பிக் பாஸ் 3: காதலைச் சொன்ன கவின்.. கதறி அழுத மீரா.. சாண்டிக்கு சர்ப்பிரைஸ் தந்த குட்டிப்பாப்பா!
பிக் பாஸ் வீட்டில் 12ம் நாள் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டின் 12ம் நாள் காதல், மோதல், அழுகை, கொண்டாட்டம் என கோலாகலமாக முடிந்தது.
குலேபா பாடலுக்கு ஆடலுடன் பிக் பாஸ் வீட்டின் 12ம் நாள் பொழுது இனிதே விடிந்தது. இப்பாடலுக்கு வழக்கத்திற்கு மாறாக நிறைய போட்டியாளர்கள் ஆடினார்கள். அதனால் லாஸ்லியாவின் நடனக் காட்சிகள் அதிகம் காட்டப்படவில்லை.
கடந்த சீசன்களில் வீட்டில் இருப்பவர்களுக்கு இங்கிருந்து போட்டியாளர்கள் குட்மார்னிங் சொல்வது வழக்கம். இம்முறை அப்படி எதுவும் இல்லையே நாம் நினைத்துக் கொண்டிருக்க, வனிதா தன் தாயான மறைந்த நடிகை மஞ்சுளாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி விட்டு, தன் குழந்தைகளுக்கு குட்மார்னிங் சொல்லி நம் குறையைத் தீர்த்து வைத்தார்.
பின் கவினும், சாக்ஷியும் ஒரு பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருமே பரஸ்பரம் தங்களது காதலை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அப்படியே கேமராவை டைனிங் ஏரியாவுக்கு திருப்பினால், அங்கு சாப்பாட்டுச் சண்டை நடந்தது அபிக்கும், ரேஷ்மாவுக்கும் இடையே.
மதுவுக்கு ரேஷ்மா செய்த ஓட்ஸ் பிடிக்கவில்லை. அதற்குப் பதில் பழைய சோறு கொடுத்தால் கூட சாப்பிடுவேன் என அதனை சாப்டாகத்தான் எடுத்துச் சொன்னார் மது. அதற்கு மதுவிடம் சாரி எல்லாம் கேட்ட ரேஷ்மா, பின்னர் வனிதாவிடம் எகிறிக் கொண்டிருந்தார். என்ன ஒரு முரண்பாடு. இதற்கு மது முன்பே தனது கோபத்தை அவர் காட்டியிருக்கலாமே எனக் கேட்கத் தோன்றியது. இதற்கிடையே மதுவை வெறுப்பேற்றுவது போலவே அபிராமி, 'நான் காலையில சோறு எல்லாம் சாப்பிட மாட்டேன்பா’ என வாலண்டியராக வண்டியில் ஏறி பேசிக் கொண்டிருந்தார்.
ரேஷ்மாவின் சத்தம் நிச்சயம் கார்டன் பகுதியில் இருந்த மதுவுக்கும் கேட்டிருக்க வேண்டும். அவர் இது பற்றி, சேரனிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக ஏனோ சேரன் ஆப் மோடிலேயே இருக்கிறார். ஒரு காட்சியில் காய்ச்சல் என போட்டியாளர்கள் பேசிக் கொண்டார்கள். மாணவர்களுக்கு தேர்வு பயம் வருவது போல, சேரனுக்கு எலிமினேசன் காய்ச்சலாக இருக்குமோ என்னவோ.
சண்டை ஒருபுறம் கவினை வெறுப்பேற்றுவதற்காக தர்ஷனை அழைத்து பொட்டு வைத்துவிடச் சொன்னார் சாக்ஷி. அதனைக் கண்டும் காணாதது போல் இருந்து கொண்டார் கவின்.
பின் லக்சரி டாஸ்க்கிற்கு போட்டியாளர்களை அழைத்தார் பிக் பாஸ். ருசியான போட்டியாக கொடுத்தார். அதாவது சாப்பாட்டு ராமன் எனப் பெயரிடப்பட்ட அந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் பிக் பாஸ் கொடுத்த உணவைச் சாப்பிட வேண்டும். இந்த டாஸ்க்கில் பாத்திமா பாபு, ரேஷ்மா மற்றும் முகென் கலந்து கொண்டனர். தங்களால் முடிந்த அளவு சாப்பிட்டு பாயிண்டுகளைப் பெற்றனர்.
இந்தப் போட்டியோடு இந்த வார லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்குகள் முடிவடைந்தது. 1880 பாயிண்டுகள் கொடுத்தார் பிக் பாஸ்.
