Comali film: வர வர இந்த ஆதவன் ரொம்ப மொக்கையா இருக்காரே... ஏன்
சென்னை: காம்பியர் என்றால் அடுத்தவர்களுக்கு போர் அடிக்கும் அளவுக்கு பேசிட்டே இருக்கக் கூடாது. அதேபோல நமது செய்கைகளும் கூட லிமிட்டிலேயே இருக்க வேண்டும். சிரிக்க வைக்கலாமே தவிர சிரிக்க வைக்காமல் விட மாட்டேன் என்று பிடிவாதமாக போட்டு பிளேடு போடக் கூடாது.
நம்ம சன் டிவி ஆதவனைப் பார்த்தால் சில நேரங்களில் ரொம்ப மொக்கையா பேசுறாரே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. காரணம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை விட இவர்தான் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்.
மதுரை முத்துவுடன் சேர்ந்து இவர் பங்கேற்கும் காமெடி கலாட்டா நிகழ்ச்சியிலும் இப்படித்தான். இவர்களே அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்கள். பங்கேற்போர் வெறுமனே விழித்தபடி நிற்கும் நிலையும் காணப்படும்.
சிறப்பு நிகழ்ச்சி
நேற்று கூட சுதந்திர தினத்தையொட்டி கோமாளி படக் குழுவினருடன் ஒரு சந்திப்பு நடந்தது. ஹாய் ரவி ஹலோ காஜல் என்ற பெயரில். காஜல் அகர்வால் அப்போதுதான் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்த பாதுஷா மாதிரி அவ்வளோ அழகா இருந்தார். ரவியும் செம ஹேன்ட்சம். அதேபோல பொன்னம்பலம் உள்ளிட்ட படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.
சேட்டைகள் கேள்விகள்
விஷயம் என்னவென்றால் ஆதவனும், காம்பியரும் கேட்ட கேள்விகள், செய்த சேட்டைகளுக்கு ரவியும், காஜலும் நன்றாகவே ரியாக்ட் செய்தனர். கோலி விளையாடுதல், கில்லி விளையாடுதல், லவ் புரபோசல் என எல்லாவற்றிலும் காஜல் கலக்கினார். அத்தனை பாந்தமாக அவர் பேசியது கவரும் வகையில் இருந்தது.
அறுவை ஆதவன்
ஆனால் ஆதவன்தான் செமையாக அறுத்து விட்டார். வளவளா பேச்சு சில நேரங்களில் போதும் சாமி வாயை செத்த மூடுங்கோ என்று சொல்ல வேண்டும் போலத் தோன்றியது. அவரது சவுண்டுதான் ஜாஸ்தியாக இருந்தது. இதுபோன்ற சமயங்களில் கெஸ்ட்டுகளிடம் நல்ல நல்ல கேள்விகள் கேட்டு நிறைய மேட்டர்களை கறக்கலாம்.
மெனக்கெடல் முழுவதும்
ஆனால் காஜலிடம் தகவல்களைக் கேட்டுப் பெறுவதை விட அவரை சிரிக்க வைத்து இம்பரஸ் செய்வதில்தான் ஆதவன் நிறைய மெனக்கெட்டது போல இருந்தது. ஹீரோ ஜெயம் ரவியே நினைத்திருப்பார்.. ஆட ஆதவா.. இதெல்லாம் உனக்கு ஓவரா இல்லையான்னு.. அத்தனை ஜொள்ளு.. தரையே வழுக்கியிருக்கும்.