பிக் பாஸ் 3 : இந்த தடவை மெய்யாலுமே ஓட முடியாது.. ஆனா ஒளிய முடியும்!
சென்னை: இம்முறை பிக் பாஸ் வீட்டின் அமைப்பில் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம். அதிலும் குறிப்பாக சிறை பகுதியில் நிறைய மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் டிவியில் வரும் 23ம் தேதி பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பமாக இருக்கிறது. முதல் இரண்டு சீசன்களைப் போலவே இதனையும் கமலே தொகுத்து வழங்க இருக்கிறார். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளன்று தான் யார் யார் அதில் கலந்து கொள்கிறார்கள் என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், அதற்குள் பல யூகங்கள் இணையத்தில் உலா வருகின்றன.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டின் அமைப்பில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீடு:
முதல் சீசனில் போட்டியாளர்கள் இருந்த வீட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, இரண்டாவது சீசன் வீடு உருவாக்கப்பட்டிருந்தது. முதல் சீசனில் இல்லாத ஒரு அம்சமாக இரண்டாவது சீசலில் ஒரு சிறை அறையும் சேர்க்கப்பட்டிருந்தது. அதில் தவறு செய்யும் போட்டியாளர்கள் அடைக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.
சிறை தண்டனை:
ஆனால், போன சீசனில் சிறையில் அடைக்கப் பட்டதை ஒரு தண்டனையாகவே போட்டியாளர்கள் கருதவில்லை. ஏசி வசதி மட்டும் தான் அங்கு இல்லை. மற்றபடி கழிப்பறைக்கு சென்று வர மற்ற போட்டியாளர்கள் அவர்களை சிறையில் இருந்து திறந்து விட்டு உதவி புரிந்தார்கள்.
சந்தோசம்:
போதிய வெளிச்சம், இயற்கையான காற்று என டாஸ்க்குகள் மற்றும் வீட்டில் நடக்கும் களேபரங்களில் இருந்து தப்பித்தோம்டா சாமி என நிம்மதியாக அந்த சிறையில் போட்டியாளர்கள் ஓய்வெடுத்தனர். வடிவேலு ரேஞ்சுக்கு, ‘நான் ஜெயிலுக்கு போறேன்.. நான் ஜெயிலுக்குப் போறேன்' என சந்தோசமாக அங்கு சென்றனர்.
சிறை அமைப்பு மாற்றம்:
இதனால் இம்முறை சிறை பகுதியை சற்று மாற்றியுள்ளனராம். இந்தி பிக் பாஸ் வீட்டில் உள்ளது போல், தாழ்வாக சரிவர காற்றும், வெளிச்சமும் படாதபடிக்கு அதனை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறை அறைகளும் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பார்ப்போம் இந்த முறையாவது சிறை தவறு செய்தவர்களை தண்டிக்கிறதா, திருத்துகிறதா என?