பிக் பாஸ் 3:வனிதாவை நாய் என திட்டிய சேரன்.. சாமியாராக முடிவெடுத்த தர்ஷன்.. வீண்பழிக்கு ஆளான லாஸ்லியா
சென்னை: கொலைகாரன் டாஸ்க்கால் பிக் பாஸ் வீடு நேற்றும் கலகலப்பாக காணப்பட்டது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டுக்காக கொலைகாரன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் கட்டளைப் படி, மற்ற போட்டியாளர்களுக்குத் தெரியாமல் வனிதாவும், முகெனும் ஒவ்வொருவராகக் கொலை செய்து வருகின்றனர். இதுவரை சாக்ஷி, மோகன் வைத்யா, ஷெரீன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
17ம் நாளான நேற்று வழக்கம் போல் ஆடல் பாடலுடன் பிக் பாஸ் போட்டியாளர்கள் உற்சாகமாக தொடங்கினர். பின்னர் மீராவுக்கும் சேரனுக்கும் சண்டை உண்டானது. பாத்ரூம் பிரச்சினை தொடர்பான அந்தச் சண்டை டைனிங் ஏரியா வரை தொடர்ந்தது. பாதி சண்டையிலேயே வெடுக்கென எழுந்து சென்றார் மீரா. ஆனாலும் தன் பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொல்ல சேரன் தவறவில்லை.
சாக்ஷி வழக்கம் போல் குளித்து முடித்து மேக்கப்போடு சாப்பிட வந்து அமர, பிக் பாஸ் மீண்டும் கொலைகாரன் டாஸ்க் ஆரம்பிக்கிறது என அறிவித்தார். 'இப்போ தானே இந்த டிரஸ் மாத்தினேன்' என சலித்துக் கொண்டே பேய் உடைக்கு மாறினார் சாக்ஸி.
ஏற்கனவே இரண்டு கொலைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்த வனிதா அண்ட் கோவுக்கு நேற்று மேலும் இரண்டு கொலைகளைச் செய்யும் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டது. முதலில் ஹெரீன். தர்ஷனுக்கு அவரை முத்தம் கொடுக்க வைத்தால், அவர் கொலை செய்யப்பட்டதாக அர்த்தமாம். அடுத்ததாக ரேஷ்மா மீது கோல்ட் காபி கொட்டினால், அவரும் கொலை செய்யப்பட்டதாக அர்த்தம். பிக் பாஸ் உங்களுக்கு இந்த மாதிரி ஐடியா எல்லாம் தர்றவங்களுக்கு சிலை தான் வைக்கணும்..
இரண்டு டாஸ்க்குகளையுமே வனிதாவும், முகெனும் வெற்றிகரமாக செய்து முடித்தனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே சந்தேகம் வந்துவிடக் கூடாது என சிறிது நேரம் கழித்து, அவர்கள் கொலை செய்யப்பட்டதை அறிவித்தார் பிக் பாஸ். இருவருக்குமே அதிர்ச்சி. அவர்களை சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்லும் வேலையை சாண்டி சிறப்பாக செய்து முடித்தார்.
புதிய பேய்களின் வருகையை பழைய பேய்கள் (சாக்ஷி, மோகன்) ஆடிப்பாடிக் கொண்டாடினர். பேய்களை வெறுப்பேற்றும் பொறுப்பையும் சாண்டியே எடுத்துக் கொண்டார். மோகன் வைத்யா தான் ஓவராக டென்சன் ஆனார். பிக் பாஸிடம், 'எனக்கு கோபம் வந்துரும்.. இது தான் லிமிட்.. மிடியல..' என கதறிக் கொண்டே இருந்தார். சம்பந்தமே இல்லாமல் சாக்ஷி, இப்போதும் மது பற்றி அபிராமியிடம் புகார் தெரிவித்தார்.
அவங்க இப்போ வெறும் தேவதை இல்ல.. 'ஆன்டி' தேவதைடா!
பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்பது போல, கொலைகளைச் செய்த வனிதாவும், முகெனும் ஒன்றுமே தெரியாதது போல் அமைதியாக இருக்க, பாவம் பெரும்பாலானோர் லாஸ்லியாவையே சந்தேகப்பட்டனர். ஒரு கட்டத்தில் அவருக்கே தான் தான் அந்த கொலைகாரியோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.
பின் மாலையில் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் பிக் பாஸ். பிறகு டாஸ்க் முழுவதும் ஜாலியாகவே சென்று கொண்டிருந்தால் எப்படி, யாராவது ஏதாவது பேசினால் தானே புதிய கண்டெண்ட் கிடைக்கும்.
சாண்டி வழக்கம் போல கலகலப்பாக பேசிச் சென்றார். 'நான் செத்தா இந்த சுடுகாட்டுல புதைச்சுடாதீங்க. இல்லன்னா இந்தப் பேய்ங்க திரும்ப என்னைக் கொன்னுடும்' எனக் கூறியதெல்லாம் வேற லெவல் காமெடி. தர்ஷன் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த காதலை எல்லாம் ஷெரீன் மீது கொட்டோ கொட்டென்று கொட்டினார். இருக்கற கொஞ்சநஞ்ச பேரையும் இந்த டாஸ்க்கில் தர்ஷன் கெடுத்துக் கொள்வார் போல. சேரன் தன் பேச்சினூடே, 'கொலைகாரர்களை நாய்' எனத் திட்டினார். எப்படியும் இதற்கு வரும் நாட்களில் வனிதா பழி தீர்த்துக் கொள்வார் என எதிர்பார்க்கலாம்.
மது தன் தனிப்பட்ட கோபங்களையெல்லாம் இந்த டாஸ்க்கில் தீர்த்துக் கொண்டார். சாக்ஷி பற்றி அவர் பேசப் பேச, சாக்ஷியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே.
கொலைகாரன் டாஸ்க்கில் மும்முரமாக இருப்பதால், வனிதா யாருடனும் பிரச்னை செய்யாமல் அமைதியாகவே இருக்கிறார். இதனால் பிக் பாஸ் வீடும் முன்பு போல் அதிக சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.
சுடுகாட்டில் இன்னும் சில கல்லறைகள் காலியாக இருப்பதால், இன்றும் இன்னும் சில போட்டியாளர்கள் கொல்லப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல் வந்து கொலையாளி யார் என்பதைக் கூறுவாரா இல்லை லக்ஸரி பட்ஜெட்டின் இறுதியில் பிக் பாஸே கொலையாளியைப் போட்டுத் தந்து சிறையில் அடைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.