பிக் பாஸ் 3: நாமினேசனில் கழண்ட முகமூடிகள்.. ஷாக்கில் கவின், சாக்ஷி சேரன்.. பப்பியாக மாறிய மோகன்!
பிக் பாஸ் 3 வீட்டில் 8ம் நாள் நடந்த சம்பவங்கள் ஒரு பார்வை.
Recommended Video
சென்னை: இப்போது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் தங்களது சோகக்கதையைக் கூறி மற்ற போட்டியாளர்களின் பரிதாபத்தைப் பெற்றார்கள். ஆனால், நேற்றைய நாமினேஷனில் தான் ஒவ்வொருவரின் உண்மையான மனநிலை மக்களுக்கு புரிய ஆரம்பித்தது. நிஜமாகவே யார் மீது யார் யாரெல்லாம் போட்டி மனப்பான்மை கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.
ஒரு குச்சி ஒரு செல்பி என்ற பாடலுடன் குதூகலமாகத் தொடங்கியது பிக் பாஸ் வீட்டின் 8ம் நாள் காலை. முதல் வாரத்தை விட இந்த இரண்டாம் வாரத்தில் வேக்கப் சாங்கிற்கு ஸ்பெஷலாக டான்ஸ் ஆடி தனது ஆர்மியின் ஆதரவை அதிகமாக்கி வருகிறார் லாஸ்லியா. செல்லம் ஆடும் அழகைப் பார்த்து, வாயடைத்துப் போய் இப்போதெல்லாம் சில ஆண் போட்டியாளர்கள் ஆடுவதேயில்லை. ஒன்லி வேடிக்கை தான். வேக்கப் சாங்கிற்கு டான்ஸ் ஆடுவதால் பிக் பாஸ் ஸ்பெஷலாக எந்த மதிப்பெண்ணும் தர மாட்டார் தான். ஆனால், எந்தக் காட்சிகளைக் கட் செய்தாலும் சரி, நிச்சயம் இந்த டான்ஸ் காட்சிகள் நிச்சயம் எபிசோட்டில் இருக்கும். அதனால், நன்றாக சிரித்துக் கொண்டு டான்ஸ் ஆடி ரசிகர்களைக் கவர இதுவும் நல்ல சந்தர்ப்பம். இதனை லாஸ்லியாவும், சாக்ஷியும் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அடுத்ததாக வாயில் பிரஸ்ஸுடன் சாண்டி சற்று மிரட்சியுடனும், குழப்பமுடனும் கார்டன் பகுதிக்கு வந்தார். அப்படி எதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார் எனப் பார்த்தால், அவருக்கு எதிரில் மீரா. மந்திரவாதி ஸ்டைலில் வித்தியாசமாக யோகா செய்து கொண்டிருந்தார். சாண்டியும் விடாமல் அதனை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு தனக்கே உரிய ஸ்டைலில் கேமரா முன்பு, மீராவின் தியானத்தைக் கலாய்த்து கலகலக்க வைத்தார்.
பிறகு வழக்கம் போல் கவின் அண்ட் சாண்டி டீம், கேப்டன் மோகன் பாத்ரூம் வருவதைப் பார்த்து, 'வர்றாரு வர்றாரு’ என பாத்ரூம் பக்கெட்டை வைத்து இசையுடன் வரவேற்றனர். மோகனும் சற்றும் சளைக்காமல், ரியாக்ஷன் கொடுத்துக் கொண்டே வந்தார். ஆனால், அந்தப் பாடல் சம்பந்தப்பட்ட படத்தில் எந்த சிச்சுவேசனில் வரும் என அவருக்கு ஞாபகமில்லை போலும். இல்லையென்றால் காலையிலேயே ஆங்கிரி பேர்ட் ஆகி இருப்பார்.
இந்த கலகலப்பைத் தொடர்ந்து டெய்லி ஆக்டிவிட்டீஸை ஆரம்பித்தனர் போட்டியாளர்கள். நேற்று மற்ற போட்டியாளர்களுக்கு சாக்ஷி தற்காப்பு கலை சொல்லி கொடுத்தார். இதையும் ஜாலியாகவே அடிச்சுத்தூக்கு, ராஜாதி ராஜா பாடல்களுக்கு நடனம் ஆடியபடியே செய்து முடித்தனர்.
கடந்த சீசன்களில் இருந்து வேறுபட்டு, இந்த சீசனில் இதுவரை யாரும், 'வீட்டுக்குப் போகணும்’னு இன்னும் கேமராவைப் பார்த்து அழவில்லையே என மக்கள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர். இதனால் நிகழ்ச்சிக்கு திருஷ்டி பட்டு விட்டது போல. நேற்று காலையிலேயே அம்மா, அப்பா ஞாபகம் வந்து விட்டதாக சாக்ஷி கேமரா முன்னாடி நின்று அழுது கொண்டிருந்தார். முதலில் சாக்ஷி அழுது கொண்டிருந்ததைப் பார்த்தவர் தர்ஷன் தான். ஆனால், அது அவருடைய பர்சனல் என கண்டும் காணாமல் சென்று விட்டார். பின்னர் கவின் பதறிப் போய் ஓடி வந்தார். அவர் தனது தோழி சாக்ஷியை சமாதானப்படுத்தினார். இதேபோல், சாண்டியும் ஒரு காட்சியில் தனது மகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
அதைத் தொடர்ந்து முதல் லக்ஷூரி பட்ஜெட்டுக்கான முடிவு அறிவிக்கப்பட்டது. மனதை திறந்த டாஸ்க்கில் பதில்கள், நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்ததால், இந்த வாரத்திற்கு மொத்த மதிப்பெண்களும் (3200) முழுமையாக வழங்கப்பட்டது. கூச்சலும், குழப்பமுமாக ஒரு வழியாக ஷாப்பிங் செய்யப்பட்டது. அவங்க சொன்னக் கதையைக் கேட்டு அழுத மக்களுக்கும் ஏதாவது பார்த்து செய்யுங்க பிக் பாஸ்.
