பிக் பாஸ் 3: பரணியாக மாறிய சரவணன்.. கோபக்கார கிளியான லாஸ்லியா.. போர்க்களமான பிக் பாஸ் வீடு!
பிக் பாஸ் வீட்டின் 10ம் நாளில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை நேற்று பார்த்தவர்கள் அனைவருக்கும் நிச்சயம் காது வலி வந்திருக்கும். அந்தளவுக்கு கூச்சலும், சண்டையுமாக இருந்தது.
முதல் நாளே காட்டப்பட வேண்டிய சண்டைக் காட்சிகள் இன்னமும் மிச்சம் இருந்ததால், முந்தைய தினத்தில் இருந்தே ஆரம்பித்தார் பிக் பாஸ். இந்த வாரம் கமல் குறும்படம் போட்டுக் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட சாக்ஷியின் பத்த வச்ச பிரச்சினையை நேற்று, பப்ளிக்காகவே போட்டு உடைத்து விட்டார்கள். முதலில் முகெனைக் கூப்பிட்டு இது பற்றி அவர்கள் பேசினார்கள்.
முகெனும் மீரா தன்னிடம் அப்படிச் சொல்லவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என நிரூபிக்க, நேராக மீராவிடமே சென்று முறையிட்டார். ஆனால், வழக்கம் போல் பிரச்சினை என்னவென்றே காதில் போட்டுக் கொள்ளாத மீரா, 'நீ இன்னும் வளரணும் முகென். சின்னப்புள்ளத்தனமாவே இருக்கியே’ என கத்திக் கொண்டே பாத்ரூமுக்குள் சென்று விட்டார்.
இதனால் ஆவேசமாக முகென், சற்று குரலை உயர்த்தினார். இதனை அங்கு சோபாவில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சேரன், நிலைமை விபரீதமாவதை உணர்ந்தார். முகெனும், லாஸ்லியாவும் தான் பிக் பாஸ் வீட்டில் சேரனின் செல்லப்பிள்ளைகள் ஆச்சே. எனவே, சாக்ஷி அண்ட் கோவால் முகென் ஏதும் பிரச்சினையில் சிக்கி விடக்கூடாது என நினைத்த சேரன், அவரை அழைத்து ஆசுவாசப்படுத்தினார்.
ஆனாலும் வனிதா விடுவதாயில்லை. ஆளாளுக்கு கூடிக் கூடி இந்தப் பிரச்சினை பற்றி பேசினார்கள். ஏற்கனவே, எதிரியின் எதிரி நமக்கு நண்பன் என்ற ரேஞ்சில் மதுவும், மீராவும் ஒன்று சேர்ந்தது எதிர் டீமான சாக்ஷி அண்ட் கோவுக்கு பிடிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், அவர்களுடன் லாஸ்லியாவும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்க, பதிலுக்கு வனிதாவும், ஷெரீனும் மற்றொரு பக்கம் அவர்களைப் பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தனர்.
பின் மீண்டும் தோட்டத்தில் முகெனை அழைத்து உட்கார வைத்து சாக்ஷி டீம் அவரை உசுப்பேற்றிக் கொண்டிருந்தது. இதுக்கு மேல் உன் விதி என முகென் நிலைமையை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சேரன். காதுகளுக்கு இந்த டீம் உணவு கொடுத்துக் கொண்டிருந்த வேளையில், உள்ளே தர்ஷன், மது மற்றும் லாஸ்லியா பாட்டுப் பாடிய படி இரவு உணவைச் சமைத்துக் கொண்டிருந்தனர்.
ஒருபுறம் சேரன், லாஸ்லியா போன்றோர் முகெனை சமாதானப் படுத்த, மற்றொருபுறமோ, வனிதா, சாக்ஷி என ஒரு டீம் அவரை தூண்டி விட்டுக் கொண்டே இருந்தது. பின் அனைவரையும் டைனிங் ஏரியாவுக்கு அழைத்த முகெனும், அபியும், 'நாங்கள் நல்ல நண்பர்கள்’ என விளக்கம் கொடுத்தனர். அதனை மதுமிதா அமைதியாகத் தான் கேட்டுக் கொண்டிருந்தார். இதில் பெரிய காமெடி என்னவென்றால், இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமான மீரா பெட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இழுத்து போர்த்திக் கொண்டு அவர் தூங்க, அபியின் சத்தமே போதும் என துப்பாக்கி சத்தத்தைக்கூட பிக் பாஸ் போடவில்லை.
