இவை தான்... இந்தக் காரணங்கள் தான் ரித்விகாவை டைட்டில் வின்னர் ஆக்கியது!
பிக் பாஸ் சீசன் 2 வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் சீசன் 2 டைட்டில் நடிகை ரித்விகா வென்றுள்ளார்.
கடந்த ஜுன் மாதம் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 2 நேற்றோடு நிறைவு பெற்றுள்ளது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகள் பெற்று டைட்டிலை அவர் தட்டிச் சென்றுள்ளார். மக்களின் அமோக ஆதரவை அவர் பெற பல்வேறு காரணங்கள் உள்ளன.
இதோ அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்ப் பெண்:
நல்ல களையான திராவிட முகம் ரித்விகாவிற்கு. தமிழ்ப் பெண்களுக்கே உரிய சில பொதுவான குணாதிசியங்கள் பிக் பாஸ் வீட்டில் ரித்விகாவிடமே அதிகமாகக் காணப்பட்டது. இதனை வெளியில் இருந்த மக்கள் மட்டுமல்ல, வீட்டில் இருந்த சக போட்டியாளர்களுமே ஒப்புக் கொண்டனர்.
ஆடை விவகாரம்:
பிக் பாஸ் வீட்டில் அவர் தங்கியிருந்த 105 நாட்களில் ஒருநாள் கூட மற்றவர்கள் முகம் சுளிக்கும்படியான ஆடையை அவர் அணிந்திருக்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்ல இதுவரை அவர் நடித்த மெட்ராஸ், கபாலி, ஒரு நாள் கூத்து போன்ற படங்களிலும் அவர் அதே மாதிரியான ஆடைகளையே அவர் அணிந்தார்.
பிடித்தமான பெண்:
நேர்மையான, நடுத்தரக் குடும்பத்து பெண்ணாகவே தன்னை பிக் பாஸ் வீட்டில் காட்டிக் கொண்டார். ஒவ்வொரு முறை தனக்கு கிடைத்த வாய்ப்பின் போதும் தான் பட்ட கஷ்டங்களை அவர் மக்களிடம் பகிர்ந்து கொண்டார். அது பெரும்பாலும் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ கடந்து வந்த பிரச்சினைகளாகத்தான் இருக்கும். இதனாலேயே எல்லாருக்கும் பிடித்தமான பெண் ஆனார் ரித்து.
நியாயமான அணுகுமுறை:
எப்போதும் தெளிவான சிந்தனையுடன் பேசுபவர் ரித்விகா. ஒருமுறை கூட குழப்பவாதியாக தோன்றும் அளவு பிக் பாஸ் வீட்டில் அவர் பேசியதில்லை. மும்தாஜ் தனக்கான டாஸ்க்கை செய்ய மறுத்தபோதுகூட, அவரைப் பற்றி புறம் பேசாமல் அவர் பக்கத்து நியாயங்களையும் அவர் பேசியது ரித்விகா மீதான மரியாதையை மக்களிடையே அதிகரிக்கச் செய்தது.