ரகசியம் முக்கியம்.. ‘கைதட்ட’ தனி குரூப் ரெடி செய்து வைத்துள்ள பெரியவீட்டு டீம்!
பெரிய வீட்டு நிகழ்ச்சிக்காக தயாரிப்புக் குழு புத்திசாலித்தனமான யுக்தியைக் கையாண்டு வருகிறார்கள்.
சென்னை: தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பெரிய வீட்டு நிகழ்ச்சியில் ரகசியங்கள் வெளியே கசிந்துவிடாமல் இருக்க தயாரிப்புக் குழு புத்திசாலித்தனமான காரியம் ஒன்றை செய்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது.
அதாகப்பட்டது, கடந்தமுறை பெரிய வீடு நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து, முடியும் வரை ஊரெங்கும் அதைப் பத்தித் தான் பேச்சு. யார் எதைப் பேசினால், கடைசியில் பேச்சு செல்வதென்னவோ அந்த நிகழ்ச்சி பற்றியதாகத் தான் இருந்தது.
இந்நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி மீண்டும் தொடங்க இருக்கிறது. எனவே, இனிவரும் 100 நாட்களுக்கு, அவ்வீட்டில் வாழ்வோரின் பிரச்சினைகளை தங்கள் பிரச்சினையாகவே மக்கள் பாவித்துக் கொண்டு பேச ஆரம்பித்து விடுவர்.
சரி விசயத்துக்கு வருவோம்.. இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் நடுநாயகமான தலைவர் தோன்றி பேசுவார். அப்போது முப்பதுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்திருப்பர். ஆனால், நிஜத்தில் அவர்கள் தாமாக அதில் பங்கேற்க வந்த பொதுமக்கள் கிடையாதாம். தயாரிப்புக் குழுவே இதற்கென தேர்வு செய்து அவர்களை மட்டுமே அழைத்து வந்து அரங்கை நிறைப்பார்களாம்.
ஏனெனில் படப்பிடிப்பு முந்தைய நாளே செய்யப்பட்டு, நிகழ்ச்சி மறுநாள் இரவு தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். எனவே, படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் யாரும், நிகழ்ச்சியின் அன்றைய வார ரகசியத்தை உடைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடாம்.
முன்னதாகவே இது தான் நடக்கப் போகிறது என தெரிந்து விட்டால், மக்களுக்கு நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யம் கெட்டு விடும் என முன்னேற்பாடாக இந்த கூட்டத்தை தயார் செய்து வைத்துள்ளதாம் தயாரிப்புக் குழு.
யோசன மஞ்சி வாண்டு தான்...!