எல்லாவற்றையும் கேட்டு முடித்த மது, சாக்ஷியையும், அபியையும் அழைத்து பேசினார். இதனால் மீண்டும் அங்கு பிரச்சினை உருவானது. ஒரு வழியாக பிரச்சினை முடிய இருந்த நேரத்தில், 'ஐயய்யோ இந்தப் பிரச்சினை அதுக்குள்ள எப்டி முடியலாம்’ எனப் பதறிப் போன வனிதா, பிளாஷ்பேக் ஒன்றைச் சொல்லி சண்டை முடிந்து விடாமல் பார்த்துக் கொண்டார்.
பாவம் இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட முகென் தான், என்ன சொல்வது எனத் தெரியாமல் இடையில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருந்தார். இந்த கூச்சல் குழப்பத்தால் நொந்து போன சரவணன், கேமரா முன் நின்று, 'என்னால முடியல. என்னை சீக்கிரம் வெளில அனுப்பிருங்க பிக் பாஸ்’ எனக் கூறினார். லாஸ்லியா இதற்கும் ஒரு படி மேலே போய், கோபத்தில் சேரை வேகமாகத் தள்ளி விட்டுவிட்டு, பாதிச் சாப்பாட்டில் அங்கிருந்து எழுந்து சென்றார்.
இதனால் பதறிப் போன கவின், உடனடியாக அவரைச் சமாதானம் செய்ய பாத்ரூமுக்கு தானும் விரைந்தார். ஆனால், நிதானமான லாஸ்லியா, தானே வெளியில் வருவதாக அவரைச் சமாதானப் படுத்தி திருப்பி அனுப்பினார்.
இப்படியாக வீடே களேபரமாகிக் கிடக்க, படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த மீரா எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பின் வடிவேலு ரேஞ்சுக்கு, 'என்னம்மா அங்க சத்தம்?’ என அசால்டாக எழுந்து வந்தார்.
பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா தனது கோப முகத்தைக் காட்டுவது இது தான் முதல்முறை என்பதால், மற்ற போட்டியாளர்கள் அனைவருமே பதறி விட்டனர். பின்னர் அவரைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினர். லாஸ்லியாவும் தனது அறிவுரைகளை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறினார். விளையாட்டுத்தனமாக ஆடிப்பாடிக் கொண்டிருந்தாலும், எவ்வளவு நிதானமாக மெச்சூர்டாக இருக்கிறார் லாஸ்லியா என்பதற்கு இந்தக் காட்சிகளே சாட்சி.
ஒரு வழியாக இந்தப் பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டது. சமையலறையில் ரேஷ்மா, ஷெரீனைக் கிண்டல் செய்து காட்டிக் கொண்டிருந்தார். மதுமிதாவோ பாத்ரூமில் இருந்த கேமராவில் அழுது கொண்டிருந்தார். இவ்வளவு காட்சிகளுக்குப் பிறகுதான் அடுத்த நாளுக்கு வந்தார் பிக் பாஸ். முதல் நாள் சண்டை போட்டு டயர்டாகி இருப்பார்கள் என்பதால் 9 மணிக்குத் தான் வேக்கப் சாங் போட்டார்கள்.
வழக்கம் போல, லாஸ்லியாவும், சாக்ஷியும் போட்டி போட்டு நடனம் ஆடினார்கள். பின்னர் பாத்ரூமில் உட்கார்ந்து அலப்பறையைக் கூட்டினர் சாக்ஷி, ஷெரீன் மற்றும் கவின். பிக் பாஸ் வீட்ல மனுசன் நிம்மதியா இருக்கற ஒரே இடம் பாத்ரூம் தான். அங்கேயும் போய் இப்படி டார்ச்சர் பண்றீங்களே என மனசுக்குள் நாம் நொந்து கொண்டோம்.
அடுத்து டெய்லி ஆக்டிவிட்டியில் காதல் மன்னன் கவின், 'காதலில் சொதப்புவது எப்படி?’ எனச் சொல்லித்தர வேண்டும் என பிக் பாஸ் கட்டளை. கவினும் சளைக்காமல் ஐடியாக்களாக எடுத்துக் கொட்டினார். நேற்றைய மதுமிதா டாஸ்க் போல் இல்லாமல் இனிதே நகைச்சுவையாக முடிந்தது இந்த ஆக்டிவிட்டி.
பின் வழக்கம்போல், தனது வம்பிழுக்கும் வேலையை ஆரம்பித்தார் வனிதா. ஆனால் இப்போது அவரது டார்கெட் சேரன். அவரும் பதிலுக்கு வனிதாவின் மூக்கை உடைத்தார். இப்படியாக களேபரமாக முடிந்தது நேற்றைய பிக் பாஸ் எபிசோட்.