விதிமுறைகளை மீறிய ‘பிக் பாஸ்’.. கமல் கண்டிப்பாரா?
போட்டியாளரிடம் ஆங்கிலத்தில் பேசி விதிமுறைகளை மீறி உள்ளார் பிக் பாஸ்.
சென்னை: நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறும் விதமாக ஆங்கிலத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிக் பாஸ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளில் முக்கியமானது, அவ்வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தமிழைத் தவிர மற்ற மொழிகளைப் பேசக் கூடாது என்பது தான். கடந்த சீசனிலும் சரி, இப்போதும் சரி, பிக் பாஸ் வீட்டில் ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசிய போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் தண்டனைகளும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று பிக் பாஸே ஆங்கிலத்தில் பேசி பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
ராணி மகாராணி டாஸ்க்:
ராணி மகாராணி டாஸ்க்கை முடித்த ஐஸ்வர்யா, பிக் பாஸுடன் பேசுவதற்காக கன்பெக்சன் அறைக்குச் சென்றார். அங்கு பொன்னம்பலம் தன் கழுத்தைப் பிடித்து நெரித்ததால் கதறி அழுதார் ஐஸ்வர்யா.
ஆங்கிலத்தில் பேசிய பிக் பாஸ்:
இதனால் தன்னிலை மறந்து போனாரா பிக் பாஸ் எனத் தெரியவில்லை, தன்னையும் அறியாமல் இரண்டு முறை ஆங்கிலத்தில் அவர் பேசினார். ‘sit back and breathe' ‘ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா, want to say something?' என்று ஆங்கிலத்தில் பிக் பாஸ் பேசியதைக் கேட்டு பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது புதுசு பிக் பாஸ்:
கடந்த சீசனிலும் சரி, இந்த சீசனிலும் இதுவரையும் சரி, நமக்குக் காண்பிக்கப்பட்ட காட்சிகளில் இதுவரை பிக் பாஸ் ஆங்கில வார்த்தைகளைப் பேசியதில்லை. ஒருவேளை தமிழ் சரிவர தெரியாத ஐஸ்வர்யாவிற்காக அவர் ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம். ஆனால், எப்போதும் கணீர் குரலில் தமிழில் பேசும் பிக் பாஸ் நேற்று ஸ்டைலாக ஆங்கிலத்தில் பேசியது அசர வைப்பதாக இருந்தது.
கண்டிப்பாரா?
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனக் கூறும் கமல், நாளை இது பற்றி பேசுவாரா? பிக் பாஸிற்கே அவர் குறும்படம் போட்டுக் காட்டுவாரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது. இல்லை வழக்கம் போல் அடுத்த வாரம் ரிலீசாக உள்ள தனது விஸ்வரூபம் படத்திற்கு புதிய விளம்பரம் மட்டும் செய்து விட்டுப் போவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.