ஆஹா.. மக்கள் திருந்திட்டாங்க போலயே.. கமல் பேச்சு சொல்வது என்ன??
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஐஸ்வர்யா ஏன் வெளியேற்றப்படவில்லை?
சென்னை: பிக்பாஸ் என்னும் வர்த்தக மாயாஜால உலகத்திலிருந்து மற்றொரு அப்பாவி வெளியேறுகிறார்!!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே அதிகமாக விமர்சிக்கப்பட்டதும், மக்களின் வெறுப்பை சம்பாதித்ததும் ஐஸ்வர்யாதான். உண்மையிலேயே இந்த பெண்ணின் இயல்பு என்ன என்றே தெரியவில்லை. எப்படி வளர்க்கப்பட்டுள்ளார் என்பதே கணிக்க முடியவில்லை.
திடீரென ஆடுவது, திடீரென பாடுவது, திடீரென குழந்தை போல் பேசுவது, திடீரென நாட்டாமைத்தனம் செய்வது, திடீரென அழுதுகொள்வது என தான் இன்னதென தீர்மானிக்க முடியாத அளவுக்கு நடந்து கொண்டு வருகிறார். இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக இவர் சொல்லும் பொய்கள்! நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா சொன்ன பொய்கள் அப்பட்டமாக குறும்படமாக காட்டப்படவும் செய்தார்கள்.
மலிவான யுக்தி
இந்த குறும்படங்கள் காட்டப்படுவதில் ஒரு சந்தேகம் எழுகிறது. குறும்படங்கள் என்றாலே பார்வையாளர்களுக்கு ஒரு குஷிதான். யார் எப்படி மாட்டப்போகிறார்கள், மாட்டிக் கொண்டு எப்படியெல்லாம் விழிக்க போகிறார்கள், என்னும் உணர்வுகளை பார்க்க மலிவான ஆசை இருக்கத்தான் செய்கிறது. எனவே இந்த யுக்தியை பிக்பாஸ் பயன்படுத்தி கொண்டு வருகிறது. இப்படி குறும்படங்கள் போட்டு நம்மை எல்லார் முன்னிலையிலும் நாறடித்து விடுவார்கள் என்று பங்கேற்ற அனைவருக்கும் தெரியும்தானே?
கைதட்டி ஆரவாரம் எதற்கு?
அப்படி நிறைய பேர் குறும்படங்கள் போடப்பட்டு அசிங்கப்பட்டதையும் பார்த்திருப்பார்கள்தானே? பிறகு எப்படி துணிந்து பொய் சொல்ல மனசு வருகிறது? நம் பொய்கள் எல்லாம் குறும்படத்திற்கு உதவும் என்பதாலா? குறும்படத்தினால் டிஆர்பி எகிறும் என்பதாலா? வேண்டுமென்றே பொய்களை எல்லாம் சொல்லி இப்படி வியாபாரம் சூடு பிடிக்க போட்டியாளர்களும், பிக்பாசும் நடந்து கொள்ள வேண்டுமா? இதெல்லாம் ஒரு யுக்தி என்று கூட தெரியாமல் குறும்படம் என்றதும் கைதட்டி ஆரவாரம் செய்யும் மக்களை என்னதான் செய்வது?
அப்பிராணி சென்றாயன்
சரி... டிஆர்பிக்காக இந்த பொய்கள், குறும்படங்கள், போன்றவை அரங்கேற்றப்படவில்லை என்றே வைத்து கொண்டாலும், ஐஸ்வர்யா அடுக்கடுக்கான சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பிக்பாஸ் அவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? இதுவரை ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை இந்த ஐஸ்வர்யா செய்திருக்கிறாரா? வஞ்சமும், சூழ்ச்சியும், பொய்யும், நடிப்பும், அகம்பாவமும் நிறைந்த இந்த பெண்ணை ஏன் எலிமினேட் செய்ய பிக்பாஸ் தயங்க வேண்டும்? இவ்வளவு தவறு செய்த ஐஸ்வர்யாவை சேஃப்டி செய்துவிட்டு, வழக்கம்போல் அடுத்த அப்பிராணியான சென்றாயனை வெளியேற்றுவதாக கூறப்படுகிறது.
ரெட் கார்டு
ஐஸ்வர்யா மேல் மக்களுக்கு இருக்கும் அதிருப்தி கமலுக்கு தெரியும். இதற்கும் மேல் ஐஸ்வர்யாவை சேஃப்டி செய்தால் நம்மை மக்கள் தூர்வார ஆரம்பித்துவிடுவார்கள் என்று நினைத்துவிட்டார். அதற்காகத்தான் ஐஸ்வர்யாவின் அபாண்ட செயலுக்கு தன் பாக்கெட்டிலிருந்து "ரெட் கார்ட்" எடுத்து காட்டி, தான் நியாயவாதி என்றும், சரியானவன் என்றும் காட்டிக் கொண்டு தப்பித்து கொண்டார். அத்துடன் "ஐஸ்வர்யா சேஃப்: என்று சொல்லிவிட்டார். ஒருபுறம் தன்மீது எந்த அபாண்டமும் வந்துவிடக்கூடாது என்றும் மற்றொரு புறம் வியாபாரம் அடுத்தடுத்து நடக்க ஐஸ்வர்யா வேண்டும் என்றும் கமல் செய்த ஸ்டார்டர்ஜி படுகேவலம்!!
களத்துக்கு வா
இதுபோன்ற குறைகளையெல்லாம் கழட்டிவிடாமல் விடாப்பிடியாக இந்த பிக்பாஸ் பிடித்துகொண்டுள்ளதால்தான், நிகழ்ச்சிக்கு மக்களின் ஓட்டு குறைவாக இருக்கிறது. ஆனால் அதை கமல் புரிந்துகொள்ளாமல், "ஏன் யாருமே ஓட்டு போட வரமாட்டேங்கறீங்க? என்னை மட்டும் களத்துக்கு வா...ன்னு சொல்றாங்க? ஆனா ஓட்டு போட யாருமே வரலைன்னா எப்படி" என்று சிலேடை பேச்சு வேறு. எப்படியோ, இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி யாராவது எழுப்பினாலும், சாமர்த்தியமாக பதில் சொல்லி அழகாக சமாளித்து விடுவார் கமல்!!
மக்கள் மாறிவிட்டார்களா?
எப்படியோ.... போன சீசனை விட ஒருவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் மனநிலை மக்களிடம் ஓரளவாவது குறைந்துள்ளது என்பதைதான் நேற்றைய பிக்பாஸ் ஓட்டுக்கள் அம்பலப்படுத்தியுள்ளன.