எங்கு பார்த்தாலும் சினிமா பெயர்.. டிவி சீரியல்களுக்கு வந்த சோகத்தைப் பாருங்க!
சென்னை: தமிழ் சீரியல்களுக்கு திரைப்படங்களின் பெயரை வைக்கும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது.
ஒரு காலத்தில் வயதானவர்களும் இல்லத்தரசிகளும் மட்டுமே பார்த்த சின்னத்திரை இன்று இளைஞர்களையும் தன்வசம் இழுத்துள்ளது. சீரியல் என்றாலே சன் டிவி என்ற நிலை மாறி, ஸ்டார் விஜய், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் சீரியல்களும் டிஆர்பி ரேஸில் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு வருகின்றன.
சினிமாவிலேயே லிவிங் டு கெதர் முறையை எடுக்க யோசித்த காலத்திலேயே, அதையே மூலக் கதையாக கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை சீரியல் மாபெரும் வெற்றி பெற்றது. அன்றிலிருந்து, வெற்றி பெற்ற படங்களின் பெயரை சுட்டும் வழக்கம் இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்த ட்ரெண்ட் அதிகமாகியுள்ளது. விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் 90% சதவீதம் சீரியல்களின் பெயர் திரைப்படங்களின் பெயரே. நாம் இருவர் நமக்கு இருவர், ராஜா ராணி, சின்னத்தம்பி,மவுன ராகம், சிவா மனசுல சக்தி, பாரதி கண்ணம்மா, அரண்மனை கிளி, கடைக்குட்டி சிங்கம் என எல்லாமே சினிமாவின் பெயர்கள் தான்
ஜீ தமிழிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். செம்பருத்தி, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், தேவதையை கண்டேன், மெல்ல திறந்தது கதவு, பூவே பூச்சூடவா, சத்யா என திரைப்பட பெயரை கொண்ட சீரியல்கள் ஏராளம்.
சன் டிவியை எடுத்துக் கொண்டால் ரோஜா, வள்ளி, மாயா, மின்னலே, பாமா ருக்மணி எனவும், ஜெயா டிவியிலும் கோபுரங்கள் சாய்வதில்லை, சுப்ரமணியபுரம் என திரைப்பட பெயர் கொண்ட சீரியல்கள் உள்ளன.
திரைப்படங்களுக்கு நிகராக பிரம்மாண்டம் காட்டத் தொடங்கியுள்ள சின்னத்திரை, டைட்டிலில் வித்தியாசம் காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .