அதைத் தவிர வேற எதுவும் தெரியாதே.. என்ன செய்யப் போறோம்.. கலங்கும் சின்னத்திரை கலைஞர்கள்
டிவி சீரியல் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் சின்னத்திரை உலகமே கலங்கித்தான் போயுள்ளது, வேறு என்ன செய்வது டிவி சீரியல் நடிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாதே? லாக்டவுன் காலத்திற்கு பிறகு என்ன செய்வது என்ற
சென்னை: லாக் டவுன் எல்லா துறைகளையும் முடக்கிப்போட்டு விட்டது. கலைத்துறையினர் பாடு படு திண்டாட்டமாகி விட்டது. கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் கலைஞர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா, சின்னத்திரை நடிகர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். டிவி சீரியலை மட்டுமே நம்பியிருக்கும் தங்களின் கதி என்னவாகும் என்பதே சின்னத்திரை கலைஞர்களின் கவலை
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் சீரியல் பக்கத்தில் இருந்து தங்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட்டனர். அலுவலகத்திற்கு போய் வந்தவர்கள் வீட்டில் ஒர்க் ப்ரம் ஹோம் செய்ய ஆரம்பித்து விட்டனர். நூறு நாள் வேலைக்கு போய் வந்தவர்கள் கூட வேறு வேலையை வீட்டில் இருந்தே செய்ய தொடங்கி விட்டனர். ஓய்வே இல்லாமல் பட்டாசு, தீப்பெட்டி தொழில் செய்தவர்கள் இந்த லாக் டவுன் காலத்தில் கொஞ்சமாவது ரெஸ்ட் எடுக்கலாம் என்று ஓய்வில் இருக்கிறார்கள். சில மாதங்களில் சரியாகி விடும் மீண்டும் பட்டாசு ஆலை இயங்க ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த லாக் டவுன் காலத்தில் கூலித்தொழிலாளர்கள், தையல் கலைஞர்கள், விவசாயிகள் என பலரும் வறுமையில் வாடினாலும் லாக் டவுனுக்கு பிறகான காலத்தில் இழந்ததை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் காரணம் அவர்கள் பலமுறை இதுபோன்ற சோதனைகளை சந்தித்தவர்கள் ஆனால் சின்னத்திரை, சினிமா கலைஞர்கள் புகழ் வெளிச்சத்தில் இருந்தவர்கள். பகல் இரவு பாராமல் பல சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த லாக் டவுன் காலம் மிகப்பெரிய ஓய்வு காலம்தான். சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்து குடும்பத்தை காப்பாற்றி வந்த பல சின்னத்திரை கலைஞர்களின் பாடுதான் படு திண்டாட்டமாக உள்ளது.
டிவி சீரியல் சூட்டிங்
டிவி சீரியலை வைத்தும் அதில் வரும் விளம்பர வருமானத்தை வைத்துமே பல சேனல்கள் வருமானம் பார்த்து வருகின்றன. நடிகர்கள் மட்டுமல்லாது, டப்பிங் கலைஞர்கள், எடிட்டிங் துறை, கேட்டரிங் துறை உள்பட பல துறையினரின் வாழ்க்கை டிவி சீரியல்களை நம்பி சுழல்கிறது. எல்லோருடைய வாழ்க்கையும் முடக்கிப் போட்டு விட்டது கொரோனா லாக் டவுன் காலம்.
சென்னையில் சூட்டிங்
பெரும்பாலான சீரியல்கள் எல்லாமே பெரிய வீடுகளில் வைத்தே சூட்டிங் முடிந்து விடும். இதற்காகவே பல வீடுகளை சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் வாடகைக்கு விட்டுள்ளனர். இரவு பகல் பாராமல் சென்னையில் பல வீடுகளில் சீரியல் சூட்டிங்குகள் நடந்து கொண்டிருக்கும். இப்பொழுது எந்த வீடுகளிலும் சூட்டிங் இல்லாமல் காற்றாடிக்கொண்டிருக்கிறது.
வாழ்க்கையே முடங்கிப்போச்சே
சீரியல் சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டதால் வாழ்க்கை முடங்கிக்போய்விட்டதாகவே கவலைப்படுகின்றனர் பல சீரியல் நடிகர்கள். ஏற்கனவே டப்பிங் சீரியல்களின் ஆதிக்கத்தினால் பலருக்கு வாய்ப்பு குறைந்து போன நிலையில் லாக் டவுன் காலம் வேலையிழப்பை ஏற்படுத்தி விட்டதுதான் சோகம். லாக் டவுன் நீடிக்கும் பட்சத்தில் என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கி விட்டனர்.
வருமானத்திற்கு என்ன செய்வது
ஒரு எபிசோடுக்கு 1 லட்சம், 50 ஆயிரம், 25ஆயிரம் வாங்கிய நடிகர்கள், நடிகையர்களுக்கு கவலையில்லை. சில மாதங்கள் தாக்குபிடிப்பார்கள். ஆனால் ஒரு சீரியலில் சில எபிசோடுகள் மட்டுமே நடிக்கும் சிறிய நடிகர்களின் பாடுதான் படுசிரமம். ஒரு சீரியலில் கமிட் ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு கவலையில்லாமல் இருக்கலாம் ஆனால் அது பெரிய நடிகர்களுக்குத்தான். சின்ன நடிகர்கள், நடிகையர்களின் பாடு படு கஷ்டம்தான் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். வேறு வேலை எதுவும் தெரியாத தங்களுக்கு லாக் டவுனுக்கு பிறகு வாழ்வாதாரத்தை எப்ப நடத்துவது என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.