பிக் பாஸ் 3: சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த மீரா.. ஷாக்கான சேரன், சரவணன்.. ஆர்மியை மாற்றிய இளசுகள்!
பிக் பாஸ் வீட்டில் இரண்டாம் நாள் நடந்த சம்பவங்களின் தொகுப்பு உங்களுக்காக.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான நேற்று புதிய போட்டியாளராக மீரா மிதுன் வந்து சேர்ந்ததால், பல காட்சிகள் வேறு விதமாக மாறியதைப் பார்க்க முடிந்தது.
முதல் நாள் மட்டும் போனால் போகுது என 9 மணி வரை போட்டியாளர்களைத் தூங்க விட்ட பிக் பாஸ், இரண்டாம் நாள் 8 மணிக்கே எழுப்பி விட்டார். ரௌடி பேபி பாடலுக்கு பெரும்பாலும் அனைத்து போட்டியாளர்களுமே தங்களை அறியாமல் ஆட்டம் போட்டனர்.
பின்னர் பொங்கலுடன் அன்றைய பிரச்சினை கமகமவென ஆரம்பித்தது. எப்போதுமே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே முதல் பிரச்சினை சாப்பாட்டில் இருந்து தான் ஆரம்பிக்கும். இம்முறையும் அது மாறவில்லை. சாப்பாடு குறித்து காரசாரமாக விவாதித்துக் கொண்டார்கள். வழக்கம் போல, பாத்திமாவும், வனிதாவும் காட்சியை ஆக்கிரமித்தார்கள். பாவம் சின்னப்புள்ள போல், 'நான் சரியாத்தானே பேசினேன்’ என பிறகு பாத்ரூமில் சரி பார்த்துக் கொண்டார் சாக்ஷி. யாருக்கும் பயப்படாதே என அவருக்கு ஆறுதலாகப் பேசினார்கள் ஷெரீனும், கவினும்.
இதற்கிடையே, முந்தைய நாளின் தொடர்ச்சியாக தனது அன்பை கவினிடமே நேரடியாக கூறினார் அபிராமி. பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்துக் கூறுவதால், அபிராமியின் வார்த்தைகளை அப்படியே கவினால் நம்ப முடியவில்லை. வந்தவுடனேயே நம்மை வைத்து பிக் பாஸ் விளையாட ஆரம்பித்து விட்டாரோ என சந்தேகம் அவருக்கு. அதனால் சுதாரிப்பாக அபிராமியிடம் அவர் பேசினார்.
இது ஒருபுறம் இருக்க, லெட்டர் பாக்ஸிற்கான பெல் அடிக்கிறது. ஓடிச் சென்று அதில் இருந்த கடிதத்தை எடுத்து வருகிறார் தர்ஷன். அதில், வீட்டில் இருக்கும் நபர்களுக்கு சாண்டி பாடல் பாட கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார். சாண்டி தான் போட்டியாளர்களைக் கொடுமைப்படுத்த சரியான ஆள் என பிக் பாஸ் நினைத்து விட்டார் போலும். மோகன் வைத்யா உட்பட அனைவரையும் உட்கார வைத்து, தனக்கே உரிய முறையில் மியூசிக் கிளாஸ் எடுத்தா சாண்டி.
இப்படியாக கலகலப்பாக போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சியில் திடீரென கவின் - தர்ஷன் இருவருக்கும் ஒரு கவலை. அதாவது, வீட்டில் அன்றைய நாளிற்கான 75% தான் தண்ணீர் தான் மீதம் இருக்கிறது என அவர்கள் பேசிக் கொள்கின்றனர். முதலில் இது பற்றி மற்றவர்களுக்கு கூற வேண்டும் என நினைக்கும் அவர்கள், பின் சுயநலவாதிகளாகி தண்ணீர் தீருவதற்குள் முதலில் நாம் குளித்து, நமது கடமைகளை முடித்து விடுவோம் என ஓடுகின்றனர்.
பிற்பகல் உணவருந்தும் போது, கலகலப்பாக இருக்கும் இந்த வீடு அடுத்த வாரத்தில் யுத்தக் களமாக மாறும் என பாத்திரம் கழுவிக் கொண்டே சாண்டி கூறுகிறார். ஆனால் அதற்கு அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டியதில்லை என அன்றைய இரவே பிக் பாஸ் வேறு டிவிஸ்ட் வைத்த கதையை பிறகு பார்ப்போம்.
டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு சேரன், சரவணன் மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் பேசிக் கொண்டு உள்ளனர். அப்போது, தனது முதல் மனைவி இறந்த போது, இயக்குநர் பாலச்சந்தர் ஆறுதல்படுத்திய சம்பவம் குறித்து நெகிழ்ச்சியாக கூறுகிறார் மோகன் வைத்யா. பேசிக் கொண்டே இருக்கையில், 'எனக்கு உண்மையான அன்பு கிடைக்கவில்லை’ எனக் கூறி அழுகிறார். உடனடியாக அவரை மற்ற போட்டியாளர்கள் ஆறுதல் படுத்துகின்றனர்.
கவின் மீது அபிராமிக்கு இருக்கும் காதல் குறித்த விவாதம், வீட்டின் வேறுசில இடங்களிலும் தொடர்கிறது. படுக்கை அறையில் பாத்திமா பாபுவிடமும் இது பற்றி அபிராமி அண்ட் கோ பேசுகிறது. அப்போது அங்கு வரும் வனிதா, தனக்குத் தெரியாமல் வீட்டில் இப்படி ஒரு லவ் டிராக் ஓடிக் கொண்டிருப்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அவரிடம் 'இருக்கு ஆனா இல்ல’ என்ற ரேஞ்சுக்கு தன் கிரஷ் பற்றி விளக்குகிறார் அபிராமி.
பின்னர் சாண்டி - மோகன் வைத்யா இடையே பாடல் மோதல் நிகழ்கிறது. பலே பாண்டியா பட சிவாஜி, எம்.ஆர்.ராதா ரேஞ்சுக்கு இருவரும் பாடுகின்றனர். மற்ற போட்டியாளர்கள் வயிறு குலுங்க சிரித்து மகிழ, இனிதே அந்த மோதல் நிறைவு பெறுகிறது.
இரவில் அனைவரும் மகிழ்ச்சியாக ஆடிப் பாடிக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் சத்தமில்லாமல் ஏதோ டாஸ்க் கொடுத்திருப்பார் போல. அனைவரும் லுங்கி டான்ஸ் கெட்டப்பில் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது புதிய போட்டியாளர் வருவதை தெரிவிக்கும் விதமாக, பிக் பாஸ் பாடல் ஒன்றை ஒலிபரப்பினார். அப்போது ஸ்டைலிஷ் தமிழச்சியாக வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தார் மீரா மிதுன்.
அவரைப் பார்த்து சாக்ஷி மற்றும் அபிராமி லைட்டாக ஜெர்க் ஆனார்கள். அவளை எனக்குப் பிடிக்காது என வெளிப்படையாகவே கூறினார் சாக்ஷி. இந்த மோதலை எதிர்பார்த்து தான் மீராவை உள்ளே அழைத்து வந்திருப்பார் போல பிக் பாஸ். சரியாக மீரா உள்ளே வரும் போது, சாக்ஷிக்கு குளோசப் ஷாட் வைத்ததில் இருந்தே அவரது நோக்கம் தெளிவாக தெரிகிறது.
வீட்டிற்குள் ஏற்கனவே பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், எல்லா கட்டிலும் புல். எனவே, அவருக்கு எங்கே இடம் கொடுப்பது என்று பிக் பாஸ் குடும்பத்தினர் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர். பின்னர் மீரா ஆண்கள் பகுதியில் உறங்குவது என முடிவானது.
இதையடுத்து ஒவ்வொருவர் சொல்லும் விஷயங்களையும் செய்து காண்பித்து, மீரா மிதுனை பிக் பாஸ் வீட்டிற்குள் சேர்த்துக் கொள்ளுமாறு பிக் பாஸ் கூறுகிறார். இது தான் சாக்கு என தங்களது வெறுப்பை மீரா மீது காட்டுகின்றனர் அபிராமியும், சாக்ஷியும். தர்ஷனும், முகினும் கட்சி மாறிவிட்டது வெளிப்படையாகவே தெரிகிறது. வழக்கம் போல் லாஸ்லியா அமைதியாகவே இருந்து மனதைக் கவர்கிறார்.
சேரனைக் கட்டிப் பிடிக்க முயற்சித்து அவருக்கு ஷாக் கொடுத்தார் மீரா. இதில் பதறிப் போன சேரன், பின்னர் சுதாரித்துக் கொண்டு நிலைமையை சகஜமாக்கினார். சரவணனும் நாசுக்காக மீராவைத் தவிர்த்ததை பார்க்க முடிந்தது.
எப்படியோ ஒருவழியாக அனைவரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி,பிக் பாஸ் குடும்பத்திற்குள் ஒருவராகி விட்டார் மீரா. அதோடு விளக்குகள் அணைக்கப்படுகிறது. மீரா மிதுன் வருகையால் கலகலப்பும், காதலுமாக இருந்த பான பிக் பாஸ் மனக்கசப்பும், சலசலப்புமாக மாறியதாக பினிசிங் டச் கொடுத்து குட் நைட் சொல்லி விட்டார் பிக் பாஸ்.