைமுகமாக அவர் விமர்சித்திருந்தார்.
பிக் பாஸின் திட்டம்:
கடந்த சீசனைப் பார்த்து விட்டு போட்டியாளர்கள் மிகவும் பாதுகாப்பாக முகமூடி அணிந்து விளையாடி வருவதால், பிக் பாஸ் சீசன் 2 அவ்வளவாக விறுவிறுப்பாக இல்லை என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. இந்த சூழ்நிலையில், கஸ்தூரியை பிக் பாஸ் வீட்டில் களமிறக்குவதன் மூலம் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்காவில் இருக்கிறேன்:
ஆனால், வழக்கம் போல் இதுவும் வதந்தி தான் என உறுதி செய்துள்ளார் நடிகை கஸ்தூரி. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘தான் அமெரிக்காவில் இருப்பதாகவும், அதனால் தான் திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க இயலவில்லை' என்றும் விளக்கமளித்துள்ளார்.