அன்றைய தூர்தர்ஷன் பாணி நாடகங்கள்....!
சென்னை: தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத காலக்கட்டங்களில் மக்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நன்றாகத்தான் கொடுத்து வந்து இருக்கிறது.
தனியார் தொலைக்காட்சிகள் வந்த போதிலும் தூர்தர்ஷன் பாணியில் சீரியல்களை கொடுத்து வந்த தொலைக் காட்சிகள் இப்போதுதான் மக்களை முட்டாளாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
கதையை தெளிவாக சொல்லிவிட வேண்டும்.. தேவை இல்லாத இழுவை காட்சிகள் கூடாது. கதையில் பேச்சுக்கு கூட வன்முறை இருக்க கூடாது.. இதுதான் தூர்தர்ஷன் ஃபார்முலா.
தூர்தர்ஷன் டெக்னீஷியன்ஸ்
தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு வெளியில் இருந்து ஸ்க்ரிப்ட் மட்டும்தான் எடுத்துக்கொள்வார்கள். மற்றபடி டெக்னீஷியன்ஸ் அங்கு வேலை பார்ப்பவர்கள்தான். லேட்டஸ்ட் கேமிராக்கள் அதை கையாளும் கேமிரா மேன்கள் காட்சிக்கு ஏற்ப லைட்டிங் வைப்பதில் கைத்தேர்ந்தவர்கள்.
நாயகி சீரியல்
சன் டிவியின் நாயகி சீரியல் எப்போதும் ரேட்டிங்கில் நம்பர் ஒன் என்று சொல்கிறார்கள். கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் இல்லை என்பதால் மறுபடியும் குறிப்பிட்ட எபிசோடில் இருந்து நாயகி சீரியலை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது சன் டிவி.
இரவு விடியற்காலை
இரவு என்று வீட்டினுள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், வெளியில் ஜன்னல் வழியாக வெயில் கொளுத்தி எடுக்கிறது. விடியற்காலை 4 மணி என்று வீட்டில் உட்கார்ந்து பேசுகிறார்கள்.அப்போதும் ஜன்னல் வழியாக காலை 10 மணி வெயில் பளிச்சென்று தெரிகிறது.
முட்டாள் ஆக்குகிறீர்களா?
இப்படி நிகழ்வுகள் நடப்பது ஒரு நேரம், நீங்கள் அதை சட்டை செய்யாமல் ஷூட்டிங் எடுப்பது ஒரு நேரம் என்று கொஞ்சமும் டெடிகேஷன் இல்லாமல் வேலை பார்க்கிறீர்களே...மக்களை முட்டாள் என்று நினைத்து கண்ட மேனிக்கு சீரியல் எடுக்கிறீர்களா?
மெகா சீரியல் முட்டாள்தனம்
லாக்டவுனுக்கு பிறகாவது மெகா சீரியல் முட்டாள்தனத்தை மக்களிடம் திணிக்காமல் இருக்க வேண்டும் தனியார் டிவி சானல்கள். அப்படியே கொடுத்தாலும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். தேவை இல்லாத காட்சிகள் இழுவை, க்ளோசப் ஷாட்ஸ் வைத்து காட்சிகளை இழுப்பது. அடிக்கடி ஃபிளாஷ்பேக் காட்சிகள் வைத்து அரைத்த மாவை அரைப்பது என்று இருக்காமல் தூர்தர்ஷன் பாணி சீரியல்களை கொடுங்கள். கிரியேட்டிவிட்டு இல்லாமல் மக்களை முட்டாளாக்கி மெகா சீரியலை இழுத்து விடலாம் என்று நீங்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடாதீர்கள்!