இப்பத்தான் குழந்தைகள் ஞாபகம் வருதா பிக் பாஸ் சார்!
சென்னை: குழந்தைகளும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள், எனவே போட்டியாளர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளுங்கள் என்று கமல் நேற்று தெரிவித்துள்ளார்.
நல்ல விஷயம்தான். வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் எப்போது வந்து கமல் இதை சொல்கிறார் என்றுதான் லட்சம் கேள்வி எழுகிறது.
கெட்ட வார்த்தைகள்
இந்த நிகழ்ச்சி இப்போது முடியும் நிலையில் உள்ளது. டாஸ்க் என்ற பெயரில் பிக்பாஸ் செய்த வணிக தந்திரங்கள் நிறைந்த அக்கப்போர்கள் நடைபெற்றன. ஒருவரையொருர் தாக்கி கொண்டதாலும், கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசிக்கொண்டதாலும் தங்களுக்குள் இருந்த மிருக குணங்கள் சூழ்நிலை காரணமாக அவ்வப்போது வெளிப்பட்டும் சென்றன.
பீப் ப்ரோமாக்கள்
ஒவ்வொரு வாரமும் நடைபெற்ற சண்டைகள் என்னென்ன, ஸ்டார்ட்டர்ஜி என்ற பெயரில் நடத்திய சூதுவாதுகள் என்னென்ன, நாடே பார்க்கக்கூடிய வகையில் பிரபலங்களின் வாயில் வந்த பீப் வார்த்தைகள் என்னென்ன, முகபாவனைகள், செயல்பாடுகள் என்னென்ன, வசமாக மாட்டிக் கொண்டு விழிக்கும் வகையில் சொல்லி வந்த பொய்கள் என்னென்ன... இதெல்லாம் கமலுக்கு இவ்வளவு நாட்களும் தெரிந்த ஒன்றுதானே? இதற்கு ஒவ்வொரு வாரமும் காட்டப்படும் த்ரில்லர் மற்றும் பீப்கள் நிறைந்த ப்ரோமோக்களே சாட்சி. அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்கிறார்கள் என்று கமலுக்கு தெரியாதா?
எதிர்மறை கருத்துக்கள்
குழந்தைகள் உட்பட மக்களின் மனதை இந்நிகழ்ச்சி எதிர்மறையாகவே பாதித்துவிட்டது. ஐஸ்வர்யாவின் ராட்சச முகத்தை குழந்தைகள் மறப்பார்களா, பாலாஜி மீது குப்பை கொட்டியதை மறப்பார்களா, பொய்களை அப்பட்டமாக காட்டிய குறும்படங்களை மறப்பார்களா,? எப்போது இவையெல்லாம் மனதில் பசுமையாக பதிந்துவிட்டதோ அப்போதே குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சி எதிர்மறை கருத்துக்களை சரியாக கொண்டு போய் சேர்த்து விட்டது.
திருத்திய கமல்
எனவே கடைசி நேரத்தில் ஒப்புக்கு "குழந்தைகளும் இந்நிகழ்ச்சியை பார்க்கிறார்கள், எனவே போட்டியாளர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கமல் சொல்வதற்கான நேரம் காலம் இதுவல்ல!! என்றாலும், பாலாஜி உள்ளிட்ட நபர்களின் குறைகளை அவ்வப்போது தட்டிக் கொடுத்து, உரிமையுடன் தட்டியும் கேட்டு, திருத்துவதற்காக எடுத்த முயற்சிகளை மறுக்கவும் முடியாதுதான். என்றாலும் கமலுக்கு இப்போது கடைசி நேரத்தில் வந்திருக்கும் இந்த அக்கறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆரம்பத்திலே வந்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்.