பிக் பாஸ் 3:சாண்டிக்கு தாடையில் காயம்.. அபிராமிக்கு இதயத்தில் வலி.. ரேஷ்மாவுக்கு பர்ஸ்ட் நைட் டாஸ்க்
பிக் பாஸ் முதல் நாள் கொண்டாட்டமாக முடிந்தது.
Recommended Video
சென்னை: நாம் எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்க்காத சில விசயங்களுடன் கோலாகலமாக ஆட்டம் பாட்டத்துடன் ஆரம்பித்து, அழகிய அன்புடன் முதல் நாள் பிக் பாஸ் எபிசோட் முடிந்தது.
பிக் பாஸ் வீட்டில் ரஜினி படம் இருந்தது, அதனை அகற்றி விட்டார்கள் என சர்ச்சையுடன் தான் ஆரம்பித்துள்ளது இந்த சீசன். இதனால் ரஜினி ரசிகர்களின் ஆதரவு நிகழ்ச்சிக்கு கிடைக்காமல் போய் விடக் கூடாதே என பிக் பாஸுக்கு பயம் வந்து விட்டது போல. முதல் நாள் வேக்கப் சாங்க் பேட்ட படத்தில் இருந்து போட்டு, ரஜினி ரசிகர்களை கரெக்ட் செய்து விட்டார்.
“எத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேலே” என சந்தோஷமாக எல்லாப் போட்டியாளர்களையும் கொஞ்சம் லேட்டாகவே எழுப்பி விட்டார் பிக் பாஸ். ஆனால், சில போட்டியாளர்கள் பிக் பாஸ் எழுப்பி விடுவதற்கு முன்னதாகவே எழுந்து குளித்து விட்டு அமர்ந்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் ஹாஸ்டல் அனுபவம் இருக்கும் என நினைக்கிறோம்.
பிறகு ஒரு பாட்டை போட்டு கும்பலா எல்லோரையும் பிக் பாஸ் எழுப்பி விட்ருவார். எல்லோரும் எழுந்ததும் ஆடிக் கொண்டே பாத்ரூமை நோக்கி படையெடுத்து விடுவர். பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்களுக்கு இரண்டு பாத்ரூம் தான் உள்ளது. இதனால், பாத்ரூம் வாசலில்இருக்கும் பெயிண்டிங் போல, கையில் வாளியுடன் அனைவரும் வரிசையில் நிற்க வேண்டிய தர்மசங்கடம் வந்து விடும். போன வேலையையும் நிதானமாக முடிக்க முடியாமல், அவசர அவசரமாக வெளியில் ஓடி வர வேண்டும். இந்த வம்பெல்லாம் வேண்டாம் என சிலர் காலையிலேயே சமத்துப் பிள்ளைகளாக தங்கள் கடமைகளை முடித்து இருந்தனர்.
காலைப் பாடலின் போது, நமக்கு கொஞ்சம் அதிகமாகவே ஷாக் கொடுத்தவர்கள் சாண்டியும், சாக்ஷி அகர்வாலும் தான். சாண்டி கையில் கிடைத்தவர்களை எல்லாம் உருட்டி, பிரட்டி மருத்துவ முத்தம் எல்லாம் கொடுத்து உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார். கொஞ்சம் ஆர்வக்கோளாறில் நீர் இல்லாத நீச்சல் தொட்டிக்குள் குதித்தார் சாண்டி. இதில் அவருக்கு தாடையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அதற்கு நான்கு தையல் போடப்பட்டது. முதல் நாளே இப்டி ரிஸ்க் எடுக்கலாமா சாண்டி? கொஞ்சம் கவனமா இருங்க.
வேக்கப் சாங்கிற்கு சாக்ஷியும் நன்றாகத்தான் ஆடினார். ஆனால் அவர் போட்டிருந்த ஆடை தான் கொஞ்சம் கண்ணை உறுத்துவதாக இருந்தது. மற்றபடி பாத்திமா பாபு, சேரன், வனிதா போன்றோர் மற்றவர்கள் ஆடுவதை மட்டும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தனர். வரும் நாட்களில் அவர்களும் களத்தில் இறங்குவர் என நம்பலாம்.
முதல் நாளிலேயே பிரச்சினை வரக்கூடாது என வெளியில் போர்டு மாட்டாத குறையாக இது ஆண்களுக்கு, இது பெண்களுக்கு என கழிவறைகளை என போட்டியாளர்கள் பிரித்துக் கொண்டனர்.
முதல் நாளிலேயே வீட்டிற்குள் பல குரூப்புகள் உருவாகி விட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. பெரும்பாலும் தர்ஷன், லாஸ்லியா மற்றும் முஜென் ஒரு குரூப்பாக இருந்தனர். சாண்டி, மோகன் வைத்யா, சரவணன், கவின் போன்றோர் மற்றொரு குரூப்பாக கச்சேரி வைத்தனர். அபிராமி பாத்திமா பாபுவை அம்மா அம்மா என அழைத்ததையும் பார்க்க முடிந்தது.
டாஸ்க் எதுவும் வைக்காமல் இம்முறை குலுக்கல் முறையில் இந்த வார வேலைகளை பகிர்ந்து கொண்டனர் போட்டியாளர்கள். அதன்படி முதல்வார கேப்டன் ஆனார் வனிதா. மற்றவர்களுக்கு ஒவ்வொரு துறை ஒதுக்கப்பட்டது. பாத்ரூமை சுத்தம் செய்யும் டீம், ரொம்பவே சின்சியராக தங்களுக்கான ஏரியாக்களை ஒதுக்கிக் கொண்டது.
இதற்கிடையே, அனைவரையும் லிவ்விங் ஏரியாவுக்கு அழைத்த பிக் பாஸ், தங்களது நிகழ்ச்சி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பிக் பாஸில் தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். சமையல் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தினசரி 1000 லி தண்ணீரும், கழிவறை பயன்பாட்டிற்கு ஒருவருக்கு தினசரி 100 லி தண்ணீரும், சமையலுக்கு ஒரு வாரத்திற்கு 5 கிலோ எரிபொருளும் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதற்கு போட்டியாளர்கள் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், பாத்திமா பாபுவோ, 'மீட்டர் பொருத்தியது அவல நிலை. இதற்குப் போல் கை தட்டுகிறீர்களே’ என கடிந்து கொள்கிறார். உடனடியாக அதற்கு விளக்கம் கூறி, பாத்திமாவின் வாயை அடைத்தார் சேரன். அப்போது பாத்திமாவின் முக ரியாக்சனைப் பார்க்க வேண்டுமே. (சேரன் மைண்ட் வாய்ஸ்: என்கிட்டயேவா..)
இதையடுத்து மளிகைப் பொருட்கள் வந்தது. அனைவரும் ஓடிச் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் பிற்பகல் வேளையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்கின்றனர். பிறகு, காயம்பட்ட சாண்டியின் நிலை குறித்து கிண்டலாக கவின் பேட்டி எடுக்க, அதனை செய்தியாளராக லாஸ்லியா வாசிக்கிறார்.
உண்ட மயக்கத்தில் சாக்ஷியும், வனிதா லைட்டாக தூங்க, டுமீல் டுமீல் என சத்தம். பார்த்தால் முந்தைய சீசன்களில் இருந்த நாய்க்கு பிக் பாஸ் ரிட்டையர்மெண்ட் கொடுத்து விட்டார் போலும். இம்முறை துப்பாக்கிச் சத்தம் தானாம்.
லாஸ்லியாவிற்கு முன் முகன் ராவ்வும், தர்ஷனும் போட்டி போட்டு பாடுகின்றனர். ஏனோ ராஜகுமாரன் படத்தில் வடிவேலு தங்கை சுயம்வரம் நம் கண்முன் வந்து செல்கிறது. அதனைத் தொடர்ந்து லாஸ்லியா, தர்ஷன், முகன் ராவ், மதுமிதா ஆகியோர் ”சாப் சலி சாப் சலி சாப் சாப் சாப்” என்ற கேம் விளையாடுகின்றனர். பார்க்கும் நமக்கு பைத்தியம் பிடிக்காதக் குறை தான்.
பின் கார்டன் ஏரியாவில் பாட்டுக் கச்சேரி நடக்கிறது. மோகன் வைத்யா, 'சின்னஞ்சிறு கிளியே..’ என உருகிக் கொண்டிருக்க, மறுபுறம் கழிவறை வளாகத்தில், ”என் வீட்டு குத்துவிளக்கே..” என சாக்ஷி, ஷெரின் மற்றும் கவின் கோஷ்டி குத்தாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. இது இரண்டையும் மாற்றி மாற்றிக் காட்டி, ஏதோ சொல்ல வருகிறார் பிக் பாஸ் என்பது தெரிகிறது. அது என்ன என்பது இனி வரும் நாட்களில் இன்னும் பார்வையாளர்களுக்குத் தெளிவாகும்.
அடுத்ததாக பிக் பாஸ் ஒரு டாஸ்க் தருகிறார். அது என்னவென்றால், ஒவ்வொரு போட்டியாளரையும் சர்ச்சைக்குரிய வகையில் மற்ற போட்டியாளர்கள் கேள்வி கேட்க வேண்டும். பதிலில் திருப்தி ஏற்பட்டால், அவரை மீண்டும் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். சேரனின் டான்ஸும், மாண்டியின் நக்கலும் ரசிக்கும்படி இருந்தது. கவினின் கக்கூஸ் கலாட்டா வேற லெவல். ஆனா, பர்ஸ்ட் நைட் டாஸ்க்கெல்லாம் கொஞ்சம் ஓவர் பாஸ்.
பின்னர் இரவு உணவுக்கு பின்னர் அனைவரும் உறங்கச் செல்கின்றனர். ஆனால், அபிராமியும், ஷெரீனும் மட்டும் கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்தே கவின் மீது தனக்கு க்ரஷ் என்கிறார் அபிராமி. கவின் மிக அழகானவர், சிறப்பாக செயல்படுகிறார் என்றெல்லாம் பேசிக் கொள்கின்றனர். அப்போது அங்கு ஷாக்சியும் சேர்ந்து கொள்ள, பேச்சு சுவாரஸ்யமாகச் செல்கிறது.
அப்பாடா இந்த சீசனுக்கு ஒரு காதல் ஜோடி ரெடி என்ற நிம்மதியில் பிக் பாஸும் எல்லோருக்கும் குட் நைட் சொல்லி விடை பெற்றுக் கொள்கிறார்.
இரண்டாவது சீசன் கற்றுக் கொடுத்த பாடத்தால், வழவழா கொழகொழா கதையெல்லாம் வேண்டாமென்று முடிவு செய்து விட்டார் போலும் பிக் பாஸ். நறுக்கென ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்து விட்டனர். இதனால் பார்ப்பதற்கும் சுவாரஸ்யமாக இருந்தது. இனி வரும் எபிசோட்களிலும் எடிட்டர் இதே பார்முலாவைப் பாலோ பண்ணினால் பிக் பாஸ் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.