Ramayanam:லாக்டவுன்... மக்களின் கோரிக்கைக்கு இணங்க மீண்டும் ராமாயணம்!
டெல்லி: கோவிட் 19-லாக்டவுன் அமலில் உள்ள நேரத்தில் மக்களின் கோரிக்கைக்கு இணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மீண்டும் இன்று முதல் ராமாயணம் இதிகாசத் தொடரை ஒளிபரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்கள் கோரிக்கையின் பேரில், 'ராமாயணத்தை சனிக்கிழமை முதல் டி.டி. நேஷனலில் ஒளிபரப்ப உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி ராமாயணம் இதிகாச தொடர் இன்று முதல் மீண்டும் ஒளிபரப்பாகும்.ஒளிபரப்பாகும் நேரமும் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
காலை மாலை
இன்று முதல் காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை ஒரு அத்தியாயம் என்றால் அதே அத்தியாயத்தின் மறு ஒளிபரப்பு இரவு இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.இன்று முதல் காலை இரவு என்று தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் ராமாயணத்தை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
அதிக பொருட் செலவு
தூர்தர்ஷனில் அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இதிகாச தொடர்களில் ராமாயணம், மகாபாரதம் போன்றவை மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட தொடர்கள். இந்த தொடர்களை சனி அல்லது ஞாயிறு என்று பிரத்யேக தினங்களில் மட்டுமே ஒளிபரப்பு செய்து வந்தது டிடி நேஷனல் சானல்.
வட மாநிலங்களில் மக்கள்
இந்த இதிகாச தொடர்கள் இந்தி மொழியில் ஒளிபரப்பப் பட்டு வந்ததால், வட மாநிலங்களில் மக்கள் சீரியல் ஒளிபரப்பாகும் நேரங்களில் எந்த வேலையும் செய்யாமல் தொடர்களை விரும்பிப் பார்த்து வந்தனர். சாலைகளில் போவோர் வருவோர் கூட டீக்கடை, பீடா கடை... இவ்வளவு ஏன் பேருந்து நிலையங்களில் கூட கூட்டம் கூட்டமாக நின்று பார்த்து ரசித்து வந்தனர்.பேருந்து ஓட்டுநர், நடத்துனர் கூட இந்த தொடரை விரும்பி பார்த்து பேருந்துகளை தாமதமாக இயக்கிய காலங்களும் உண்டு.
|
இந்தி மொழி என்றாலும்
என்னதான் இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இதிகாச தொடர் என்றாலும் அனைத்து மாநில மொழி மக்களும், நமது தமிழ் நாட்டு மக்களும் கூட டிடி நேஷனலில் ஒளிபரப்பாகி வந்த ராமாயணம் மகாபாரதத் தொடரை விரும்பி பார்த்து மகிழ்ந்து வந்தனர். இந்தியா முழுவதிலும் ராமாயணம் இதிகாச தொடருக்கு கிடைத்த வரவேற்பு இப்போதும் கிடைக்கும் என்றே டிடி நேஷனல் சானல் நம்புகிறது.