Serial Shooting: கொஞ்சம் சமூக இடைவெளியை கடைப்பிடிச்சிருக்கலாம்!
சென்னை: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த குஷ்பூ, சுஜாதா விஜயகுமார் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இருவரும் நெருக்கமாக நின்றுகொண்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செய்தியாளர்களை சந்தித்தனர்.
தொலைக்காட்சி சீரியல்கள் தயாரிப்பில் இருக்கும் குஷ்பூ, சுஜாதா விஜயகுமார் இருவரும், லாக்டவுனுக்குப் பிறகு ஷூட்டிங் நடத்த அனுமதி வேண்டும் என்று, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து கோரிக்கை வைத்ததாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
அப்போது குஷ்பூ, சுஜாதா விஜயகுமார் இருவரும் நெருக்கமாக நின்று இருந்தனர். ஒருவரை ஒருவர் உரசியபடி நின்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செய்தியாளர்களை சந்தித்தனர்.
படப்பிடிப்பு அனுமதி
சின்னத்திரைக்கு சீரியல்கள் ஷூட்டிங் நடத்த, லாக் டவுனுக்குப் பிறகு அனுமதி அளிக்க வேண்டும் என்று நடிகை மற்றும் தயாரிப்பாளர் குஷ்பூ, சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இருவரும் அமைச்சரை சந்தித்தனர். அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பின்னர் செய்தியாளர்களை இருவரும் சேர்ந்து சந்தித்தனர்.
தற்கொலைக்கு தூண்டுதல்
சுஜாதா விஜயகுமார் பேசுகையில், சீரியல் நடிகர்கள் ஷூட்டிங் இல்லாத நிலையில், வருவாய் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், சிலர் தனது வீட்டுக்கே வந்து, ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.. தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் வருகிறது என்று கூறியதாகவும் சொன்னார். இதானால், லாக்டவுன் முடிந்தவுடன் ஷூட்டிங் செய்ய அனுமதி கேட்டு வந்ததாகவும் கூறினார். இவரது தயாரிப்பில்தான் சன் டிவியில் கண்மணி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
40 பேரை வைத்து
லாக்டவுன் முடிந்த பிறகு ஷூட்டிங் செய்யலாம் என்று இப்போதே அனுமதி அளித்து, விதிமுறைகளை கூறினால்தான் நாங்கள் தயாராக இருக்க முடியும். ஒரு 40 பேரை வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்தலாம் என்று இப்படி கட்டுப்பாட்டுகள் விதித்து ஷூட்டிங் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறோம் என்று குஷ்பூ சொன்னார்.
குறைந்த பேர்
இன்று மாலை தமிழக அமைச்சரவையில் கலந்துக்கொண்டு அனுமதி அளிப்பது குறித்து தகவல் அளிப்பதாக அமைச்சர் கூறி இருக்கார் என்று குஷ்பூ சொன்னார். குறைந்த பேரை வைத்து ஷூட்டிங் நடத்தினாலும், சமூக இடைவெளி, முகத்தில் மாஸ்க் அணிந்துக்கொண்டு கவனமாக ஷூட்டிங் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இல்லை என்றால், கொரோனா தொற்று அபாயம்தான் ஏற்படும்.