பிக் பாஸ் 3: வாட்டர் பாட்டிலால் அசிங்கப்பட்ட அபி.. சண்டைக்கோழியான மது.. சத்தமில்லாமல் எஸ்ஸான கமல்!
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7ம் நாள் ஒளிபரப்பில் நேற்று அதிரடியான பல சம்பவங்கள் நடைபெற்றது.
நேற்று முன் தினம் அணிந்திருந்த அதே ஆடைகளுடன் போட்டியாளர்கள் சோபாவில் அமர்ந்திருந்தனர். மற்றவர்களில் இருந்து வித்தியாசமாக பாத்திமா பாபு, பாவாடை தாவணி போன்ற உடை அணிந்திருந்தார்.
சனிக்கிழமை ஜாலியாகப் பேசிய கமல், நேற்று வந்ததுமே தன் வேலையை ஆரம்பித்தார். தமிழ் உச்சரிப்பிற்குப் பேர் போன பாத்திமா, வீட்டில் அதிகம் ஆங்கிலத்தில் பேசுவது மக்களிடையே பெரும் உறுத்தலாக இருந்தது. இதை சரி செய்யும் விதமாக திரும்ப செய்தி வாசிக்கச் சொன்னார் கமல்.
பாத்திமாவும் பிக் பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த சம்வங்களை அழகாக தொகுத்து வழங்கினார். மறக்காமல் கவினை காதல் மன்னன் எனக் குறிப்பிட்டார். அப்போது அவர் கூறிய ஒரு விசயம் பார்வையாளர்களை ஷாக் ஆக்கியது. அது என்னவென்றால், அபிராமி தனது வாட்டர் பாட்டிலுக்கு நேப்பி கட்டி விட்டு, அதனை தனது குழந்தை எனக் கொஞ்சுவதாக அவர் கூறினார். அக்குழந்தை முகெனுக்கும் தனக்கும் பிறந்ததாக அபி கூறுவதாக பாத்திமா கூறினார்.
இதுவரை அப்படி ஒரு காட்சியைக்கூட பிக் பாஸ் மக்களுக்கு காட்டவில்லை. கமலும் அது பற்றி கேட்கவில்லை. ஆனால், மதுமிதா மூலம் அவர் வேறு பிளான் வைத்திருந்தார் போலும். அதை அப்படியே செயல்படுத்தினார் மது. 'இதையெல்லாம் ஏன் சொன்னீங்க. தமிழ்ப் பொண்ணு நான். என் வீட்டுல இருக்கறவங்க எல்லாம் இதைப் பார்ப்பாங்கல்ல. நம்ம கலாச்சாரம் என்னாகுறது?' என அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டார்.
இதைக் கேட்டு அபியும், ஷெரீனும் ஆவேசமானார்கள். அபி கோபப்படுவது ஓகே, ஷெரீன் ஏன் ஆவேசமானார் என நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, 'அப்போ நானெல்லாம் தமிழ்ப் பொண்ணு இல்லையா?' என தன் கோபத்திற்கு விளக்கம் கொடுத்தார் ஷெரீன்.
சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே, கமல் அகம் டிவி வழியே உள்ளே வந்தார். அபி அழுகையால் என்ன நடந்தது என்பது தெரியாதது போல் கேட்டார் கமல். அதற்கு முன்னர் அங்கு நடந்த சண்டையை கமலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தான் உலகநாயகன் என்பதை நிரூபித்து விடுகிறார்.
அப்போது வேடிக்கையாக தான் அவ்வாறு செய்ததாக அபி கூற, கமலும் 'ஆமா யாருக்கும் பாட்டில் பிறக்காது' என நக்கல் அடித்தார். பின் வழக்கம் போல் கேப்டன் வனிதா காட்சிக்குள் வந்தார். கடைசி வரை மதுமிதா என்ன சொல்ல வருகிறார் என்பதே அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை. மதுவுக்கும் தன் தரப்பை தெளிவாக விளக்கத் தெரியவில்லை. கமல் முன்னிலையிலேயே மதுவிடம் கோபமாக சண்டை போட்டார் ஷெரீன். 'நல்லவேளை நான் தமிழ்ப் பொண்ணு இல்லை' என பிரச்சினைக்கு தீர்ப்பு சொல்லாமலேயே, நீங்களே அடித்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வாருங்கள் என விட்டு விட்டார் கமல்.
பின் மீரா கேப்டன் பற்றி புகார் கூறினார். வனிதா பேச்சால் மன வருத்தம் அடைந்ததாக அவர் கூறினார். சரி, கமல் அதைப் பற்றி வனிதாவிடம் விசாரிப்பார், ஏதாவது குறும்படம் போடுவார் என எதிர்பார்த்து மக்கள் ஏமாந்தது தான் மிச்சம். தமிழ்ப் பொண்ணு கண்டண்ட்டே இப்போதைக்கு போதும் என மீராவின் புகாரை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகக் கூறி, பேச்சை மாற்றினார் கமல்.
ஸ்டோர் ரூமில் இருக்கும் பரிசுகளை எடுத்து வந்து தங்கள் மனதுக்கு பிடித்த சக போட்டியாளர்களுக்கு கொடுக்கலாம் என அறிவித்தார். யாரும் எதிர்பார்க்காதவண்ணம், பரிசுகள் இடம் மாறியது. வீட்டிலேயே அதிகமாக மூன்று இதயங்களைப் பெற்றார் சரவணன். கவின் தனக்கு தான் பரிசு தருவார் என எதிர்பார்த்து ஏமாந்தார் அபி. அது அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
இந்தப் பரிசு பரிமாறல்களோடு கமல் பிரேக் விட, திரும்பவும் சண்டை மோட்-க்கு மாறினார்கள் போட்டியாளர்கள். மீராவுக்கு ஆதரவாகவும், மதுவுக்கு எதிராகவும் அனைத்து போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்தனர். தமிழ்ப் பொண்ணு என்றால் என்ன அர்த்தம் என்பது தான் அவர்களது பெரிய கேள்வியே. கடைசியில் பதில் சொல்ல முடியாமல் அமைதியானார் மது.
புகைப்பிடிக்கும் அறைக்குள் சென்று அபி, ஷெரீன், சாக்ஷி போன்றோர் மதுவைத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தனர். ஐஸ் மாதிரியே அழுது கொண்டிருந்தார் அபி. கடைசியில் வாக்கெடுப்பு நடத்தி, தான் ஆரம்பித்து வைத்த பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார் பாத்திமா பாபு.
பின் பிக் பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. இம்முறை கமல் முன்னிலையிலேயே அந்த தேர்தல் நடைபெற்றது. வேட்பாளர்களாக மோகன் வைத்யா, முகென், ரேஷ்மா மற்றும் மீரா களமிறங்கினார்கள். இவர்களில் அதிக வாக்குகள் பெற்று இந்த வார கேப்டன் ஆனார் மோகன். அதற்குப் பின் மீரா பேசியதாக டிரெய்லரில் காட்டிய காட்சிகளை நிகழ்ச்சியில் கட் செய்து விட்டனர்.
மதுவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தன் படுக்கையை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார் அபி. மது அவரை சமாதானம் செய்ய எடுத்த முயற்சிகள் வீணாகின. ஷெரீன் மட்டும் கொஞ்சம் சமாதானம் ஆனார். கடைசியில் தானாக புலம்பி அழுது கொண்டிருந்தார் மது.
கார்டன் ஏரியாவில் மீராவுக்கும், சேரனுக்கும் இடையே ஏதோ லடாய் போல. சேரன் திட்டிக் கொண்டிருக்க, வழக்கம் போல் மீரா அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக பினிஷிங் டச் தராமலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார் பிக் பாஸ்.