2017லிலும் அடங்காத கொலைவெறியோடு அலையும் காயத்ரி...எப்படா முடியும்?
காயத்ரி என்ற அழகாக பெயரை அடங்காத கொலைவெறியோடு இருக்கும் காயத்ரிக்கு வைத்து விட்டார்காளே என்று கொந்தளிக்கின்றனர் டிவி சீரியல் ரசிகர்கள்.
சென்னை: தெய்வமகள் சீரியல் சன் டிவியில் 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. எப்படா முடிப்பீங்க என்று வாசகர்கள் தினசரி கேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலும் விடாமல் ஒளிபரப்பி வருகின்றனர்.
ஜெய்ஹிந்த் விலாஸ் முத்த மருமகள் காயத்ரிக்கும் அவரது கொழுந்தன் பிரகாஷ் இடையேயான மோதல்தான் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
சொத்துக்களை அடைய வில்லத்தனம் செய்யும் காயத்ரி பல கொலைகளை செய்து போலீஸ் போல வலம் வருவதுதான் பலரது காதுகளில் பூ சுற்றும் செயல். ஆனாலும் அசராமல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
போலீஸ் அதிகாரி
காயத்ரி மாயமான வழக்கை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி மந்த்ராவை கடத்தி அவரைப்போலவே ஆள்மாறாட்டம் செய்து நாடகமாடுகிறார் காயத்ரி. அதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
யாரையும் கொல்வேன்
தன்னை எதிர்க்கும் யாரையும் கொல்வேன் என்பது காயத்ரியின் வசனம். இது காடு... இங்க ஜெயிக்கிறவன்தான் வாழ முடியும். நான் ஜெயிக்க எல்லாரையும் கொல்வேன். அது தங்கையாக இருந்தாலும் என்று சொல்கிறார் காயத்ரி.
கொன்று புதைக்கும் காயத்ரி
மந்த்ராவை கடத்திய காயத்ரி, ஐஏஎஸ் அதிகாரியான அவரது கணவரை கொல்கிறார். மந்த்ராவின் தலையில் கல்லைப்போட்டு கொன்று அந்த பழியை பிரகாஷ் மீது போடுகிறார். மந்த்ரா உயிரிழக்கும் போது காயத்ரி என்று கத்திக்கொண்டே சாகிறார். இதை கேட்ட போலீஸ் யாரையும் எதற்காகவும் சந்தேகப்படவில்லை.
காயத்ரிக்கு உதவும் நபர்கள்
காயத்ரிக்கு உதவிய நம்பி, மத்திய அமைச்சர், எம்எல்ஏ என அனைவருக்குமே குழி தோண்டிய காயத்ரி தன்னைப்பற்றி உண்மை தெரிந்த லிங்கத்தையும் போட்டுத்தள்ள திட்டம் போடுகிறாள். லிங்கம் மனம் திருந்தியிருப்பதால் எப்படியும் தனக்கு ஆபத்துதான் என்பது காயத்ரியின் எண்ணம்.
தங்கையின் அசிங்க பேச்சு
கொலைவெறி காயத்ரியின் தங்கை வினோதினியின் நாசமா போறவளே வார்த்தை கேட்கவே நாராசமாக இருக்கிறது. மூதேவி... சின்ன தொடப்பக்கட்ட என்றெல்லாம் திட்டு வாங்கினாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தினசரியும் திட்டு தொடர்கிறது.
எப்படா முடிப்பீங்க
கடந்த 4 ஆண்டுகளாகவே காயத்ரியின் வில்லத்தனங்களையும், காதில் பூ சுற்றும் கதையையும் பார்த்து வெறுத்து போயுள்ளனர். இந்த முட்டாள்தனமான சீரியலை சீக்கிரம் முடிங்கப்பா என்கின்றனர் வாசகர்கள். ஆனால் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் இதை கண்டு கொள்வதாக இல்லை. 2017 ஆம் ஆண்டிலாவது முடிப்பீங்களா என்று கேட்கின்றனர் வாசகர்கள்.