பிக் பாஸ் 3: “ஹூக் மாட்டி விடுங்க.. பாத்திரம் கழுவ மாட்டேன்..” செமையா கன்டண்ட் கொடுக்கும் மீரா!
மீராவால் பிக் பாஸ் வீடே சண்டை சச்சரவுகளுடன் ரணகளமாக இருந்தது.
Recommended Video
சென்னை: புதிய போட்டியாளரான மீரா வீட்டில் உள்ள பெரும்பான்மையான போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்து, வீட்டின் முக்கிய பேசு பொருள் ஆகி இருக்கிறார்.
'சின்ன மச்சான்..’ பாடலுடன் பிக் பாஸ் சீசன் 3ன் ஐந்தாம் நாள் பொழுது இனிதே விடிந்தது. வழக்கம் போல, போட்டியாளர்கள் ஆர்வமுடன் நடனமாடினர். அப்போது தபால் பெட்டி பெல் அடிக்கிறது. ஏற்கனவே சாண்டியை பாட்டு வாத்தியாராக்கி, மோகன் வைத்யாவை டான்ஸ் மாஸ்டராக்கி என கன்னாபின்னா டாஸ்க் கொடுத்திருந்தார் பிக் பாஸ். எனவே இன்று என்ன டாஸ்க் தரப் போகிறாரோ என ஆர்வமாக எதிர்பார்த்தால், பாத்திமா பாபுவை அழைத்தனர்.
அய்யய்யோ நியூஸ் ரீடிங் சொல்லித் தரச் சொல்லப் போறாங்களோ என பயந்து போய் பார்த்தால், 'இது சிரிப்பு யோகா’ பயிற்சி. ஆளாளுக்கு விழுந்து புரண்டு சிரித்துக் கொண்டார்கள்.
பின்னர் அனைவரும் முந்தைய நாளில் பாதியில் விட்ட லக்சுரி டாஸ்க்கிற்கு புறப்பட்டனர். எப்படியும் வனிதா கதறிக் கதறி அழுதபடி இன்று ஏதோ சொல்லப் போகிறார் என்பது ஏற்கனவே நமக்கு டிரெய்லர் மூலம் தெரிந்திருந்தது. ஆனால், அதற்கு அவர் மேக்கப் எல்லாம் போட்டு கிளம்பியது தான் கொஞ்சம் காமெடியாக இருந்தது.
என்னடா இன்னும் மீரா ஒரு பிரச்சினையும் செய்யலையே என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவர் மோகன் வைத்யாவை அழைத்து தன்னுடைய ஜாக்கெட்டுக்கு ஹூக் மாட்டிவிடச் சொன்னது தெரியவந்தது. மேக்கப் போட்டுக் கொண்டே 'ஏன் இப்படிச் செய்தாய்?’ என மீராவிடம் தனியாக விசாரித்தார் கேப்டன் வனிதா. ஆனால் வழக்கம் போல் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், 'அவர் எனக்கு அப்பா மாதிரி’ என அங்கிருந்து சென்று விட்டார் மீரா.
வனிதாவை இப்படி சட்டை செய்யாமல் போகிறாரே, அவரும் அமைதியாக இருக்கிறாரே என நமக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் புலி பதுங்குவது பாயத்தான் என்பது அடுத்தடுத்த காட்சிகள் தெரிய வந்தது.
இப்போது பாத்திரம் கழுவுவதில் பிரச்சினை வெடித்தது. தன்னால் இப்போது பாத்திரம் கழுவ இயலாது என சாண்டிக்கு வேலையை மாற்றி விட்டார் மீரா. பின்னர் இரவில் தனக்கு மட்டும் அதிக பாத்திரங்கள் கழுவ வருவதாக அவர் மதுவிடம் புகார் கூறினார். அப்போது இடையில் புகுந்த வனிதா, 'வேணும்னா கக்கூஸ் கழுவப் போ’ என பழி தீர்த்துக் கொண்டார்.
இதனால் வனிதாவுக்கும், மீராவுக்கும் இடையே சண்டை மூண்டது. 'இங்க இருக்க விருப்பம் இல்லனா வீட்டுக்குப் போ’ என எகிறினார் வனிதா. இதனால் வெளியில் சென்று வழக்கம் போல், அழுகத் தொடங்கினார் மீரா. அப்போது அங்கு வந்த சாக்ஷி, மனிதாபிமானம் என்ற பெயரில் அவரைச் சமாதானம் செய்தார். ஆளாளுக்கு மீராவுக்கு ஆறுதல் சொன்னார்கள். இதைப் பார்த்த மது, வீட்டுக்குள் சென்று வனிதாவிடம், 'சமயத்திற்கு தகுந்த மாதிரி போட்டியாளர்கள் மாற்றி மாற்றி பேசுவதாக’ வருத்தப்பட்டார்.
இதனால் டைனிங் ஏரியாவில் வனிதா, மது, அபிராமி, சாக்ஷி இடையே மோதல் உண்டானது. நினைத்ததை முடித்து விட்ட சந்தோசத்தில், இந்தப் பிரச்சினைக்கும் தனக்கும் சம்பந்தமேயில்லை என்பது போல் அங்கிருந்து சாப்பாட்டை தட்டில் போட்டுக் கொண்டு வெளியில் சென்று அமர்ந்தார் மீரா. அங்கு தர்ஷனிடம் தன் பிரச்சினை பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார்.
பிறகு பிரச்சினை மேலும் பெரிதாவதை உணர்ந்த சேரன், மதுமிதாவையும், மீராவையும் அழைத்து பாத்திரம் கழுவும் பிரச்சினை பற்றி பேசினார். வழக்கம் போல், அவரையும் பேச விடாமல் மீராவே பேசி கொண்டிருந்தார். இடையில், 'எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நீதி, நேர்மை, நியாயம்’ என டயலாக் வேறு பேசினார். இதனால் கடுப்பான சேரன், பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லி, பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.
இதற்கிடையே, வனிதாவும், கவினும் லக்சுரி டாஸ்க்கிற்காக தங்களது சோகங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஏற்கனவே, பலர் அழுக வைத்து விட்டதால், இவர்களது கதைகள் அவ்வளவாக எடுபடவில்லை. ஆனாலும் கேர்ள் பிரண்டுகளை கட்டிப் பிடிக்க வைத்து சூழலை கலகலப்பாக்கினார் கவின்.
பின்னர் பாத்திரம் கழுவும் பிரச்சினை தொடர்பாக பெண் போட்டியாளர்கள் மோதிக் கொண்டதை, பாத்ரூமில் வைத்து மோகன், சரவணன், சாண்டி, கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர் கேலி செய்து பாட்டுப் பாடி கலாய்த்துக் கொண்டிருந்தனர். ஓவரா ஆடாதீங்கப்பு, போன சீசன்ல டேனியையும், மஹத்தையும் பிக் பாஸ் எப்படியெல்லாம் மோத வைத்து அடிதடி காட்சிகளை உருவாக்கியதை மறந்துட்டீங்களா?
ஆனால் நேற்றும் சரி, அதற்கு முந்தைய தினமும் சரி டிரெய்லரில் காண்பிக்கப்பட்ட பல காட்சிகள், நிகழ்ச்சியில் இல்லை. நேற்று மோகன் வைத்யாவும், தர்ஷனும் சண்டை போட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றிருந்தன. ஆனால் எபிசோடில் அது இல்லாததால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.