Pandian Stores Serial: இவுக பாட்டுக்கு எதையாவது சொல்லிடறாக.. அது மனசுல ஒட்டிக்குது!
சென்னை: விஜய் டிவியில் முல்லையின் மனதிலும், முகத்திலும் காதல் பெருக்கெடுத்து ஓடுவது, பார்ப்பவர்களையும் சிலிர்க்க வைக்கிறது. கதிர் எதையாவது பேசிவிட்டுப் போக..அதில் லயித்து திளைக்கும் முல்லையின் காதல்தாங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஹைலைட்!
கதிராக நடிக்கும் குமரன் அளவாக நடிக்கிறார்.. அமைதியாக கேரக்டருக்கு ஏத்த மாதிரி பேசுவதும், அண்ணன்களிடம் மரியாதையாக இருப்பதும் என்று கச்சிதமான நடிப்பு.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒவ்வொருவராலும் ஒவ்வொரு முறை என்று களைக்கட்டினாலும், முல்லை, கதிர் காதலுக்கு எதுவும் நிகரில்லை போலிருக்கிறது.
போட்டோ லேமினேஷன்
முல்லை போட்டோவை லேமினேஷன் போட ஸ்டடூடியோவுக்கு போகிறான் கதிர். கூடவே கடைக்குட்டி கண்ணனும் வந்து கதிர் போட்டோவில் லயித்து இருப்பதை பார்த்து கிண்டல் செய்கிறான். உயிரை எடுக்காத... உன் வேலைதான் முடிஞ்சு போச்சு இல்லே போடான்னு கதிர் சொல்ல, முடியாது இங்கேதான் இருப்பேன்னு அவன் பிடிவாதம் பிடிப்பது என்று கடைக்குட்டிக்கே உரித்தான குறும்பையும் நன்றாக காண்பித்து இருக்கிறார்கள்.
ஆசை ஆசையா
ஆசை ஆசையா போட்டோவை எடுத்துக்கிட்டு வர்றான் கதிர். முல்லை அந்த போட்டோவை கண்டு கொண்டது மாதிரி தெரியவில்லை.. முல்லை வெறிச்சு பார்த்து உட்கார்ந்து இருக்கிறாள். பிறகு வந்துட்டியளா.. வாங்கன்னு சொல்லும்போதும் அந்த போட்டோவை பார்க்கலை முல்லை. கதிர் அவளை சாப்டியான்னு கேட்கிறான். இல்லிங்களே... வீட்டில் யாருமே சாப்பிடலைன்னு சொல்றா.
எல்லாரையும்விட நீதான்
ஏன் சாப்பிடலைன்னு கதிர் கேட்க, மீனா அவுக அப்பா வந்தாதான் சாப்பிடுவேன்னு பிடிவாதமா சாப்பிடாம இருக்காகன்னு சொல்றா. எல்லாரையும் சாப்பிட சொல்லி நீயும் சாப்பிட வேண்டியதுதானேன்னு சொல்றான். யாருமே சாப்பிடலே.. நான் மட்டும் எப்படிங்க சாப்பிடறதுன்னு சொல்றா முல்லை. எல்லாரும் முக்கியம்தான்.. எல்லாரையும் விட நீ முக்கியம்னு சொல்றான் கதிர்.
காதல் பரவசம்
ஒரு கூடைப்பூவை முகத்தில் கொட்டின மலர்ச்சி முல்லையின் முகத்தில், காதல் மனதில் பொங்க, முகத்தில் அதன் தாக்கம் தெரிய உணர்ச்சிப் பெருக்குடன், இவுக பாட்டுக்கு மனசில் பட்டதை சொல்லிட்டு போயிடறாக.. அது அப்படியே மனசில ஒட்டிக்கிட்டு நிக்குது. பெரிய ஆள்தான இவுகன்னு சொல்லி சிலிரித்துப் போய் அமர்ந்திருக்கிறாள். அவன் தான் கொண்டு வந்த போட்டோவை எடுத்து சுவற்றில் சாய்த்து வச்சுட்டு, இது இவ கண்ணுல படவே இல்லையேன்னு சொல்லிக்கறான். இப்படித் தொட்டும் தொடாத.. பட்டும் படாத முல்லை கதிரின் காதல் பரவசத்துக்கு பஞ்சம் இல்லாமல் போகுது.