ஒரு வழியாக லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்குகள் முடிந்தது என நினைத்திருந்த வேளையில், சாண்டியை அழைத்து ரகசிய டாஸ்க் ஒன்றைக் கொடுத்தார் பிக் பாஸ். அதாவது இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ள ஏழு பேரில் போட்டியாளர்களாகச் சேர்ந்து ஒருவரை வெளியேற்றலாம் என்பது தான் அது. பிக் பாஸ் மீராவை வெளியேற்ற ஆணையிட்டார். ஆனால், இது அந்த ஏழு பேருக்கும் தெரியக்கூடாது என்பது விதி.
அனைத்து போட்டியாளர்களும் இதனை சிறப்பாகவே செய்து முடித்தனர். பிராங்க் என்று தெரிந்தும் பாத்திமா பாபு, மீராவை தேவதை எனப் பாராட்டி அழுததெல்லாம், ப்பா மிடியல பிக் பாஸ். அஞ்சு ரூபாய்க்கு அழுகச் சொன்னா அந்தம்மா 50 ரூபாய்க்கு அழுவுதே.
இந்த டாஸ்க்கைப் பயன்படுத்திக் கொண்டு, வனிதா அண்ட் கோ மதுமிதாவை வச்சு செய்தார்கள். ஆனாலும் மது சளைக்காமல் அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். சாண்டி எச்சில் எல்லாம் தொட்டு கண்ணில் வைத்துக் கொண்டு அழுவது போல் நடித்தும், அவர் அழவில்லை என்பது நமக்கே அப்பட்டமாக தெரிந்தது. ஆனால், அதனை உணராதவர் மாதிரி மீரா ஓவராக அழுது சீன் போட்டது.. உலக மகா நடிப்புடா எனச் சொல்ல வைத்தது.
பின் இது பிராங்க் எனத் தெரிந்ததும், மீரா திரும்பவும் மகிழ்ச்சியாகி விட்டார். வனிதாவிடம் சென்று சாரியெல்லாம் கேட்டார். ஆனால், மீராவை பாத்திமா தேவதை, இறைவி என ஏகத்துக்கும் பாராட்டிய கடுப்பில் இருந்தார் வனிதா. பின் வாய் விட்டு அதனை பாத்திமாவிடமே அவர் கேட்கவும் செய்தார்.
இந்த சண்டை முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம், காரணமேயில்லாமல் அபியிடம் வாய் கொடுத்தார் மீரா. இதனால் கோபமான அபி, ஸ்மோக்கிங் ஏரியாவிற்கு சென்று தன் தோழிகளான சாக்ஷியிடமும், ஷெரீனிடம் இது பற்றி கூறினார். அடுத்த வாரம் தன்னை நாமினேட் செய்யத் தான் இப்படி தன்னிடம் வாய் கொடுத்து வம்பிழுக்கிறார் என்பது அவர் வாதம். ஆனால், ஏற்கனவே எலிமினேசன் லிஸ்டில் இருக்கும் சாக்ஷி, தன் வேதனையைப் புரிந்து கொள்ளாமல் அபி இப்படி பேசுவதால் அப்செட் ஆனார். இதனால் இருவருக்குமிடையே சிறிய விரிசல் ஏற்பட்டது. வனிதா ஒரு ஆள் பத்தாதா, மற்றவர்கள் கோடு போட்டால் அவர்தான் ரோடே போட்டு விடுவாரே.
பதினோறு மணிக்கு மேலாகியும் விளக்குகளை அணைக்கவில்லை பிக் பாஸ். என்னவென்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, நேற்று சாண்டிக்கு பிறந்தநாள் எனத் தெரியவந்தது. கேக் வெட்ட வைத்து, அவரது மகள் புகைப்படம் பிரிண்ட் செய்த தலையணை தந்து என சர்ப்பிரைஸ்களாக கொடுத்து அசத்திய பிக் பாஸ், இறுதியில் கண்ணான கண்ணே பாடலை ஓடவிட்டு, அவரது மகளின் வீடியோவைக் காட்டி சாண்டியை கதறி அழ வைத்தார்.
உங்களுக்கு கண்டெண்ட் கிடைக்கணும்ங்கறதுக்காக பிறந்தநாளும் அதுவுமா இப்படியா ஒருத்தரை கதறி அழ வைப்பீங்க என பிக் பாஸ் நன்றாகத் திட்டத் தோன்றியது நமக்கு. பிக் பாஸ் வீட்டில் எப்போதும் புன்னகை முகத்துடன் மட்டுமே வளைய வரும் சாண்டி, நேற்று கதறி அழுது சக போட்டியாளர்களை மட்டுமல்ல, நம்மையும் கலங்க வைத்து விட்டார் என்பது தான் உண்மை.
இன்று கமல் வரும் எபிசோட். குறும்படம் போடுவாரா, யாருக்கெல்லாம் குட்டு கொடுப்பார், யாரை வெளியேற்றப் போகிறார் எனப் பலத்த எதிர்பார்ப்புகள் மக்களிடையே உள்ளது.