டிடி பொதிகையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காண்போம் கற்போம்!
சென்னை: கோவிட் 19 தொற்று லாக்டவுன் தொடர்ந்து அமலில் இருப்பதால் நடக்க இருந்த 10ம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், டிடி பொதிகை தொலைக்காட்சியில் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை 10ம் வகுப்புக்கான பாடங்கள் காண்போம் கற்போம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்று முதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தமிழக பொதிகை சானல், 10ம் வகுப்பு தேர்வுக்கான பாடங்களை கற்பித்து வருகிறது. மாணவர்கள் தங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருப்பதாக கூறுகின்றனர்.
மாணவர்களுக்கு மன அழுத்தம்
கொரோனா...கொரோனா என்கிற பீதியின் காரணமாக மாணவர்கள் லாக்டவுன் நேரத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இத்தோடு தங்களது 10ம் வகுப்பு தேர்வு குறித்தும் எப்போது நடக்குமோ...படித்தது மறந்து போகுமோ என்கிற எண்ணத்திலேயே அவர்களுக்கு மன உளைச்சல் வந்துவிடும் என்று அரசியல் தலைவர்கள் சுட்டிக் காண்பித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தமிழக அரசு அறிக்கை
ஆரம்பத்தில் 10ம் வகுப்பு தேர்வு குறித்து எதுவும் அறிவிக்காமல் இருந்து வந்த தமிழக அரசு, 9ம் வகுப்பு வரையான மாணவர்களின் தேர்வு ரத்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்று மட்டும் அறிவித்தது.பின்னர் 10ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று மட்டும் அரசு அறிவித்து இருந்தது.
தொடரும் லாக்டவுன்
இந்த நேரத்தில்தான் மத்திய அரசு லாக்டவுன் மே மாதம் வரை தொடரும் என்று அறிவித்தது. அதன்படி இப்போது லாக்டவுன் அமலில் இருக்க 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பாடங்களை டிடி பொதிகை சானல் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பி வருகிறது.
|
காண்போம் கற்போம்
காண்போம் கற்போம் என்கிற முறையில்,முதல் நாள் தமிழ் அடுத்து ஆங்கிலம், அடுத்த நாள் கணிதம் என்கிற வரையறை வகுத்துக்கொண்டு படம் நடத்த துவங்கி இருக்கிறது. இன்று காண்போம் கற்போம் நிகழ்ச்சியில் கணிதம் கற்பிக்கிறார்கள்.