ஷாலினி தாலியை தொங்கவிட்டா ரசிக்கறோம்.. ஒரு பொண்ணு புருஷன் கூட இருந்துகிட்டு போடலைன்னா கேலி பண்றோம்
சென்னை: ஈரமான ரோஜாவே சீரியல் விஜய் டிவில பாப்புலர். இந்த சீரியல் கதாநாயகி மலர் ஏன் புருஷன் கூட வாழ்ந்துகிட்டே தாலி போடலை? இதுதான் இன்றைய செய்தியின் முக்கிய அம்சம்.
அலைபாயுதே படத்துல நடிகை ஷாலினி தாலியை ஆணியில் காலண்டர் மாதிரி தொங்கவிட்டதை ரசிக்கற நாமதான், ஒரு பொண்ணு புருஷன் கூட இருந்துகிட்டு தாலி போடலைன்னா எகத்தாளம் பேசறோம்.
மலரும், வெற்றியும் வண்டியில வரும்போது, செயின் திருடன் தாலி செயினை அத்துடறான். மலருக்கு கழுத்துல பயங்கரமான காயம். பெரிய பிளாஸ்டர் போட்டுக்கிட்டு இருக்கு பாவம் அந்த பொண்ணு.
திருடர்கள் கவனத்திற்கு
திருடர்களே.. நீங்க பாட்டுக்கு செயினை அத்துக்கிட்டுப் போயிடறீங்க. வீட்ல மலர் அனுபவிக்கற கொடுமையைக் கேளுங்க. செயின்ல கோர்த்த தாலிதான் போயிருச்சேன்னு, மஞ்சள் கயித்துல தாலி போட்டுக்கலாம்னா, நல்ல நாள் பார்க்காம போட்டுக்கறதான்னு மாமியார் திட்டறாங்க.
தாலி இல்லை
சரி விளக்காவது ஏத்தலாமேன்னு போனா, செவ்வாய் கிழமை தாலி இல்லாம விளக்கு ஏத்த கூடாதாம். மாமியார் கட்டளை போட, மலர் அழுதுகொண்டே பூஜை அறையை விட்டு வெளியேறுகிறார்.
கலகக்காரி
குடிக்க தண்ணீர் எடுக்க மலர் பாட்டிலுடன் வர, நாத்தனார் கலகத்தை துவக்குகிறார். சித்தி, கழுத்துல தாலி இல்லாதவங்களை என்னன்னு சொல்லி அழைப்பாங்க? என்று அடுப்பை மூட்டுகிறார். புகைய ஆரம்பிக்கிறது.
இப்படியிப்படி...
கல்யாணம் ஆகாம தாலி போடலைன்னா குமாரின்னும், புருஷனை விட்டு பிரிஞ்சு தாலி போடலைன்னா வாழாவெட்டின்னும் சொல்லுவாங்க. புருஷன் செத்து தாலி போடலைன்னா விதவைன்னு சொல்லுவாங்க.
தாலி இல்லை...
அப்புறம் வைக்கிறாங்க பாருங்க ஒரு குட்டு.. ஆமாம் சித்தி புருஷன் கூடவே வாழ்ந்துகிட்டு தாலி போடலைன்னா? மூணு விதமா சொல்லலாம்... தரித்திரம் புடிச்சவ... வெளங்காதவ ..மொத்தத்துல இது மாதிரி பொம்பளைங்களைப் பார்த்துட்டுப் போனா எந்த காரியமும் உருப்படாது... அதனால உருப்படாதவன்னு சொல்லலாம்டி...
இன்னும் இருக்கு
இதே போல மலருக்கு கோயிலிலும் கொடுமை நடக்குது. கழுத்துல இருந்த தாலிச் செயினை திருடன் அத்துகிட்டு போயிட்டான். நல்ல நாள் பார்த்துதான் மஞ்சள் கயிறு தாலியும் போடணுமாம். அதுக்குள்ளே இவ்ளோ கொடுமை நடக்குது பொண்ணுக்கு. சாஸ்திரம்,சடங்குன்னு சொல்லியே கொடுமைப்படுத்தற மாமியார், கலகம் செய்யும் நாத்தனார்னு இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா, அன்பு காட்டும் புருஷன் இருக்கறதுனால அந்த பொண்ணு பொறுமையா இருக்கா.
காட்சி மாறவில்லை
பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு சொல்றது உண்மைதான். அதுக்குத்தான் பெண்களை படிக்க வைக்கணும்னு, நாலு இடங்களுக்கு வேலைக்கு அனுப்பி சுதந்திரமா நல்லதை கத்துக்க விடணும்னு சொல்றது. தாலி சம்பிரதாயம்தான்... அதுவே வாழ்க்கையில்லை. தாலியும், மெட்டியும் கல்யாணம் ஆனதற்கான அடையாளம்தானே தவிர, அதுலதான் ஒரு பெண்ணின் முழுமையான வாழ்க்கை அடங்கி இருக்குன்னு அர்த்தமில்லை. பெண்களே பெண்களுக்கு எப்போதான் சப்போர்ட் பண்ணுவீங்க?
யார் மனதிலும் ஈரமில்லை...
ஒரு சீரியலில் நடந்ததை வச்சா இவ்ளோ பேச்சான்னு நினைக்கலாம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மாமியார் கொடுமை, புருஷன் கொடுமைன்னு இன்னும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. எதுல நல்லது இருக்கோ, அதை எடுத்துக்க நமக்கு என்ன தயக்கம்? ஈரமான ரோஜாவே.. பெயரில்தான் ஈரம் இருக்கு.. பட் சீரியலில் வரும் யாருடைய மனதிலும் இல்லையேப்பா.