ஆஹா.. கொரோனா வந்தாலும் வந்துச்சு.. சன் டிவியில் மதிய செய்தி ரிட்டர்ன்!
சென்னை: ரொம்ப வருடங்களுக்கு பிறகு சன் டிவியில் மீண்டும் மதியம் செய்திகள் என்று ஒளிபரப்பாக துவங்கி உள்ளன. மக்கள் என்னதான் பல செய்தி சானல்களில் செய்திகளை பார்த்து வந்தாலும், சன் செய்திகள் என்று வரும்போது அதற்கான வரவேற்பு இன்றும் இருக்கத்தான் செய்கிறது.
தூர்தர்ஷன் செய்திகளுக்குப் பிறகு சன் டிவி செய்திகளுக்குத்தான் மவுசு அதிகம் இருந்தது. காலை செய்திகளைப் பார்க்கத் தவறியோர் மதிய செய்திகளை காத்திருந்து பார்த்தனர்.
மதிய செய்திகளை காணத் தவறியோர் சரியாக இரவு 8 மணிக்கு செய்திகளை காண ஆவலுடன் சன் சானலை வைத்து காத்திருப்பர். இந்த நிலை மீண்டும் துவங்கி உள்ளது.
நேரத்தில் மாற்றம்
சன் நியூஸ் என்று செய்திகளுக்கு மட்டும் பிரத்யேக சானல் ஆரம்பித்த சன் நெட்வொர்க் சன் டிவியில் செய்திக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டது. செய்திகள் ஒளிபரப்பும் நேரத்தில் மாற்றமும், நாளைக்கு மூன்று முறை என்று இருந்த செய்திகளை மாலை ஒரு முறை என்று மட்டும் குறைத்துக்கொண்டு செய்தியை ஒளிபரப்பி வந்தது சன் டிவி.
கோவிட் 19 தொற்று
கோவிட் 19 தொற்று உலகமெங்கும் பரவி, லாக்டவுன் அமலில் இருக்கும் நேரத்தில் விழித்துக்கொண்ட சன் டிவி மீண்டும் பகலில் செய்திகளை ஒளிபரப்பத் துவங்கி இருக்கிறது. சீரியல்கள் மறு ஒளிபரப்பு, நடுவில் மதிய செய்திகள் என்று பிசியாக இருக்கிறது சன் டிவி.
தொகுப்பு செய்திகள்
நாளெல்லாம் செய்திகள் என்று செய்தி சானல்களில் அவ்வப்போது நியூஸ் பார்த்து உலக நடப்பு, நாட்டு நடப்புக்களை தெரிந்துக்கொண்டாலும், சன் டிவியின் செய்தி தொகுப்பு, நன்றாக இருப்பதாகவே வழக்கமாக சன் டிவி பார்க்கும் ரசிகர்கள் பலரும் சொல்கின்றனர்.
அனிதா ரசிகர்கள்
நியூஸ் ரீடர் அனிதா வசீகரமான அழகு செய்தி வாசிப்பாளராக சன் டிவியில் அவ்வப்போது செய்திகள் வசித்து வருபவர். இவர் சன் நியூஸ் சானலின் நியூஸ் ரீடர் என்றாலும், விஸிட்டர் செய்தி வாசிப்பாளராக ஒரு மாதத்தில் மூன்று முறை சன் டிவியில் செய்தி வாசிப்பார். சன் டிவி பகல் நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பி வருவதால், அடிக்கடி சன் டிவியில் அனிதாவை காணும் வாய்ப்பு அவரது ரசிகர்களுக்கு கிடைத்து இருக்கிறது.