இப்போது தான் நேற்றைய நிகழ்ச்சியின் முக்கிய பகுதியே. இந்த சீசனின் முதல் நாமினேஷன் பிராசஸ் தொடங்கியது. அனைவரும் வந்து சோபாவில் அமர, முதல் போட்டியாளராக மதுமிதாவை அழைத்தார் பிக் பாஸ். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களாக அழைக்கப்பட்டனர். தமிழ்ப் பொண்ணு பிரச்சினைக்காகவே மதுமிதாவை பல போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர். மொத்தத்தில், மதுமிதா 6 வாக்குகள், மீரா 8 வாக்குகள், சாக்ஷி 2 வாக்குகள், கவின் 2 வாக்குகள், சரவணன் 2 வாக்குகள், சேரன் 5 வாக்குகள், பாத்திமா பாபு 3 வாக்குகள் பெற்றனர். இதனால் இந்த வார எலிமினேஷனுக்கான பட்டியலில் இவர்கள் பெயர் இடம் பெற்றது.
நேற்று வரை கொஞ்சிக் கொண்டு, அன்பைப் பொழிந்து கொண்டிருந்தவர்கள்கூட, தனது போட்டியாளராக யாரை நாமினேட் செய்கிறார்கள் என்பது தெரிய வந்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று பேசி ரொம்பவும் விவரமாகத்தான் போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள் என்பது நன்றாகவேத் தெரிந்தது.
எலிமினேஷன் பெயர்ப் பட்டியலை பிக் பாஸ் வாசிக்கவும், சேரன், கவின், சாக்ஷி போன்றோரது முகம் அதிர்ச்சி அடைந்தது. பாத்திமா பாபுவும், சரவணனும் ஒன்றையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மதுவும், மீராவும் நாங்க இல்லாமலா என ஏற்கனவே இதை எதிர்பார்த்துக் காத்திருந்ததால், அதிர்ச்சி அடையவில்லை.
ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கம் புலம்பிக் கொண்டிருந்தார்கள். 'உலகத்திலேயே பெரிய நியாயஸ்தன்னு நான் என்னைத் தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா, நான் பண்றதும் சிலருக்கு பிடிக்காம இருக்கே’ என பெரும்பாலான மனிதர்களின் மனநிலையை பிரதிபலிப்பவராக பேசினார் கவின். நிஜத்திலும் நம்மில் பலர் அப்படித்தான். அவர்களைப் பொறுத்தவரை நேர்மையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படுவர். ஆனால் இப்படிப்பட்ட எலிமினேசன் வாக்கெடுப்பு நடத்தினால் தான் அவர்களுக்கு உண்மை புரியும்.
சாக்ஷியும், கவினும் ஒரு மாதிரி புலம்பிக் கொண்டிருந்தனர் என்றால், மதுமிதாவும், சேரனும் வேற லெவலில் புலம்பினர். மதுமிதா கொஞ்சம் ஓவராகவே புலம்பினார்.
பின்னர் வீட்டில் நிலவிய டல் டோனை மாற்ற நகைச்சுவையான டாஸ்க் ஒன்றை அறிவித்தார் பிக் பாஸ். 'விடாது எடு’ எனப் பெயரிடப்பட்ட அந்த டாஸ்க்கிற்கு போட்டியாளர்கள், தங்களிடம் உள்ள ஒப்பனைப் பொருட்களைக் கொண்டு வித்தியாசமாக வரலாம் என அறிவிக்கப்பட்டது. முதலில் பிக் பாஸ் சொன்னது யருக்கும் புரியவில்லை. பின்னர் லேட்டாக புரிந்து கொண்டு, தங்கள் மேக்கப் வேலையை ஆரம்பித்தனர். இதிலும் மோகன் வைத்யா தான் ஆஸம். நிஜமாகவே க்யூட் பப்பியாகவே மாறி இருந்தார்.
ஒரு எலும்புத் துண்டுக்காக போட்டியாளர்கள் அடித்துக் கொண்டது பார்க்க கலகலப்பாக இருந்தது. ஆனால், பிக் பாஸ் டைட்டில் என்ற எலும்புத்துண்டுக்காக இப்படித்தான் அடித்துக் கொள்கிறீர்கள் என இந்த டாஸ்க் மூலம் பிக் பாஸ் மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ.